சாம்பன்
சாம்பன் (Sāmba), கிருட்டிணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன்.[1] சாம்பசிவனின் அருளினால் பிறந்தவன் என்பதால் சாம்பன் எனப் பெயரிட்டனர் .[2]பாகவத புராணத்தில் கூற்றுப்படி இவன் ஸ்கந்தனின் அவதாரமாக கருதப்படுகிறான்.[3]
அருச்சுனனிடமிருந்து போர்க்கலையைப் பயின்றவன். துரியோதனனின் ஒரே மகளான இலெட்சுமணாவை, சுயம்வரத்தின்போது சாம்பன் கடத்திச் சென்று திருமணம் செய்ய இருக்கையில், பலராமனின் முயற்சியால் இருவீட்டாரும் இணங்க சாம்பன் – இலெட்சுமணாவின் திருமணம் நடந்தேறியது.[4][5].[6] சாம்பன் யாதவ குல அழிவுக்கு ஒரு காரணமாக அமைந்தவன்.
பிறப்பு[தொகு]
சாம்பனின் பிறப்பானது மகாபாரதம் மற்றும் தேவி பாகவத புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
யாதவ குல அழிவு[தொகு]
குருச்சேத்திரப் போருக்குப்பின் 35 ஆண்டுகள் கடந்த பின் ஒரு நாள் யாதவகுல இளைஞர்களில் சிலர் சாம்பனுக்கு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் வேடமிட்டு, பிரபாச நகரில் தவக்கோலத்தில் இருந்த சப்த ரிஷிகளிடம் அழைத்துச் சென்று, இந்தக் கர்ப்பிணிப் பெண்னுக்கு என்ன குழந்தை பிறக்கும் என வேடிக்கையாக கேட்டனர்.
இளைஞர்களின் கபட நாடகத்தை அறிந்த முனிவர்கள், இவள் உங்கள் யாதவ குலத்தையே அழிக்கப்போகும் இரும்பு உலக்கையை பெற்றெடுக்கப் போகிறாள் என சாபம் இட்டனர். முனிவர்கள் கூறியபடியே சாம்பனுக்கு உடனே இரும்பு உலக்கை பிறந்தது. இதனை அறிந்த யாதவகுல அரசன் உக்கிரசேனன், இரும்பு உலக்கையை பொடிப்பொடியாக அரைத்து கடலில் கரைக்க உத்திரவிட்டார்.
சில காலம் கழித்துக் கடல் அலைகளால் பிரபாச பட்டினக் கடற்கரையில் ஒதுங்கிய உலக்கையின் இரும்புத்தூள்கள், மிக உறுதியான நீண்ட கோரைப் புற்களாக வளர்ந்தன.
ஒரு முறை பிரபாச பட்டினத்திற்குச் சென்ற யாதவர்கள் மதியை மயக்கும் போதையைத் தரும் மைரேயம் என்ற மதுவை அளவுக்கு மீறிப் பருகியதான் மதி இழந்து ஒருவரையொருவர் இரும்புத் தடி போன்று வளர்ந்திருந்த வச்சிராயுதத்திற்கு நிகரான கோரைப் புற்களால் தாக்கிக் கொண்டு, சாம்பன் உட்பட அனைவரும் முற்றிலும் அழிந்தனர்.
உசாத்துணை[தொகு]
- உத்தவ கீதை அத்தியாயம் 1 மற்றும் 30
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D
- ↑ [1]
- ↑ "CHAPTER ONE" (in en). https://vedabase.io/en/library/sb/3/1/.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://vedabase.net/sb/10/68/en.
- ↑ http://www.krishnalilas.com/67-the-marriage-of-samba.htm
- ↑ "Krishna Book Chapter 68: The Marriage of Samba". Krsnabook.com. http://krsnabook.com/ch68.html. பார்த்த நாள்: 2012-08-26.