சிங்கபுர இராச்சியம்

ஆள்கூறுகள்: 1°18′N 103°48′E / 1.3°N 103.8°E / 1.3; 103.8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கபுர இராச்சியம்
Kingdom of Singapura
1299–1398
1825-ஆம் ஆண்டு வரைபடத்தில் பழைய சுவரின் இடிபாடுகளுடன் சிங்கப்பூர் இராச்சியம்
1825-ஆம் ஆண்டு வரைபடத்தில் பழைய சுவரின் இடிபாடுகளுடன் சிங்கப்பூர் இராச்சியம்
தலைநகரம்சிங்கப்பூர்[1]
பேசப்படும் மொழிகள்பழைய மலாய்
சமயம்
இந்து மதம்; பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
அரசர் 
• 1299–1347
நீல உத்தமன்; (ஸ்ரீ திரி புவனா)
• 1347–1362
ஸ்ரீ விக்கிரம வீரா
• 1362–1375
ஸ்ரீ ராணா விக்கிரமா
• 1375–1389
ஸ்ரீ மகாராஜா
• 1389–1398
பரமேசுவரா
வரலாறு 
• நீல உத்தமனால் துமாசிக் நிறுவப்பட்டது
1299
• சயாமியப் படைகளால் முற்றுகை
1330
• இராயசநகரன் கீழ் மயாபாகித்தின் முற்றுகை
1350
• மயாபாகித் படையெடுப்பு; பரமேசுவரா மலாயா தீபகற்பத்திற்குள் தப்பிச் சென்றது; மலாக்கா சுல்தானகம் உருவாக்கம்
1398
தற்போதைய பகுதிகள்சிங்கப்பூர்

சிங்கபுர இராச்சியம் அல்லது சிங்கப்பூர் இராச்சியம் (ஆங்கிலம்: Kingdom of Singapura அல்லது Kingdom of Singapore; மலாய்: Kerajaan Singapura Lama அல்லது Kerajaan Singapura; சீனம்: 新加坡王国) என்பது சிங்கப்பூரில் இந்திய மயமாக்கப்பட்ட ஒரு மலாய் இந்து - பௌத்த இராச்சியம் ஆகும்.

சிங்கப்பூரின் தொடக்கக்கால வரலாற்றின் போது, புலாவ் உஜோங் (Pulau Ujong) எனும் தீவில், 1299-ஆம் ஆண்டில் சிங்கபுர இராச்சியம் உருவாக்கப்பட்டது. 1398-ஆம் ஆண்டில் அந்த இராச்சியம் வீழ்ச்சி அடையும் வரையில் துமாசிக் என்று அழைக்கப்பட்டது.

வரலாற்றாசிரியர்கள் பலர் அதன் கடைசி ஆட்சியாளரான பரமேசுவரா எனும் ஸ்ரீ இசுகந்தர் ஷா (Sri Iskandar Shah) என்பவர் மட்டுமே வரலாற்று ரீதியாக சான்றுகள் கொண்ட நபராகக் கருதுகின்றனர்.[2]

பொது[தொகு]

14-ஆம் நூற்றாண்டில் ஒரு செழிப்பான குடியேற்றம் மற்றும் ஒரு வர்த்தகத் துறைமுகம் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்துள்ளது. ஆற்று நெடுகிலும் சின்னச் சின்னக் குன்றுகள் இருந்தன. அவற்றில் ஒன்று கெனிங் குன்று.

கெனிங் குன்றை நீல உத்தமன் மேரு மலை என்று அழைத்தார். அந்த மேரு மலையில் இருந்து குடிப்பதற்கும் குளிப்பதற்கும் நன்னீர் கிடைத்தன. இப்போது அந்த இடம் கெனிங் கோட்டைக் குன்று (Fort Canning Hill) என அழைக்கப் படுகிறது. இருப்பினும் கெனிங் கோட்டை மலை எனும் பெயர்; தென்கிழக்காசிய தமிழர்களின் பயன்பாட்டுச் சொல்லாக மாறி விட்டது.

மயாபாகித் பேரரசின் தாக்குதல்[தொகு]

தொடக்கத்தில் சிங்கபுரம் ஒரு சிறிய வர்த்தகத் துறைமுகமாக இருந்தது. பின்னர் மலாய் தீவுக்கூட்டம், இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கான வர்த்தக மையமாக வளர்ச்சி பெற்றது. குறுகிய காலத்தில் விரைவான வளர்ச்சி.

இருப்பினும், அந்தக் கட்டத்தில் இரண்டு பிராந்திய வல்லரசுகள் சிங்கபுர இராச்சியத்தின் மீது உரிமை கோரி வந்தன. வடக்கில் இருந்து அயூத்தியா இராச்சியம் (Ayuthaya); தெற்கில் இருந்து மயாபாகித் பேரரசு ஆகிய அரசுகள், அரசு உரிமையில் நெருக்குதல்களைக் கொடுத்து வந்தன..

