நற்றிணை
நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான். நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.
7 அடி பாடல்கள் - 1
8 அடி பாடல்கள் - 1
9 அடி பாடல்கள் - 106
10 அடி பாடல்கள் - 96
11 அடி பாடல்கள் - 110
12 அடி பாடல்கள் - 77
13 அடி பாடல்கள் - 8
234ஆவது பாடல் கிடைக்கவில்லை.
பாடியோர்[தொகு]
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 187 புலவர்கள் பாடியுள்ளனர்.குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை. திணை அடிப்படையில் பார்க்கும்போது குறிஞ்சித் திணைப் பாடல்கள் 130, பாலைப் பாடல்கள் 107, நெய்தல் படல்கள் 101, மருதப் பாடல்கள் 33, முல்லைப் பாடல்கள் 28 அமைந்துள்ளன.
நற்றிணைக் காட்டும் வாழ்க்கை[தொகு]
நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவைச் சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும், காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
நற்றினை கடவுள் வாழ்த்து[தொகு]
திணை[தொகு]
பாடாண்
துறை[தொகு]
கடவுள் வாழ்த்து
துறைவிளக்கம் [தொகு]
இந்நூல் என்றும் நின்று நிலவ வேண்டிக் கடவுளை வாழ்த்துவான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், மாயோனே வேதமுதல்வனென ஆன்றோர் கூறுவராதலின், யாமும் அவனையே வணங்குவோமென்று வாழ்த்துக் கூறாநிற்பது.(இலக்கண விளக்கம்)
“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே” (தொல். பாடாண் 80)
எனப் பெறப்பட்ட கடவுள் வாழ்த்து வகை முதலிய எட்டு வகையினுள் இது கடவுள் வாழ்த்து என்னும் வகையினுள் அடங்கும்.
“வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே” என்னும் விதிபற்றி ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூற்கு ஆசிரியப் பாவாற் கடவுள் வாழ்த்துக் கூறுவாராயினர் என்க. இஃது உலகிற்குப் பயன்பட இறைவனைப்படர்க்கையில் வைத்து வாழ்த்தியபடியாம்.
பாடல்[தொகு]
மாநிலஞ் சேவடி யாக தூநீர்
வளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாக திசைகை யாக
பசுங்கதிர் மதியோடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே.
புலவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்.
எடுத்துக்காட்டுப் பாடல் 1[தொகு]
திணை[தொகு]
பாலை
கூற்று[தொகு]
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது. குறை நயப்பு ஆகும்.
என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்[தொகு]
- தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
- அன்னை போல இனிய கூறியும்
- கள்வர் போலக் கொடியன் மாதோ
- மணி என இழிதரும் அருவி பொன் என
- வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
- ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
- ஓடு மழை கிழிக்கும் சென்னி
- கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே
- நற்றிணை 28 - முதுகூற்றனார்
பாடல் 2[தொகு]
திணை[தொகு]
நெய்தல்
கூற்று[தொகு]
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. குறிபெயர்த்தீடும் ஆகும்.
- விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
- மறந்தனம் துறந்த கான்முளை ஆகைய
- நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
- நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
- அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
- அம்ம!!நாணுதும் நும்மொடு நகையே! (பா.172)
பதிப்பு வரலாறு[தொகு]
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் தான் இயற்றிய புத்துரையுடன் 1915 இல், பதிப்பித்து வெளியிட்டார் இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்."[1]
வெளி இணைப்பு[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 37