மர்செல்லீனுஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை மர்செல்லீனுஸ்
Pope Marcellinus
29ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்சூன் 30, 296
ஆட்சி முடிவுஅக்டோபர் 25, 304
முன்னிருந்தவர்காயுஸ்
பின்வந்தவர்முதலாம் மர்செல்லுஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்மர்செல்லீனுஸ்
(Marcellinus)
பிறப்புதெரியவில்லை
தெரியவில்லை
இறப்பு(304-10-25)அக்டோபர் 25, 304
உரோமை நகரம், மேற்கு உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாஏப்ரல் 22
ஏற்கும் சபைஉரோமன் கத்தோலிக்கம்
பகுப்புஆயர், திருத்தந்தை

திருத்தந்தை மர்செல்லீனுஸ் (Pope Saint Marcellinus) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 296 சூன் 30 முதல் 304 அக்டோபர் 25 வரை ஆட்சி செய்தார்.[1] இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் காயுஸ் என்பவர். திருத்தந்தை புனித மர்செல்லீனுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 29ஆம் திருத்தந்தை ஆவார்.

  • மர்செல்லீனுஸ் (இலத்தீன்: Marcellinus) என்பது பண்டைய உரோமைக் குடும்பப் பெயர்களுள் ஒன்றாகும்.

வரலாற்றுக் குறிப்புகள்[தொகு]

உரோமைப் பேரரசை தியோக்ளேசியன் மன்னன் ஆண்ட காலத்தில் மர்செல்லீனுஸ் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அப்போது கிறித்தவர்கள் தம் மதத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடித்தனர். அவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

ஆனால் கி.பி. 302இல் மன்னனன் தியோக்ளேசியன் கிறித்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். கிறித்தவப் போர்வீரர்கள் படையிலிருந்து விலக்கப்பட்டனர். பின்னர் கிறித்தவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவர்களுடைய நூல்களும் அழிக்கப்பட்டன. மன்னனின் அரண்மனை இரு முறை தீப்பற்றி எரிந்ததும், மன்னனின் செயல்பாடு இன்னும் அதிகக் கொடூரமானது. கிறித்தவத்தைக் கைவிடாவிட்டால் சாவுதான் முடிவு என்றாயிற்று.

இந்த நெருக்கடியின்போது, மர்செல்லீனுஸ் விவிலியம் மற்றும் கிறித்தவ சமய நூல்களை மன்னனின் ஆணைக்கு ஏற்ப கையளித்தார் என்றும், கிறித்தவ நம்பிக்கையை விட்டு விலகினார் என்றும், பின்னர் மனம் வருந்தி கிறித்தவத்துக்குத் திரும்பினார் என்றும், அதன் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்றும் திருத்தந்தையர் நூல் (Liber Pontificalis) கூறுகிறது. அச்செய்தி தற்போது கைவசம் கிடைக்காத "புனித மர்செல்லீனுசின் சாவு வரலாறு" (Acts of St. Marcellinus) என்னும் பண்டைய ஏட்டிலிருந்து பெறப்பட்டது.

மர்செல்லீனுசின் மரணம்[தொகு]

திருத்தந்தை மர்செல்லீனுஸ் கிபி 304ஆம் ஆண்டு ஏப்பிரல் 26ஆம் நாள், அவர் இறந்து 25 நாள்களுக்குப் பின், உரோமை சலாரியா சாலையில் உள்ள பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இச்செய்தி திருத்தந்தையர் நூலில் உள்ளது.

நினைவு நாள்[தொகு]

கிபி 13ஆம் நூற்றாண்டில் மர்செல்லீனுஸ் நினைவாக விழாக் கொண்டாடப்பட்டது. ஏப்பிரல் 26ஆம் நாள் அவருடைய விழா புனித கிலேத்துஸ் விழாவோடு இணைத்துக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த இரு திருத்தந்தையரின் மறைச்சாட்சிச் சாவு பற்றியும் வரலாற்றுத் தெளிவு இல்லாமையால் 1969ஆம் ஆண்டு வெளியான புனிதர் நாள்காட்டியில் அவ்விழா குறிக்கப்படவில்லை.

வழிவந்த திருத்தந்தை[தொகு]

மர்செல்லீனுசின் சாவுக்குப் பிறகு, கிறித்தவ சபை துன்புறுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெயர் முதலாம் மர்செல்லுஸ் ஆகும்.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
காயுஸ்
உரோமை ஆயர்
திருத்தந்தை

296–304
பின்னர்
முதலாம் மர்செல்லுஸ்