முசுகுந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முசுகுந்தம் என்றால் குரங்கு முகம் என்று பொருள்.முசுகுந்தன் என்பவனைப் பற்றி மகாபாரதத்தில் விவரங்கள் இருக்கின்றன. அவன் பெரும் முனிவனாகவும், பல நாடுகளைத் தன் கீழ் கொண்டு வந்த பேரரசனாகவும் போற்றப்படுகிறான். அவனுடன் சம்பந்தப்பட்ட இடங்கள் எல்லாம் கங்கைக் கரையில் இருக்கின்றன. அவனுக்கும் புகார் நகருக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால், நாளங்காடிப் பூதத்தைப் பெற்ற விதத்தை, 'அமரனிற் பெற்று, தமரில் தந்து" என்கிறது சிலப்பதிகாரம். அதாவது, அமரன் என்று சொல்லபப்டும் இந்திரனிடமிருந்து பெற்றதை, முசுகுந்தன் தன் தமருக்கு, அதாவது தன்னைச் சேர்ந்தோருக்குத் தந்தான் என்று பொருள் அமைகிறது. அதாவது சோழர்கள் முசுகுந்தனுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிகிறது. அந்தத் தொடர்பு என்ன என்பது 1905 -ஆம் வருடம் திருவாலங்காடு என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்புத் தகடுகளின் மூலம் தெரிகிறது.

நாளங்காடி பூதம்:நாளங்காடி என்னும் ஒரு கடைத்தெரு. அந்தக் கடைத் தெருவில் நாளங்காடிப் பூதம் என்னும் பூதம் குடி கொண்டுள்ளது. பூதம் என்றால் பேய், பிசாசு போன்ற மூட நம்பிக்கை அல்ல. வழி வழியாக சோழநாட்டு மக்கள் அதனை வணங்கி வந்துள்ளனர். தெய்வ சக்தி கொண்ட ஒன்றாக அது இருக்கவே, அதற்கு மக்கள் பொங்கலிட்டு, பூசை செய்து வணங்கி வந்தனர். இதனை இளங்கோவடிகள் இந்திர விழாவூரெடுத்த காதையில் விவரித்துள்ளார்.

மகாபாரதக் கதை[தொகு]

ஒரு சமயம், சிவபெருமான், மனித வடிவம் கொண்டு ஒரு வில்வ மரத்தினடியில் தியானத்தில் அமர்ந்தார். அம்மரத்தின் மேல் ஒரு குரங்கு உட்கார்ந்திருந்தது. விதூமன் என்னும் கந்தருவன் எடுத்த மறுபிறவியே இக்குரங்கு என்பர். இவன் திலீபன் மகனென்றும், மாந்ததாவின் மகனென்றும் நூல்கள் கூறுகின்றன.அது மரத்தில் உள்ள வில்வ இலைகளை பறித்து வாயிலிட்டு கடித்துக் கீழே துப்பியது. அவ்விதம் விழுந்த வில்வ இலைகள் தியானத்தில் இருந்த ஈசன் மீது பட்டு அவரை மறைத்து சிறுகுன்று போல் ஆனது. தியானம் கலைந்து கண்களை திறந்து பார்த்தார் ஈசன். தன் மேனி முழுவதும் அர்ச்சனை செய்யப்பட்டதுபோல், வில்வ இலைகள் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த பிறவியில் மன்னனாகப் பிறந்து பல பல அருட்தொண்டுகள், தர்மகாரியங்கள் செய்து பரகதி அடைவாய், என அருளினார். இந்த மிருகப் பிறவியில் என்னை அறியாமல் மனிதப்பிறவி அர்ச்சித்தேன். ஆனால் மனிதப்பிறவி அப்படி அல்ல. மனிதன் வஞ்சகன். சூது நிறைந்தவன், பொறாமை குணம் கொண்டவன். பகுத்தறிவு என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, ஆன்மிக உணர்வுகளை வெட்டி விலக்குபவன். நான் மனிதனாக, மன்னனாகப் பிறந்தாலும் என் முகம் மட்டும் குரங்கு முகமாகவே இருக்க அருள் செய்ய வேண்டும். அது எனக்கு இந்தப் பிறவியை நினைவூட்டவும், இறைபக்தியுடன் நல்லுணர்வுகளோடு இருக்கவும் உதவிசெய்யும், என்றது. ஈசனும் அப்படியே அருள்புரிந்தார். மறுபிறவியில் குரங்கு முகமும், மனித உடலும் கொண்டு, சூரிய குலத்தில் பிறந்தது. திருவாரூரை ஆட்சி புரிந்தது.

முசு குரங்கு[தொகு]

பெரியாழ்வார் தம் பாடலில் முசு குரங்கு பற்றிக் குறிப்பிடுகிறார். அது தன் குட்டியைத் தன் முதுகில் சுமந்து செல்லுமாம்.[1]

மேற்கோள்[தொகு]

  1. தாமோதரன் தாங்கு தடவரைதான்
    முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்
    முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை,
    கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்
    கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. (பெரியாழ்வ்வார் திருமொழி 3-9)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசுகுந்தன்&oldid=3801574" இலிருந்து மீள்விக்கப்பட்டது