திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 (திருமாலின் பெருமையை உணர்த்தும் ஒரு கடவுள் வாழ்த்து உட்பட) வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் மூன்றாவது அடியின் இறுதிச்சீரில் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று பெரும்பான்மையான பாடல்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் சிறுபான்மையான பாடல்களில் இவர் மூவர்(51,79,96);, இவை மூன்றும் (66, 67, 80, 86, 93, 95) என்ற சொல்லாட்சிகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் குறிப்பிடும் எண் வகை வனப்புகளில் இந்த நூல் அம்மை என்ற வனப்பின் கீழ் அமைந்துள்ளது.
இந்த நூலில் அமைந்த 100 பாடல்களில் அமைந்துள்ள 300 கருத்துகளை ஆராய்கின்றபோது வாழ்க்கைக்கு நன்மை தருபவன எவை என்று 66 பாடல்களிலும் வாழ்க்கைக்குத் தீமை தருபவன எவை என்று எஞ்சிய 34 பாடல்களிலும் எடுத்துரைக்கப்படுகின்றன. அந்தக் கருத்துகளின் இல்லறத்தை மேம்படுத்தும் வகையில் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்ற 35 கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
சில பாடல்கள்
[தொகு]ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஒட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றிக் கூறும் 56-ஆவது பாடல்
| “ | முந்தை எழுத்தின் வரவுணர்ந்துபிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும் விழுப்ப நெறி தூராவாறு. |
” |
பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையைச் சொல்லும் 6-ஆவது பாடல்
| “ | பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக் காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு. |
” |
உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.
| “ | கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும் பூவைப் பூ வண்ணன் அடி. |
” |