ஈங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈங்கை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. caesia
இருசொற் பெயரீடு
Acacia caesia
கரோலஸ் லின்னேயஸ் Willd.
வேறு பெயர்கள்
  • Acacia caesia var. caesia
  • Acacia columnaris Craib
  • Acacia intsia sensu auct.
  • Acacia intsia (uct. non (L.) Willd.
  • Acacia intsia var. caesia (L.) Baker
  • Albizia sikharamensis K.C.Sahni & Bennet
  • Mimosa caesia (L.) Willd.
  • Mimosa caesia "L., p.p."
  • Mimosa caesia L.
  • Mimosa intsia auct. non L.

ஈங்கை (Acacia caesia) என்பது புதர்முட்செடி ஆகும். இது பற்றி சங்க இலக்கியத்தில் தரப்பட்டுள்ள செய்திகள் பின்வருமாறு:

மகளிர் மணல் மேல் அமர்ந்து ஆடும் கழங்கு விளையாட்டுக் காய்கள் போலப் பாறைகளின் மீது ஈங்கைப் பூக்கள் கொட்டுமாம்[1].

இளவேனில் காலத்தில் கோங்கம் பூக்கத் தொடங்கும்போது, ஈங்கை தளிர் விடுமாம்[2].

நௌவி-மான் குளம்பு அடி மண்ணில் பதிந்தது போல ஈங்கைப்பூ வெண்ணிறம் கொண்டதாம்[3].

சங்க காலச் சிறுவர் விளையாடிய வட்டு நெல்லிக்காய் அளவு இருந்த்து. பிசிர் மயிர்களைக் கொண்ட ஈங்கைப் பூவும் வட்டு அளவு இருக்கும்[4].

ஈங்கை வயல் வேலியில் பூக்கும். ஈங்கைக்கு முள் உண்டு. இதனை மாமரத்துக்கு வேலியாகப் பயன்படுத்துவர்[5].

புதராக இருக்கும் ஈங்கைப் பூங்குழை தன்னை வருடிக்கொடுக்கும் இன்பத்தில் குருகு என்னும் பறவை பதுங்கியிருக்கும்[6].

ஈங்கை ஒரு வெண்மையான கொடி. பனி அரும்பும் கூதிர் காலத்தில் (கார்த்திகை மார்கழி மாதங்களில்) பகன்றையும், ஈங்கையும் பூக்கும்[7].

ஈங்கை வெண்ணிறத்தில் பூக்கும்[8][9].

வெள்ளம் வடிந்த ஆற்றுமணலில் ஈங்கையின் வாடிய பூக்கள் வரிவரியாகப் பரவிக் கிடந்தன[10].

ஈங்கைத் தளிர் மாரிக் காலத்தில் மாந்தளிர் போல் இருக்கும்[11].

ஈங்கை முள் வளைவாக இருக்கும்[12].

ஈங்கைப் பூ மழை பொழியும்போது விழும் பனிக்கட்டி போல் இருக்கும்[13].

அவள் மேனி மாந்தளிர் போலவும், மாரி காலத்து ஈங்கை போலவும் மாமைநிறம் கொண்டிருந்தது[14].

அடிக்குறிப்பு[தொகு]

  1. சிறைநாள் ஈங்கை உறைநனி திரள்வீ, கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர், மணலாடு கழங்கின் அறைமிசைத் தாஅம் - நற்றிணை 79
  2. கோங்கம் குவிமுகை அவிழ, ஈங்கை நல்-தளிர் நயவர நுடங்கும், முற்றா வேனில் - நற்றிணை 86
  3. ஈங்கை முகை வீ அதிரல், மோட்டுமணல் எக்கர், நௌவி நோன்குளம்பு அழுந்து என வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப - நற்றிணை 124
  4. அட்டரங்கு உருவின் வட்டுமுகை ஈங்கைத் துய்த்தலைப் புதுமலர், - நற்றிணை 193
  5. படப்பைக் கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய ஆய்நிறம் புரையும் இவள் மாமைக் கவினே - குறுந்தொகை 205
  6. பனிப்புதல் ஈங்கை அங்குழை வருட, சிறை குவிந்து இருந்த பைதல் வெண்குருகு, - குறுந்தொகை 312
  7. பகல்மதி உருவின் பகன்றை மாமலர், வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும், அரும்பனி அளைஇய கூதிர் - ஐங்குறுநூறு 456
  8. ஈங்கைத் தூ அவிழ் பனிமலர் உதிர - அகம் 252,
  9. துய்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை – அகம் 294
  10. கலித்தொகை 31
  11. மாரி ஈங்கை மாத்தளிர் - அகம் 75
  12. முட்கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புது வீ - அகம் 306, கொடுமுள் ஈங்கை சூரலொடு மிடைந்த வான்முகை - அகம் 357
  13. இரங்காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலி அன்ன வால் வீ தாஅய் - அகம் 125
  14. மாரி ஈங்கை மாந்தளிர் அன்ன அம் மா மேனி - அகம் 206
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈங்கை&oldid=2190112" இலிருந்து மீள்விக்கப்பட்டது