உள்ளடக்கத்துக்குச் செல்

நப்பின்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணு , ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி(நப்பின்னை)

நப்பின்னை என்பவள், பழந்தமிழ் வைணவப் பாசுரங்களும் சைவத் திருமுறைகளும் குறிப்பிடும், கண்ணனின் மனைவியாவாள். நப்பின்னை, கண்ணனின் வளர்ப்புத் தாய் யசோதையின் தமையனான கும்பக்கோன் மகள். அவளுடன் கண்ணனும், பலராமனும் இணைந்து சிறுவயதில் ஆடும் குரவைக்கூத்தையே சிலப்பதிகாரம் சித்தரிக்கின்றது.[1] மிதிலை அரசனான கும்பக்கோன்[2], தன் காளைகளை அடக்குபவனுக்கு நப்பின்னை கிடைப்பாள் என்று அறிவித்து வைக்கும் போட்டியில் கண்ணன் கலந்துகொண்டு, ஏறுதழுவி வென்று, நப்பின்னையை மணம் புரிகின்றான்.

காலத்தாற் பிந்திய திருவள்ளுவமாலையின் பாடலொன்றில், இவள் "உபகேசி" என்ற பெயரில் சுட்டப்படுகின்றாள்.[3]கண்ணனின் திருவிளையாடல்களையும், தேவியரையும் பற்றிக் கூறும் பாகவதம், மகாபாரதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களிலோ, வடநாட்டு இலக்கியங்களிலோ இவள் பற்றிய குறிப்புகளைக் காணக்கிடைக்கவில்லை. எனினும், குறைந்தபட்சச் சான்றுகளின் அடிப்படையில், இவளை, கண்ணனின் எண்மனையாட்டியரில் ஒருத்தியான நக்னசித்தியாக இனங்காண்பதுண்டு.[4]

தமிழிலக்கியங்களில் நப்பின்னை

பழந்தமிழ் இலக்கியங்கள்

சிலப்பதிகாரத்திலும், சீவகசிந்தாமணியிலும் நப்பின்னை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கலித்தொகை முதலான சங்க இலக்கியங்கள் அவளை மணக்கக் கண்ணன் ஏறுதழுவிய செய்தியைச் சொல்கின்றன.[5]

வைணவ இலக்கியங்கள்

ஆண்டாள் தன் திருப்பாவையிலும்[6], நம்மாழ்வார்[7] "பின்னைமணாளன்" (நம்மாழ்வார் பிர.162) என்றும், திருமழிசையாழ்வார் "பின்னைகேள்வ" (மழிசையாழ்வார் பிர.850) என்றும், இன்னும் பலவிதமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பலவாறாகக் கண்ணனையும் நப்பின்னையையும் போற்றிப் புகழ்கின்றது.[8]

சைவ இலக்கியங்கள்

மாணிக்கவாசகர், திருமாலை, "ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்"[9] என்றும், சுந்தரர் "பின்னை நம்பும் புயத்தான்"[10] என்றும் பாடுகின்றனர்.

குழப்பங்கள்

தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நப்பின்னை பற்றிய குறிப்புகள், வேறெந்த வடமொழி இலக்கியங்களி்லும் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.[11] எனவே யாரிந்த நப்பின்னை என்பதில் இன்றளவும் குழப்பம் நீடிக்கின்றது. பொதுவாக நப்பின்னையை, சுபத்திரை, நீளாதேவி, ராதை, நக்னசித்தி, ஆகியோருடன் இணைத்தே ஆய்வாளர்கள் தத்தம் வாதங்களை முன்வைக்கின்றனர்.

சுபத்திரை

"நப்பின்னை" என்ற பெயரை மாத்திரம் கருத்திற்கொண்டு, அதை "நல்+பின்னை" என்று பிரித்து, கண்ணனுக்குப் பின் பிறந்தவளான சுபத்திரையாக சில ஆய்வாளர் குறிப்பிடுவர்.[12] குரவைக்கூத்தில் கண்ணன், பலராமர், நப்பின்னை ஆகியோர் நிற்கும் முறைமை, இன்றைய பூரி செகநாதர் கோயிலில் பலராமன், சுபத்திரை, கண்ணன் ஆகியோர் நிற்பதை ஒத்ததாக இருப்பதும், இவர்களின் வாதத்துக்கு வலுச் சேர்க்கின்றது.[13] ஆனால், நப்பின்னையை கண்ணன் தேவி என்று தெளிவாகவே தமிழிலக்கியங்கள் சொல்வதால், பின்னை என்பவள், கண்ணனின் காதலியே அன்றித் தங்கை அல்ல என்று முடிவுகொள்ள முடிகின்றது.

ராதை

பிற்காலத் தமிழ் மரபு

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மதுரகவி ஸ்ரீநிவாச ஐயங்காரின் "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம்" எனும் நூல், தமிழில் வெளிவந்துள்ள நப்பின்னை பற்றிய இறுதியான - முழுமையான நூலாக இனங்காணப்படுகின்றது.[14]

மேலும் பார்க்க

அடிக்குறிப்புகள்

  1. E.A.Edholm and C.Sunesan, (1972) "The seven bulls and Krsna's marriage to Nila/Nappinnai" pp.43-47"
  2. Journal of the Institute of Asian Studies, Volume 16 (1996) p.126
  3. நல்கூர் வேள்வியார் பாடல்
  4. R. K. Das (1964) "Temples of Tamilnad" p.51
  5. Charlotte Vaudeville (1996) "Myths, Saints and Legends in Medieval India" p.44
  6. திருப்பாவை 19,20
  7. பெரிய திருவந்தாதி 48
  8. நப்பின்னைப் பிராட்டியார் பரமான அருளிச்செயல்கள்
  9. திருக்கோவையார் 18:8
  10. திருமுறை 7:63:7
  11. T. Padmaja (2002) "Temples of Kr̥ṣṇa in South India: History, Art, and Traditions in Tamilnāḍu" pp.86
  12. J. J. Bhabha "Mārg̲, Volume 23" (1969) p.85
  13. Congress and Sundeep Prakashan (2001) "Proceedings of the 9th Session of Indian Art History Congress, Hyderabad, November 2000 p.152
  14. மதுரகவி ஸ்ரீநிவாச ஐயங்காரின் "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம்" மின்னூல்

உசாத்துணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நப்பின்னை&oldid=4224261" இலிருந்து மீள்விக்கப்பட்டது