நப்பின்னை

நப்பின்னை என்பவள், பழந்தமிழ் வைணவப் பாசுரங்களும் சைவத் திருமுறைகளும் குறிப்பிடும், கண்ணனின் மனைவியாவாள். நப்பின்னை, கண்ணனின் வளர்ப்புத் தாய் யசோதையின் தமையனான கும்பக்கோன் மகள். அவளுடன் கண்ணனும், பலராமனும் இணைந்து சிறுவயதில் ஆடும் குரவைக்கூத்தையே சிலப்பதிகாரம் சித்தரிக்கின்றது.[1] மிதிலை அரசனான கும்பக்கோன்[2], தன் காளைகளை அடக்குபவனுக்கு நப்பின்னை கிடைப்பாள் என்று அறிவித்து வைக்கும் போட்டியில் கண்ணன் கலந்துகொண்டு, ஏறுதழுவி வென்று, நப்பின்னையை மணம் புரிகின்றான்.
காலத்தாற் பிந்திய திருவள்ளுவமாலையின் பாடலொன்றில், இவள் "உபகேசி" என்ற பெயரில் சுட்டப்படுகின்றாள்.[3]கண்ணனின் திருவிளையாடல்களையும், தேவியரையும் பற்றிக் கூறும் பாகவதம், மகாபாரதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களிலோ, வடநாட்டு இலக்கியங்களிலோ இவள் பற்றிய குறிப்புகளைக் காணக்கிடைக்கவில்லை. எனினும், குறைந்தபட்சச் சான்றுகளின் அடிப்படையில், இவளை, கண்ணனின் எண்மனையாட்டியரில் ஒருத்தியான நக்னசித்தியாக இனங்காண்பதுண்டு.[4]
தமிழிலக்கியங்களில் நப்பின்னை
[தொகு]- பழந்தமிழ் இலக்கியங்கள்
சிலப்பதிகாரத்திலும், சீவகசிந்தாமணியிலும் நப்பின்னை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கலித்தொகை முதலான சங்க இலக்கியங்கள் அவளை மணக்கக் கண்ணன் ஏறுதழுவிய செய்தியைச் சொல்கின்றன.[5]
- வைணவ இலக்கியங்கள்
ஆண்டாள் தன் திருப்பாவையிலும்[6], நம்மாழ்வார்[7] "பின்னைமணாளன்" (நம்மாழ்வார் பிர.162) என்றும், திருமழிசையாழ்வார் "பின்னைகேள்வ" (மழிசையாழ்வார் பிர.850) என்றும், இன்னும் பலவிதமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பலவாறாகக் கண்ணனையும் நப்பின்னையையும் போற்றிப் புகழ்கின்றது.[8]
- சைவ இலக்கியங்கள்
மாணிக்கவாசகர், திருமாலை, "ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்"[9] என்றும், சுந்தரர் "பின்னை நம்பும் புயத்தான்"[10] என்றும் பாடுகின்றனர்.
குழப்பங்கள்
[தொகு]தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நப்பின்னை பற்றிய குறிப்புகள், வேறெந்த வடமொழி இலக்கியங்களி்லும் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.[11] எனவே யாரிந்த நப்பின்னை என்பதில் இன்றளவும் குழப்பம் நீடிக்கின்றது. பொதுவாக நப்பின்னையை, சுபத்திரை, நீளாதேவி, ராதை, நக்னசித்தி, ஆகியோருடன் இணைத்தே ஆய்வாளர்கள் தத்தம் வாதங்களை முன்வைக்கின்றனர்.
சுபத்திரை
[தொகு]"நப்பின்னை" என்ற பெயரை மாத்திரம் கருத்திற்கொண்டு, அதை "நல்+பின்னை" என்று பிரித்து, கண்ணனுக்குப் பின் பிறந்தவளான சுபத்திரையாக சில ஆய்வாளர் குறிப்பிடுவர்.[12] குரவைக்கூத்தில் கண்ணன், பலராமர், நப்பின்னை ஆகியோர் நிற்கும் முறைமை, இன்றைய பூரி செகநாதர் கோயிலில் பலராமன், சுபத்திரை, கண்ணன் ஆகியோர் நிற்பதை ஒத்ததாக இருப்பதும், இவர்களின் வாதத்துக்கு வலுச் சேர்க்கின்றது.[13] ஆனால், நப்பின்னையை கண்ணன் தேவி என்று தெளிவாகவே தமிழிலக்கியங்கள் சொல்வதால், பின்னை என்பவள், கண்ணனின் காதலியே அன்றித் தங்கை அல்ல என்று முடிவுகொள்ள முடிகின்றது.
ராதை
[தொகு]பிற்காலத் தமிழ் மரபு
[தொகு]19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மதுரகவி ஸ்ரீநிவாச ஐயங்காரின் "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம்" எனும் நூல், தமிழில் வெளிவந்துள்ள நப்பின்னை பற்றிய இறுதியான - முழுமையான நூலாக இனங்காணப்படுகின்றது.[14]
மேலும் பார்க்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ E.A.Edholm and C.Sunesan, (1972) "The seven bulls and Krsna's marriage to Nila/Nappinnai" pp.43-47"
- ↑ Journal of the Institute of Asian Studies, Volume 16 (1996) p.126
- ↑ நல்கூர் வேள்வியார் பாடல்
- ↑ R. K. Das (1964) "Temples of Tamilnad" p.51
- ↑ Charlotte Vaudeville (1996) "Myths, Saints and Legends in Medieval India" p.44
- ↑ திருப்பாவை 19,20
- ↑ பெரிய திருவந்தாதி 48
- ↑ நப்பின்னைப் பிராட்டியார் பரமான அருளிச்செயல்கள்
- ↑ திருக்கோவையார் 18:8
- ↑ திருமுறை 7:63:7
- ↑ T. Padmaja (2002) "Temples of Kr̥ṣṇa in South India: History, Art, and Traditions in Tamilnāḍu" pp.86
- ↑ J. J. Bhabha "Mārg̲, Volume 23" (1969) p.85
- ↑ Congress and Sundeep Prakashan (2001) "Proceedings of the 9th Session of Indian Art History Congress, Hyderabad, November 2000 p.152
- ↑ மதுரகவி ஸ்ரீநிவாச ஐயங்காரின் "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம்" மின்னூல்