கோத்தா பாரு போர்

ஆள்கூறுகள்: 6°03′59″N 102°23′59″E / 6.06639°N 102.39972°E / 6.06639; 102.39972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தா பாரு போர்
Battle of Kota Bharu
Pertempuran Kota Bharu
பசிபிக் போர்
இரண்டாம் உலகப் போர் பகுதி

சப்பானியப் படைகள் தரையிறங்கிய மையங்களில் ஒன்றான கோத்தா பாரு, பாச்சோக் கடற்கரை
நாள் 8 டிசம்பர் 1941
இடம் கோத்தா பாரு, கிளாந்தான், பிரித்தானிய மலாயா
சப்பானிய வெற்றி
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு:

 ஆத்திரேலியா
 நியூசிலாந்து

சப்பானியப் பேரரசு சப்பானியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ராபர்ட் புரூக்-போபம்
ஐக்கிய இராச்சியம் ஆர்தர் பெர்சிவல்[1]
ஐக்கிய இராச்சியம் லூயிஸ் ஈத்
ஐக்கிய இராச்சியம் ஆர்தர் பார்ஸ்டோ
ஐக்கிய இராச்சியம் பில்லி கீ
ஐக்கிய இராச்சியம் ஆர்தர் கம்மிங்
ஐக்கிய இராச்சியம் கான்வே புல்போர்ட்
சப்பானியப் பேரரசு தோமோயுகி யமாசிதா
சப்பானியப் பேரரசு இரோசி தக்குமி
சப்பானியப் பேரரசு ரென்யா முத்தாகுச்சி
சப்பானியப் பேரரசு சினதாரோ அசிமோத்தோ [2]
படைப் பிரிவுகள்
பிரித்தானிய இந்தியா:
இராணுவப் படை III
9-ஆவது தரைப்படை
11-ஆவது தரைப்படை
27-ஆவது RAF வான்படை[3]
6-ஆவது RAF வான்படை[3]
62-ஆவது RAF வான்படை[3]
205-ஆவது RAF வான்படை
ஆஸ்திரேலியா:
1-ஆவது RAAF வான்படை[4]
8-ஆவது RAAF வான்படை[5]
21-ஆவது RAAF வான்படை[6]
453-ஆவது RAAF வான்படை[7]
நியூசிலாந்து:
488-ஆவது RNZAF வான்படை
சப்பானிய இராணுவம்:
25-ஆவது இராணுவப் பிரிவு:
5-ஆவது இராணுவப் பிரிவு
18-ஆவது இராணுவப் பிரிவு
சப்பானிய கடல் படை
பலம்
N/A 1 இலகுரக கப்பல்
4 நாசகாரிகள்
2 கண்ணிவெடி அகற்றிகள்
1 நீர்மூழ்கிக் கப்பல்
3 போர்க் கப்பல்கள் [8]
5,300 காலாட்படை
இழப்புகள்
68 இறப்புகள்
360 காயம் அடைந்தோர்
37 காணாமல் போனவர்கள்[9]
3 போர்க் கப்பல்கள் சேதம்[8]
320 இறப்புகள்
538 காயம் அடைந்தோர்[9][10]

கோத்தா பாரு போர் (ஆங்கிலம்: Battle of Kota Bharu; மலாய்: Pertempuran di Kota Bharu); என்பது இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்தியாவிற்கும், சப்பானியப் பேரரசிற்கும் இடையே தீபகற்ப மலேசியா, கிளாந்தான், கோத்தா பாரு கடற்கரைப் பகுதிகளில் 1941 டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற்ற போரைக் குறிப்பிடுவதாகும்.

பேர்ள் துறைமுகத் தாக்குதலுக்கு முன் 1941 டிசம்பர் 8-ஆம் தேதி, மலேசிய உள்ளூர் நேரம் நள்ளிரவுக்குப் பிறகு கோத்தா பாரு போர் தொடங்கியது. இந்தப் போர் பசிபிக் போர் தொடரின் முதல் கட்ட பெரிய போராகும்.[11]

ஆஸ்திரேலிய வான்படைத் தாக்குதல்கள்[12]; இந்திய இராணுவத்தின் கடலோரப் பாதுகாப்பு; இந்திய இராணுவத்தின் பீரங்கித் தாக்குதல்கள்; போன்றவற்றால் இந்தப் போரில் சப்பானியருக்கு ஏற்பட்ட இழப்புகள் குறிப்பிடத்தக்கவை.[13]

பொது[தொகு]

தீபகற்ப மலேசியாவின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரான கோத்தா பாரு நகரம், 1941-ஆம் ஆண்டில், பிரித்தானிய வான்படை (RAF) மற்றும் ஆஸ்திரேலிய வான்படை (RAAF) ஆகியவற்றுக்கு வடக்கு மலாயா வான்படை தளமாக இருந்தது.

கோத்தா பாரு வானூர்தி ஓடுதளம், பாசீர் பூத்தே கோங் கெடாக் வானூர்தி ஓடுதளம் மற்றும் மாச்சாங் வானூர்தி ஓடுதளம் ஆகிய ஓடுதளங்கள், அப்போதைய மலாயா வான்படைகளுக்கான ஓடுதளங்களாக விளங்கின.

