கம்பார் போர்

ஆள்கூறுகள்: 4°18′N 101°09′E / 4.300°N 101.150°E / 4.300; 101.150
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பார் போர்
Battle of Kampar
Pertempuran Kampar
பசிபிக் போர்
இரண்டாம் உலகப் போர் பகுதி

கம்பார் போரில், பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படை (1941–1942)
நாள் 30 டிசம்பர் 1941 – 2 சனவரி 1942
இடம் கம்பார், பேராக், பிரித்தானிய மலாயா
பிரித்தானிய கூட்டுப்படை வெற்றி
பிரிவினர்
 United Kingdom  சப்பான்
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஆர்க்கிபால்ட் பாரிஸ்

மலாயா ஒன்றியம் அட்னான் சாயிடி

சப்பான் தக்குரோ மாட்சுயி
பலம்
1,300 தரைப்படை[1] 9,000 தரைப்படை
200 தகரிகள்
100 பீரங்கிகள்
இழப்புகள்
150 பேர் கொல்லப்பட்டனர்
(சப்பானிய மதிப்பீடு)
500 பேர் கொல்லப்பட்டனர்
(சப்பானிய மதிப்பீடு)

கம்பார் போர் (ஆங்கிலம்: Battle of Kampar; மலாய்: Pertempuran di Kampar); என்பது இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படைக்கும், அரச சப்பானிய இராணுவத்தின் 5-ஆவது பிரிவிற்கும் இடையே தீபகற்ப மலேசியா, பேராக், கம்பார் மாவட்டம், கம்பார் நகரத்தில் 30 டிசம்பர் 1941 முதல் 2 சனவரி 1942 பரை நடைபெற்ற போரைக் குறிப்பிடுவதாகும்.

1941 டிசம்பர் 27-ஆம் தேதி, கோலாலம்பூர் அரச வானூர்தி நிலையத்தை சப்பானியர்கள் கைப்பற்றுவதைத் தடுக்கும் முயற்சியில், 11-ஆவது இந்திய தரைப்படை பிரிவுக்கு, கம்பார் நகரத்தில் முகாமிட கட்டளையிடப்பட்டது. அந்த நேரத்தில், கம்பார் நகரம் ஓர் ஈயச் சுரங்க நகரமாக இருந்தது.

கம்பார் நகரம் பல மலைப்பகுதிகளைக் கொண்ட இடமாகும். அந்த வகையில் அந்த நகரம், பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படைக்கு, ஒரு வலுவான தற்காப்பு நிலையை வழங்கும் இடமாக இருந்தது. அவ்வாறு செய்வதன் மூலம், தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் கோத்தா பாரு போரில் ஈடுபட்டு இருந்த பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 9-ஆவது தரைப்படைப் பிரிவை அங்கிருந்து பின்வாங்கச் செய்யலாம்; அத்துடன் முன்னேறி வரும் சப்பானியப் படைகளைச் சில நாட்களுக்குத் தாமதப் படுத்தலாம் என்றும் கணிக்கப்பட்டது.

பொது[தொகு]

கம்பார் போரில் சப்பானியர்கள் பயன்படுத்திய 97 Te-Ke ரக கவச வாகனங்கள்

1941 டிசம்பர் 30-ஆம் தேதி, கம்பாரில் இருந்த நேச நாட்டுப் படைகளைச் சப்பானியர்கள் சூழ்ந்து கொண்டனர். மறுநாள் சண்டை தொடங்கியது. 1942-ஆம் ஆண்டு சனவரி 2-ஆம் தேதி நேச நாட்டுப் படைகள் பின்வாங்குவதற்கு முன் நான்கு நாட்களுக்கு கம்பாரில் தாக்கு பிடிக்க முடிந்தது; அத்துடன் சப்பானியர்களின் முன்னேற்றத்தைச் சற்றே தாமதப் படுத்தவும் முடிந்தது.

கம்பார் நகரத்திற்கு அருகில் பச்சை மலைமுகடு என்று அழைக்கப்படும் ஓர் உயரமான மலைமுகடு உள்ளது. அதற்கு அருகிலுள்ள தாம்சன் மலைமுகடு, கென்னடி மலைமுகடு மற்றும் கல்லறை மலைமுகடு எனும் மலைமுகடுகள் அனைத்தும் கம்பார் - ஈப்போ பிரதான சாலைக்கு எதிர்ப்புறத்தில் உள்ளன. 4,070 அடி உயரம் கொண்ட பூஜாங் மலாக்கா மலையின் உச்சியில் இந்த மலை முகடுகள் உள்ளன.

