துரோலாக்

ஆள்கூறுகள்: 3°53′N 101°23′E / 3.883°N 101.383°E / 3.883; 101.383
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரோலாக்
Trolak
特罗拉克
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1890
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mdtapah.gov.my/

துரோலாக் (Trolak) நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், பத்தாங் பாடாங் மாவட்டத்தில், சுங்கை துணை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம். ஈப்போ, கோலாலம்பூர் மாநகரங்களுக்கு இடையில், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது. பழைய நெடுஞ்சாலை வழியாகவும் இந்த நகரத்தைச் சென்று அடையலாம்.[1]

துரோலாக் நகரத்திற்கு வடக்கே சுங்கை, பீக்காம் நகரங்கள். தெற்கே சிலிம் ரீவர், தஞ்சோங் மாலிம் நகரங்கள். ஈப்போ மாநகரத்தில் இருந்து 97 கி.மீ.; தஞ்சோங் மாலிம் நகரத்தில் இருந்து 55 கி.மீ.; தொலைவில் துரோலாக் நகரம் அமைந்து உள்ளது.

மலாய் மொழியில் பெக்கான் துரோலாக் என்று அழைக்கிறார்கள். இந்த நகரத்தைச் சுற்றியுள்ள இடங்களைத் துரோலாக் கிராமம் என்றும் அழைக்கிறார்கள்.

பொது[தொகு]

துரோலாக் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அதாவது வடக்கு துரோலாக் (Trolak Utara); கிழக்கு துரோலாக் (Trolak Timur) மற்றும் தெற்கு துரோலாக் (Trolak Selatan).

1960-ஆம் ஆண்டுகளில் பெல்டா (FELDA) நிலக் குடியேற்றவாசிகளின் இடப் பெயர்வுப் பகுதியாக விளங்கியது. முன்பு காலத்தில் ரப்பர் தோட்டங்களுடன் வளர்ச்சி கண்ட துரோலாக், பின்னர் எண்ணெய்ப் பனை தோட்டங்களுடன் மாற்றம் கண்டது.

சுங்கை கிளா வெந்நீர் ஊற்று[தொகு]

இங்கு மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. அதன் பெயர் சுங்கை கிளா வெந்நீர் ஊற்று (Sungai Klah Hot Springs).

மிகவும் அமைதியான, மிகவும் பசுமையான வனப்பகுதிகளில் சுங்கை கிளா வெந்நீர் ஊற்று அமைந்து உள்ளது. சுற்றிலும் மலைகள். தெளிவான குளிர் நீரோடைகள். அருவி எடுக்கும் ஆறுகள். டுரியான் எனும் முள்நாறிப் பழத் தோப்புகளால் சூழப்பட்டுள்ள அழகிய இடம்.[2]

துரோலாக் தமிழர்கள்[தொகு]

முன்பு காலத்தில் இந்தத் துரோலாக் கிராமத்தில் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். இன்று விரல் விட்டு எண்ணும் அளவுக்குகூட தமிழர்கள் இல்லை. மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில் 1938-ஆம் ஆண்டு இங்கு ஒரு பாலம் கட்டப்பட்டது. அதன் பெயர் துரோலாக் பாலம். இந்தப் பாலத்தைக் கட்டுவதற்குப் பல தமிழர்க் குடும்பங்கள் துரோலாக் கிராமத்திற்கு அழைத்து வரப் பட்டார்கள்.

துரோலாக் பாலம் இன்றும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஆனால் அதைக் கட்டிய தமிழர்களும் அவர்களின் வாரிசுகளும் இப்போது இல்லை. இந்தக் கிராம நகரத்தில் தமிழர்களின் அடையாளங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன.

துரோலாக் தமிழ்ப்பள்ளி[தொகு]

துரோலாக் நகரத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 77 மாணவர்கள் பயில்கிறார்கள். அவர்களில் 42 பெண்கள்; ஆண்கள் 35.[3] இந்தப் பள்ளி தேசிய அளவிலும்; மாநில அளவிலும் பல சாதனைகளைப் படைத்து உள்ளது.

நாடறிந்த பேச்சாளர் ஜோதி சுப்பிரமணியம், இதே துரோலாக் தோட்டத்து மண்ணின் மடியில் தவழ்ந்தவர். தம் தொடக்கக் கல்வியைத் துரோலாக் தமிழ்ப்பள்ளியில் தொடங்கியவர். மலேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் முதுகலை பயின்றவர்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதற்கு துரோலாக் தமிழ்ப்பள்ளி எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=துரோலாக்&oldid=3139700" இலிருந்து மீள்விக்கப்பட்டது