மாலொருபாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷங்கர நாராயண மூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவ வடிவங்களில் ஒன்றான
மாலொருபாகன்
மாதேவன் பாதி, மாதவன் பாதியான தோற்றம்
மாதேவன் பாதி, மாதவன்
பாதியான தோற்றம்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: சிவன், திருமால்
இணைந்த தோற்றம்
துணை: பார்வதி, திருமகள்
ஆயுதம்: திரிசூலம், சக்கரம்
வாகனம்: நந்தி தேவர், கருடன்

மாலொருபாகன், அறுபத்து நான்கு மற்றும் இருபத்துநான்கு சிவத் திருவுருவங்களில் ஒன்றாகும். சைவ - வைணவ நெறிகளுக்கிடையிலான ஒற்றுமைக்கு இத்திருவுருவம் சான்றாகின்றது.[1]இந்தத் திருவுருவத்தை "சங்கர நாராயணன்" , "கேசவார்த்த மூர்த்தம்" "அரியர்த்த மூர்த்தம்" என்றெல்லாம் அழைப்பதுண்டு.

தோற்றம்[தொகு]

இந்தோனேசியாவின் மயாபாகித்து பேரரசு காலத்தில் அமைக்கப்பட்ட மாலொருபாகன் சிற்பம் (பொ.பி 13ஆம் நூற்றாண்டு)
பிரித்தானிய அருங்காட்சியகத்திலுள்ள மாலொருபாகன் சிற்பம்.
சங்கரனும் நாரயாணனும் ஓருடலாக இணைந்த சங்கரநாராயணன் திருக்கோலம், புதுமண்டபம், மதுரை

வலப்புறம் சிவனின் அம்சங்களும் இடப்புறம் திருமாலின் அம்சங்களும் இத்திருமேனியில் காணப்படும். வலப்புறம் வெண்ணிறம், வெண்ணிலா, வெண்ணீறு, உருத்திராக்கம், அஞ்சேல், மான் ஏந்திய கரங்கள் என்பன அலங்கரிக்க, இடப்புறம் கார்வண்ணம், மஞ்சளாடை, நகைகள், சங்கமும் கதையும் தாங்கிய திருக்கரங்கள் எனக் காணப்படும்.[2] எனினும், மாறுபட்ட வடிவங்கள் இந்தியாவெங்கணும் கிட்டுகின்றன.

வரலாறு[தொகு]

மாலொருபாகன் வடிவத்துக்கான தோற்றம், குசாணர் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது என்பதற்கு, சக்கரம் தாங்கிய சிவன் பொறிக்கப்பட்ட குசாணரின் பொற்காசைக் குறிப்பிடலாம்.[3] பிற்கால வட இந்திய, தென்னிந்திய ஆலயங்களிலெல்லாம் இம்மூர்த்தியின் சிற்பத்தைக் காணமுடிகின்றது.

ஈசனின் மாலொருபாகன் பற்றி வாமனபுராணம், இலிங்கபுராண முதலான பல புராணங்கள் குறிப்பிடுகின்றன. சைவ வழக்கில் தேவியின்ன் ஆண் வடிவே திருமால் எனவும் சிவனின் நான்கு சக்தியரில் திருமாலும் ஒருவரென்றும் சொல்லப்படுகின்றது. சிவனின் தேவி என்பதாலேயே, பசுமாசுர வதத்திலும், பாற்கடல் கடைந்தபோதும், தாருகாவன முனிவரின் செருக்கடக்கிய போதும், திருமால், மோகினி அவதாரம் எடுத்து, ஈசனின் தேவியாகத் தோன்றமுடிந்தது.[4]

கோயில்கள்[தொகு]

தமிழநாட்டின் சங்கரன் கோவிலில் அமைந்த சங்கரநாராயணன் கோவிலும், கர்நாடகத்தின் கரிகர் ஊரிலுள்ள அரிகரேசுவரர் கோயிலும் ஈசனின் இத்திருமூர்த்தத்துக்காக அமைக்கப்பட்டவை ஆகும். சென்னகேசவர் கோயில், பேளூர், மீனாட்சியம்மன் கோவில் போன்ற பழம்பெருமை வாய்ந்த இந்தியத் திருத்தலங்களிலெல்லாம் இம்மூர்த்தியின் சிற்பங்கள் உண்டு.


அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Menon, Usha (2013), Women, Wellbeing, and the Ethics of Domesticity in an Odia Hindu Temple Town, Springer Science & Business Media, p. 32, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132208853
  2. சைவம் வலைத்தளம்
  3. Parmeshwaranand, Swami (2004), Encyclopaedia of the Śaivism, Volume 1, Sarup & Sons, p. 32, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176254274
  4. Goudriaan, Teun (1978), Maya: Divine And Human, Sarup & SonsMotilal Banarsidass Publisher, p. 32, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120823891

மேலும் பார்க்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலொருபாகன்&oldid=2055434" இலிருந்து மீள்விக்கப்பட்டது