பிரித்தானிய நிலைகள்[தொகு]

காடுகளால் மூடப்பட்ட பூஜாங் மலாக்கா மலையைச் சுற்றிலும் சதுப்பு நிலங்களால் சூழப்பட்ட ஈயச் சுரங்கங்கள் உள்ளன. பூஜாங் மலாக்கா மலை கம்பார் நகரத்திற்கு கிழக்கே அமைந்துள்ளது. மலையின் செங்குத்தான சரிவுகள் கம்பார் சாலை வரை நீடிக்கின்றன. கம்பார் நகரமும் பூஜாங் மலாக்கா மலையும் சப்பானிய கட்டுப்பாட்டிற்குள் சிக்கினால், சப்பானிய இராணுவத்தின் 5-ஆவது பிரிவு கம்பாரில் சிறந்த ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். அத்துடன் கம்பார் நகரம் கைப்பற்றப்பட்டால், அது கிந்தா பள்ளத்தாக்கை கைப்பற்றியது போலாகும் என்பதையும் நேச நாட்டுப் படைகள் நன்கு அறிந்திருந்தன.[2]

இருப்பினும், கோலாலம்பூரில் இருந்த உயர்மட்ட பிரித்தானிய இராணுவ அதிகாரிகளின் தவறான கணிப்புகளினால், நேச நாட்டுப் படைகள் ஏற்கனவே ஜித்ரா போர், குரோ போர், குரூண் போர்களில் பெரும் பாதிப்புகளை அடைந்தன. பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படையில் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. கெடா மாநிலம் சப்பானியர்களின் பிடியில் சிக்கியதும், அடுத்தடுத்த போர்களில் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படைக்குப் பதிலாக பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 12-ஆவது தரைப்படை போர் முனைக்கு அனுப்பட்டது.

புதிய படைக்கு வெற்றிகள்[தொகு]

பேராக் மாநிலத்தின் வரைபடம். கம்பார் நகரம், கிந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வடக்கு மலாயாவில் நடைபெற்ற அடுக்கடுக்கான போர்களில், இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படையினர் தொடர்ந்தால் போல பங்கெடுத்துக் கொண்டதால் சோர்வு அடைந்து விட்டனர். அத்துடன் சரியான நேரத்தில் சரியான தகவல்கள் அவர்களிடம் போய்ச் சேராததால் நடுக்காடுகளில் அவர்கள் கைவிடப்பட்டனர். அதனால் அந்தப் படையினருக்கு பெரிய அளவில் உயிரிழப்புகள் எற்பட்டன. பல நூறு வீரர்கள் காடுகளில் காணாமல் போய் விட்டனர். ஜித்ரா போரில் மட்டும் நூற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் பலியானார்கள்.

எனினும் கம்பார் போரில், பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படைக்கு பதிலாக பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 12-ஆவது தரைப்படை களம் இறக்கப்பட்டது. தொடக்கத்தில் புதிய தரைப்படை சில வெற்றிகளைக் கண்டது. கம்பார் போரில் சப்பானியர்களுக்கு பலத்த உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன.

15-ஆவது/6-ஆவது படைப்பிரிவு[தொகு]

சோர்ந்து போன 11-ஆவது தரைப்படையை மறுசீரமைப்பு செய்வது; கம்பாரில் தற்காப்புத் நிலைப்பாட்டை உறுதிபடுத்துவது; சப்பானியர்கள் படை எடுத்து வரும் நேரத்தை கூட்டுவது; போன்ற இராணுவச் செயல்பாடுகளை நிறைவேற்றுவதே இந்திய இராணுவத்தின் 12-ஆவது தரைப்படையின் முக்கிய நோக்கமாகும். அதற்காகத்தான் 12-ஆவது தரைப்படை கம்பாருக்கு அனுப்பப்பட்டது.[3]

பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படையின் மூன்று படைப்பிரிவுகள் மலாயா போர்களில் களம் இறக்கப்பட்டன. கம்பார் போர் நடக்கும் போது, 11-ஆவது தரைப்படையின் 6-ஆவது மற்றும் 15-ஆவது பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு 15-ஆவது/6-ஆவது படைப்பிரிவு (15th/6th Brigade) என புதிய பிரிவாக உருவாக்கப்பட்டது.

படையணிகள்[தொகு]

சப்பானிய படையெடுப்பினால் பினாங்கில் ஏற்பட்ட சேதங்கள்
மலாயா போர்களுக்கு சப்பானிய தரப்பில் தலைமை தாங்கிய தோமோயுகி யமாசிதா

15-ஆவது/6-ஆவது படைப்பிரிவில், மேலும் சில பிரித்தானிய இந்தியப் படையணிகளும் இணைக்கப்பட்டன. இந்தப் படையணிகளில் உள்ளர்கள் ஏற்கனவே நடந்த போர்களில் உயிர் தப்பியவர்கள் ஆகும்.

  • 1-ஆவது லெய்செஸ்டர்சைர் படையணி (1st Leicestershire Regiment);
  • 2-ஆவது கிழக்கு சுரே படையணி (2nd East Surreys);
  • 1/8வது பஞ்சாப் படையணி (1/8th Punjab Regiment)
  • 2/9வது ஜாட் படையணி (2/9th Jat Regiment)

மேலும் எஞ்சியிருந்த மூன்று படையணிகளும் கம்பார் நகரத்தின் தென்பகுதியைப் பாதுகாக்க நிறுத்தி வைக்கப்பட்டன.