செஜாரா மெலாயு (மலாய்: Sejarah Melayu; ஆங்கிலம்: Malay Anals) குறிப்புகளும்; போர்த்துகீசிய ஆவணங்களும் (Portuguese Sources); சிங்கபுர இராச்சியத்தின் மீது இரு முறை தீவிரமான தாக்குதல்கள் நடைபெற்றன என்பதை உறுதிபடுத்துகின்றன.

ஆகக் கடைசியாக மயாபாகித் பேரரசின் தாக்குதலினால் சிங்கபுர இராச்சியம் அழிவுற்றது.[3][4][5] அதன் விளைவாக, சிங்கபுர இராச்சியத்தின் கடைசி மன்னரான பரமேசுவரா, மலாயா தீபகற்பத்திற்குள் தப்பிச் சென்றார். 1400-இல் மலாக்காவில் மலாக்கா சுல்தானகத்தை உருவாக்கினார்.

சொல் பிறப்பியல்[தொகு]

சிங்கபுரா (Singapura) எனும் பெயர் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.[6] சிங்கபுரா என்றால் "சிங்க நகரம்" என்று பொருள். சிங்க எனும் சொல் சமசுகிருதச் சொல்லான சிம்க (சமசுகிருதம்: सिंह; ஆங்கிலம்: siṃha); என்பதில் இருந்து வந்தது. சிம்க என்றால் சிங்கம்.

மற்றும் புரம் எனும் சொல் சமசுகிருதச் சொல்லான புரா (சமசுகிருதம்: पुर; ஆங்கிலம்: pūra); என்பதில் இருந்து வந்தது.[7]

வரலாறு[தொகு]

பிந்தான் தீவு[தொகு]

ராபிள்ஸ் சிங்கப்பூரில் முதமுதலில் தரையிறங்கிய இடத்தில் நீல உத்தமனின் சிலை.

நீல உத்தமன் அல்லது சாங் நீல உத்தமன் (Sang Nila Utama) என்பவர் ஒரு சிற்றசரர். இந்தோனேசியா, தென் சுமத்திராவின் பலெம்பாங்கைச் சேர்ந்த ஸ்ரீ விஜயப் பேரரசின் வாரிசுகளில் ஒருவர். சின்ன வயதில் இருந்தே ஒரு புதிய நகரத்தை உருவாக்க வேண்டும் எனும் ஆசை கொண்டவர்.

பலெம்பாங் கடல் கரையோரத் தீவுகளுக்குச் சென்று பொருத்தமான ஓர் இடத்தைத் தேடினார். அதற்காக நீல உத்தமன் பல கப்பல் பயணங்களை மேற்கொண்டார். அந்தச் சமயத்தில் பிந்தான் தீவுக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

பிந்தான் தீவு என்பது ரியாவு தீவுக் கூட்டத்தில் இருக்கிறது. பிந்தான் தீவு அப்போது ஸ்ரீ பினி (Sri Bini) எனும் மகாராணியாரின் பார்வையில் இருந்தது. ஒரு நாள் பிந்தான் தீவு தீவுக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு தீவுக்கு நீல உத்தமன் வேட்டையாடச் சென்றார்.

துமாசிக்[தொகு]

பிந்தான் தீவில் தஞ்சோங் பெம்பான் (Tanjong Bemban) எனும் இடத்தில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் ஒரு கலைமான் கண்ணில் பட்டது. அதை விரட்டிக் கொண்டு ஒரு குன்றின் மீது ஏறினார்கள். குன்றின் உச்சியை அடைந்ததும் அந்தக் கலைமான் திடீரென்று மறைந்து விட்டது. அந்த மான் மறைந்த இடத்தில் ஒரு பெரிய கல் பாறை இருந்தது. நீல உத்தமன் அந்தக் கல் பாறையின் மீது ஏறினார்.

கல் பாறையின் மேலே ஏறிப் பார்த்தார். அப்போது ஒரு தீவு தெரிந்தது. வெள்ளை மணல் பரவிய கடல் கரை, வெள்ளைக் கம்பளம் விரித்தது போல காட்சி அளித்தது. அந்த இயற்கையின் எழில் காட்சி நீல உத்தமனைப் பெரிதும் கவர்ந்து விட்டது.

அதிசயமான விலங்கு[தொகு]

அந்தத் தீவின் பெயர் துமாசிக் (Temasek) என்று அவருடைய உதவியாளர்கள் கூறினார்கள். அப்படி என்றால் அந்தத் தீவின் அருகில் போய்ப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். தீவை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் போது பயங்கரமான புயல்காற்று வீசியது.

