ஆவாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவாரை
Senna auriculata
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
துணைக்குடும்பம்: Caesalpinioideae
சிற்றினம்: Cassieae
துணை சிற்றினம்: Cassiinae
பேரினம்: Senna
இனம்: S. auriculata
இருசொற் பெயரீடு
Senna auriculata
(லி.) ரொக்சு.
வேறு பெயர்கள்

Cassia auriculata L.
Cassia densistipulata Taub.

ஆவாரை (ஒலிப்பு), ஆவிரை அல்லது மேகாரி (Cassia auriculata) என்பது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது ஒரு சங்க கால மலராகும்.

தீரும் நோய்கள்[தொகு]

நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான மருத்துவத்திற்கு பயன்படுகிறது. ஆவாரை இலையை பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளித்துவர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும். ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி.

தைப்பொங்கலில்[தொகு]

ஆவாரம்பூ

ஆவிரை என்பது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர்.

சங்க காலத்தில் மடல்-மா ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கல் விழாவில் பயன்படுத்தப்படும் பூவாக மாறியுள்ளது.

சங்கநூல் குறிப்புகள்[தொகு]

தொல்காப்பியர் இந்த மரவினத்தைக் குறிப்பிடுகிறார். ஆவிரை என்னும் மரப்பெயர் அதன் பகுதிகளைக் குறிக்கும்போது ஆவிரங்கோடு, ஆவிரஞ்செதிள் (பட்டை), ஆவிரந்தோல், ஆவிரம்பூ – என வரும் என்கிறார் [1]

குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.[2]

தலைவியை அவளது பெற்றோர் அவள் விரும்பும் தலைவனுக்குத் தர மறுத்தால் ஊரில் மடலூர்ந்து வந்து பெறப்போவதாக அந்தத் தலைவன் குறிப்பிடுகிறான். பனைமட்டைகளால் குதிரை செய்வானாம். அதற்கு ஆவிரம்பூ மாலை சூட்டுவானாம். இன்னாள் இவ்வாறு வரச்செய்தாள் என எழுதி அதன்மேல் வைத்திருப்பானாம். இதனைப் பார்க்கும் ஊரார் அந்தத் தலைவன்-தலைவியரைக் கூட்டுவிப்பார்களாம்.[3]

மடல்மா மேல் வரும் ஒருவன் அக்குதிரைக்கு மயில்பீலி, பூளாப் பூ, ஆவிரை (ஆவாரம்பூ) ஆகியவற்றைச் சூட்டியிருந்தானாம்.[4]

ஆவிரை மலரையும் எருக்க மலரையும் சேர்த்துக் கட்டிய மாலையை அவன் அணிந்திருந்தானாம்.[5]

காதலர் இருவர் ஆவிரை மலர்மாலை அணிந்துகொண்டு பல ஊர் மன்றங்களில் இன்னிசை முழங்க ஆடினார்களாம்.[6]

ஆவிரை மலர் காடு[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் 1-284
  2. அடி 71
  3. குறுந்தொகை 173
  4. பொலமலர் ஆவிரை - கலித்தொகை 138
  5. கலித்தொகை 138
  6. அகநானூறு 301
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவாரை&oldid=2556699" இலிருந்து மீள்விக்கப்பட்டது