கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர்
கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் गणेश वासुदेव मावळणकर | |
---|---|
![]() | |
1942ல் ஜி. வி. மாவ்லங்கர் | |
முதல் நாடாளுமன்ற மக்களவைச் சபாநாயகர் | |
பதவியில் 15 மே 1952 – 13 ஜனவரி 1956 | |
துணை | எம். அனந்தசயனம் அய்யங்கார் |
முன்னவர் | இல்லை |
பின்வந்தவர் | எம். அனந்தசயனம் அய்யங்கார் |
தொகுதி | அகமதாபாத் மக்களவைத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 27 நவம்பர் 1888 பரோடா |
இறப்பு | 27 பிப்ரவரி 1956 அகமதாபாத் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சமயம் | இந்து |
As of 5 சூலை, 2009 Source: [1] |
ஜி. வி. மாவ்லங்கர் (Ganesh Vasudev Mavalankar) (27 நவம்பர் 1888 – 27 பிப்ரவரி 1956), தாதாசாகிப் என மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட இவர், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராகவும், பின் நாடாளுமன்ற மக்களவையின் முதல் மக்களவைத் தலைவராகவும் பணியாற்றியவர்.
இளமை[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் இரத்தினகிரி மாவட்டத்தில், மராத்தியக் குடும்பத்தில் 1888ல் பிறந்த மாவ்லங்கர், 1908ல் குசராத்து மாநிலத்தின் முன்னாள் தலைநகரான அகமதாபாத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தார். பின்னர் பம்பாய் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று, 1913 முதல் வழக்கறிஞர் தொழில் மேற்கொண்டார். மகாத்மா காந்தி, வல்லபாய் படேல்]] போன்ற இந்திய தேசிய காங்கிரசு தலைவர்களுடன் நெருங்கி பழகினார். மாவ்லங்கர் அகமதாபாத் நகராட்சி மன்ற உறுப்பினராக 1919 முதல் 1937 முடிய தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
அரசியல்[தொகு]
இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்த மாவ்லங்கர், பிரித்தானிய இந்தியா அரசிற்கு எதிராக, மகாத்மா காந்தி அறிவித்த ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கெடுத்தார். 1930ல் மகாத்மா காந்தியுடன் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கெடுத்தார். 1934ல் பம்பாய் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1937 முதல் 1946 முடிய பம்பாய் மாகாண சட்ட மன்ற சபாநாயகராகத் தொடர்ந்து செயல்பட்டவர். 1946ல் மாவ்லங்கர் இந்திய மத்திய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மத்திய சட்டமன்ற சபாநாயாகராக 14-15 ஆகஸ்டு 1947 முடிய இந்திய விடுதலை வரை பணியாற்றினார்.[2]
இந்திய விடுதலைச் சட்டம், 1947-ன் படி, ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த இந்திய மத்திய சட்டமன்றமும், இந்திய மாகாணங்களின் சட்டமன்றங்களும் தொடர்ந்து இயங்க சட்டபூர்வ தகுதி வழங்கப்பட்டது. விடுதலை இந்தியாவுக்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் இயற்றுவதற்கான தேவை குறித்து 20 ஆகஸ்டு 1947 அன்று அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக மாவ்லங்கர் நியமிக்கப்பட்டார். மாவ்லங்கர் குழுவின் பரிந்துரையின் படி, இந்திய மத்திய சட்டமன்றமே இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றமாக செயல்பட்டது. 17 நவம்பர் 1947ல் மாவ்லங்கர் இந்திய மத்திய சட்டமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 25 நவம்பர் 1949ல் அம்பேத்கரால் பரிந்துரைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய மத்திய சட்டமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில், தற்காலிக இந்திய நாடாளுமன்றம் நிறுவப்பட்டது. முதல் இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெறும் வரை மாவ்லங்கர் தற்காலிக இந்திய நாடாளுமன்ற சபாநாயகராக தொடர்ந்து பணியாற்றினார்.[1]
15 மே 1952ல் நடைபெற்ற முதல் இந்தியப் பொதுத் தேர்தலில், மாவ்லங்கர், அகமதாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து, நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] மாவ்லங்கர் இந்திய நாடாளுமன்ற முதல் மக்களவைத் தலைவராகவும் 13 ஜனவரி 1956 முடிய பணியாற்றினார். 27 பிப்ரவரி 1956ல் இருதய நோயினால் அகமதாபாத் நகரத்தில், தமது 67வது வயதில் மறைந்தார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Former Speakers – G.V. Mavalankar". The Office of the Speaker, Lok Sabha website. http://speakerloksabha.nic.in/former/mavalankar.asp. பார்த்த நாள்: 5 July 2009.
- ↑ 2.0 2.1 Subhash C. Kashyap (1989). Dada Saheb Mavalankar, Father of Lok Sabha (Published for the Lok Sabha Secretariat by the National Publishing House), pp. 9–11