  • 1/14-ஆவது பஞ்சாப் படையணி (1/14th Punjab Regiment),
  • 5/14-ஆவது பஞ்சாப் படையணி (5/14th Punjab Regiment)
  • 2/16-ஆவது பஞ்சாப் படையணி (2/16th Punjab Regiment)

இந்த படை அணிகள் அனைத்தும் ஒரே 15-ஆவது/6-ஆவது படைப்பிரிவின் கொண்டு வரப்பட்டாலும் எண்ணிக்கையில் 1,600 பேர் மட்டுமே இருந்தனர். இதில் 28-ஆவது கூர்க்கா படைப்பிரிவினர் (28th Gurkha Brigade), உடல் வலிமையிலும்; மன உறுதியிலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். 28-ஆவது கூர்க்கா படைப்பிரிவைச் செர்ந்த மூன்று கூர்க்கா படையணிகள் ஜித்ரா, குரோ, குரூண், ஈப்போ பகுதிகளில் நடைபெற்ற போர்களில் பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்து பாதிக்கப்பட்டு இருந்தனர்.[2]

சப்பானிய நிலைகள்[தொகு]

சப்பானிய அரச இராணுவத்தின் 5-ஆவது படைப்பிரிவின்; 41-ஆவது தரைப்படையைச் சேர்ந்த 4000 சப்பானிய வீரர்கள் கம்பார் போரில் களம் இறக்கப்பட்டனர். சப்பானிய அரச இராணுவத்தின் 5-ஆவது படைப்பிரிவின் தளபதி தக்குரோ மாட்சுயி. இவர் ஒட்டு மொத்த மலாயா தரைப் படைகளுக்கும் தளபதியாக இருந்தார்.[4]

சப்பானிய அரச இராணுவத்தின் 5-ஆவது படைப்பிரிவில்; கணிசமான அளவிற்கு 11-ஆவது தரைப்படை; மற்றும் 41-ஆவது தரைப்படையைச் சேர்ந்த போர் வீரர்களும் இருந்தனர்.

பின்விளைவுகள்[தொகு]

பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படை வீரர்கள்

கம்பார் போர் 30 டிசம்பர் 1941 தொடங்கி 2 சனவரி 1942 வரையில் நான்கு னாட்களுக்கு நடைபெற்றது. பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படையும்; 12-ஆவது தரைப்படையும்; சப்பானிய தாக்குதல்களை எதிர்த்துப் போராட முடிந்தது. சப்பானியர்கள் மீது பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தின. மலாயா போர்களில் சப்பானியர்கள் சந்தித்த முதல் கடுமையான தோல்வி இதுவாகும்.[5][6]

சப்பானிய அரச இராணுவத்தின் 41-ஆவது தரைப்படைப் பிரிவுக்கு இந்தப் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளினால், பின்னர் சிங்கப்பூர் மீதான படையெடுப்பில், அந்தப் படைப்பிரிவினால் பங்கேற்க முடியாமல் போனது. அந்த நேரத்தில் சப்பானிய செய்தித்தாள்கள்; நேச நாடுகளின் இராணுவத்திற்கு 150 உயிரிழப்புகள் என்றும், சப்பானிய இராணுவத்திற்கு 500 உயிரிழப்புகள் என்றும் செய்திகளை வெளியிட்டன. ஆனால் உண்மையான சப்பானிய உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.[7]

நேச நாடுகள் இந்தப் போரில் வெற்றி பெற்றன. மலாயாவில் நடந்த போர்களில் இதுவே நேச நாடுகளின் முதல் வெற்றியாகும். இருதாலும், பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 11-ஆவது தரைப்படைக்கு, கம்பார் பகுதியில் தொடர்ந்து ஆயுதங்கள், மருந்துகள் கிடைக்காததால், அந்தப் படை சிலிம் ரிவர் நோக்கிப் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிலிம் ரிவர் மலைப்பகுதியில் 1942 சனவரி மாதம் 6-ஆம் தேதி, மேலும் ஒரு போர் நடைபெற்றது. அதற்குச் சிலிம் ரிவர் போர் என்று பெயர்.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ken, Orrill. "Remembering the Battle of Kampar". Archived from the original on 28 June 2008. பார்க்கப்பட்ட நாள் 5 April 2009.
  2. 2.0 2.1 Smith, Colin (2006). Singapore Burning. பக். 306–317. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-101036-6. https://archive.org/details/singaporeburning0000coli. 
  3. Thompson, Peter (2005). The Battle for Singapore: The True Story of the Greatest Catastrophe of World War II. London: Portrait. பக். 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7499-5085-4. https://archive.org/details/battleforsingapo0000thom. 
  4. Loong, Chye Kooi. "Battle of Kampar". Khalsa Diwan Malayasia. Archived from the original on 2 August 2008. பார்க்கப்பட்ட நாள் 21 September 2009.
  5. Thompson pg. 187
  6. Owen, Frank (2001). The Fall of Singapore. London: Penguin. பக். 94. 
  7. Warren, Alan (2006). Britain's Greatest Defeat: Singapore 1942 (Illustrated ). Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85285-597-5. https://books.google.com/books?id=zosKzAoocu8C. 
  8. Thompson pg. 187–188
  9. Owen pg. 94–95

மேலும் படிக்க[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பார்_போர்&oldid=3937450" இலிருந்து மீள்விக்கப்பட்டது