கப்பல் மூழ்கி விடும் ஆபத்தான நிலைமையும் ஏற்பட்டது. இருந்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து துமாசிக் சென்று அடைந்தனர். இளவரசர் நீல உத்தமன் இப்போதைய சிங்கப்பூரின் முகத்துவாரத்தில் இறங்கினார். அடுத்து காட்டிற்குள் வேட்டையாடப் புறப்பட்டார்.

வேட்டையாடும் போது திடீரென்று ஓர் அதிசயமான விலங்கைப் பார்த்தார். அதன் உடல் சிகப்பாக இருந்தது. தலைப் பகுதி கறுப்பாகவும்; நெஞ்சுப் பகுதி வெள்ளையாகவும் இருந்தன. அந்த விலங்கு தோற்றத்தில் கம்பீரமாகவும் தோன்றியது.

சிங்கபுரம்[தொகு]

அது என்ன மிருகமாக இருக்கும் என்று தன்னுடைய முதல் அமைச்சர் தெமாங் லெபார் தாவுன் (Demang Lebar Daun) என்பவரை நீல உத்தமன் கேட்டார். அதற்கு முதல் அமைச்சர் சிங்கம் என்று சொன்னார்.[8] சிங்கத்தைப் பார்த்தது நல்ல ஒரு சகுனம் என்று கருதி அந்த இடத்திற்குச் சிங்க புரம் (ஆங்கிலம்: Lion City; மலாய்: Singapura); என்று பெயர் வைத்தார்.[9]

சிங்கம் + புரம் = சிங்கபுரம். இதைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கானச் சான்றுகள் இல்லை என்பது தெரிய வருகிறது. நீல உத்தமன் பார்த்தது ஒரு புலியாக இருக்கலாம் அல்லது ஒரு வெள்ளை நரியாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர்.[10][11]

மாற்றுக் கருத்துகள்[தொகு]

ஸ்ரீ திரி புவானா என்ற நபர் கற்பனையாக இருக்கலாம் என்றும்; சிங்கம் எனும் விலங்கில் இருந்து சிங்கபுரம் உருவான கதையும் கற்பனையாக இருக்கலாம் என்றும்; வரலாற்று அறிஞர்கள் சிலர் நம்புகிறார்கள்.

சிங்கப்பூர் எனும் பெயரின் தோற்றத்திற்கான பல மாற்றுப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்பு காலத்தில், அதாவது 1300-ஆம் ஆண்டுகளில், பலெம்பாங் அரச அவையில் ஒரு சிங்க சிம்மாசனம் இருந்தது.

அந்தச் சிங்க சிம்மாசனத்தை நினைவு கொள்ளும் வகையிலும்; ஜாவானிய மயாபாகித் பேரரசிற்குச் சவாலாக அமையும் வகையிலும்; துமாசிக்கை மீண்டும் நிறுவியதன் அடையாளமாகவும்; சிங்கபுரா என்ற பெயர் பரமேசுவராவினால் முன்மொழியப்பட்டு இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள்.[12]

மேற்கோள்[தொகு]

  1. 1. Linehan, W. (1947, December). The kings of 14th century Singapore. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, 20(2)(142), 117, 120. Retrieved from JSTOR; The kings of Singapore. (1948, February 26). The Straits Times, p. 4. Retrieved from NewspaperSG
  2. Miksic 2013, ப. 154
  3. Tsang & Perera 2011, ப. 120
  4. Sabrizain
  5. Abshire 2011, ப. 19&24
  6. "Temasek/Singapora". HistorySG.
  7. Ernst Eichler, தொகுப்பாசிரியர் (14 July 2008). Namenforschung / Name Studies / Les noms propres. 1. Halbband. Walter de Gruyter. பக். 905. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783110203424. https://books.google.com/books?id=ck1CLzJq9vAC&pg=PA905. 
  8. "Pusat Rujukan Persuratan Melayu: Search: Singa". Dewan Bahasa dan Pustaka.
  9. Dr John Leyden and Sir Thomas Stamford Rffles (1821). Malay Annals. Longman, Hurst, Rees, Orme, and Brown. பக். 40–44. https://archive.org/details/in.ernet.dli.2015.83132. 
  10. Michael O'Mara (1999). Facts About the World's Nations. H. W. Wilson. பக். 830. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8242-0955-1. https://archive.org/details/factsaboutworlds0000unse_d4k5. 
  11. Commonwealth Secretariat (2004). Commonwealth Yearbook 2006. Commonwealth Secretariat. பக். 348. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9549629-4-4. 
  12. Turnbull (2009), ப. 21-22.

நூல்கள்[தொகு]


மேலும் காண்க[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கபுர_இராச்சியம்&oldid=3911823" இலிருந்து மீள்விக்கப்பட்டது