சப்பானிய படையெடுப்புத் திட்டங்கள்[தொகு]

முதல் திட்டம்: சப்பானிய இராணுவத்தின் 5-ஆவது தரப்படையை பட்டாணி மற்றும் சோங்கலா கடற்கரை நகரஙகளில் தரையிறக்குவது; இந்தக் கடற்கரை நகரங்கள் தாய்லாந்து கிழக்குக் கடற்கரையில் உள்ளன.

இரண்டாவது திட்டம்: கோத்தா பாரு கடற்கரைப் பகுதிகளில் சப்பானிய இராணுவத்தின் 18-ஆவது தரப்படையை தரையிறக்குவது; இந்தக் கடற்கரை நகரம் தீபகற்ப மலேசியாவின் வடகிழக்கு கடற்கரையில் உள்ளது.

மூன்றாவது திட்டம்: தாய்லாந்தில் தரையிறங்கும் படைகள், தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரையைக் கடந்து [கெடா]] மாநிலத்தைக் கைப்பற்றுவது;

நான்காவது திட்டம்: தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் தரையிறங்கும் படைகள், மலாயாவின் கிழக்கு கடற்கரையைக் கைப்பற்றிய பின்னர, கோத்தா பாருவிலிருந்து தீபகற்ப மலேசியாவின் உட்புறத்தை கைப்பற்றுவது;

பிரித்தானிய தற்காப்புத் திட்டங்கள்[தொகு]

ஆஸ்திரேலிய வான்படையைச் சேர்ந்த லாக்கீட் அட்சன் உளவு வானூர்தி 1941.

தாய்லாந்தில் இருந்து தொடுக்கப்படும் சப்பானியத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதே பிரித்தானியக் கூட்டு இராணுவத்தின் தலையாயத் திட்டம் ஆகும்; அதில் தெற்கு தாய்லாந்தில் போலியான தாகுதல்களை மேற்கொள்வதும் அடங்கும்.

இதற்கு குரோ நடவடிக்கை என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலமாக, தீபகற்ப மலாயாவின் முக்கிய நிலைகளைத் தற்காலிகமாகப் பாதுகாப்பு வழங்கலாம்; மற்றும் எதிரி தாக்குதல்களை தாமதப்படுத்தலாம் என்றும் கணிக்கப்பட்டது.

இந்திய இராணுவத்தின் 9-ஆவது தரைப்படை[தொகு]

மலாயாவின் கிழக்கு கடற்கரை பாதுகாப்பிற்காக பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 9-ஆவது தரைப்படை, மலாயாவின் கிழக்கு கடற்கரையின் வடக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டது. ஆஸ்திரேலிய இராணுவத்தின் 8-ஆவது தரைப்படையின் மூன்றில் இரண்டு பிரிவுகள், மலாயாவின் கிழக்கு கடற்கரையின் தெற்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டன. எஞ்சிய ஒரு பிரிவு அம்போன் தீவுக்கும்;[14] மேற்கு திமோர் தீவிற்கும்;[15] நியூ கினி தீவிற்கும் [16] சிறுசிறு பிரிவுகளாக அனுப்பப்பட்டன.

படையெடுப்பு[தொகு]

1942-ஆம் ஆண்டில், நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்ட சப்பானிய 22-ஆவது வான்படையின் மிட்சுபிசி ஏ6எம் ரக வானூர்தி.

மலாயா மீதான தாக்குதலுக்கு சப்பானிய இராணுவத்தின் 25-ஆவது இராணுவப் பிரிவின் தளபதி தோமோயுகி யமாசிதா தலைமை தாங்கினார். 25-ஆவது இராணுவப் பிரிவு, மக்கள் சீனக் குடியரசு, ஆய்னான், சாமா துறைமுகத்தில் இருந்து 1941 டிசம்பர் 4-ஆம் தேதி புறப்பட்டது. வரும் வழியில், பிரெஞ்சு இந்தோசீனாவின் தெற்கு வியட்நாமில் உள்ள சைகோன் துறைமுகத்தில், கூடுதல் போர்வீரர்களைக் கொண்ட கப்பல்கள் தோமோயுகி யமாசிதாவின் அணியில் சேர்ந்து கொண்டன.

1941 டிசம்பர் 5-ஆம் தேதி, ஆஸ்திரேலிய வான்படையைச் சேர்ந்த லாக்கீட் அட்சன் உளவு வானூர்தி, சப்பானியக் கப்பல்களைக் கவனித்து விட்டது. சிங்கப்பூரில் இருந்த பிரித்தானிய இராணுவத் தலைமையகத்திற்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியது.

நேச நாடுகளின் முதல் உயிரிழப்புகள்[தொகு]

ஆஸ்திரேலிய வான்படையைச் சேர்ந்த லாக்கீட் அட்சன் வானூர்தி. அவாசிசான் மாரு சப்பானிய கப்பலைச் செயலிழக்கச் செய்த வான்படை ஊர்தி.

தூர கிழக்கு நாடுகளுக்கான பிரித்தானியக் கடற்படைத் தளபதி, சர் தாமஸ் பிலிப்சு அடுத்தக் கட்ட நடவடிக்கைகலில் இறங்கினார். அந்தக் கட்டத்தில் பிரித்தானிய போர்க் கப்பலான எச்எம்எஸ் ரிபல்ஸ், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரத்திற்குப் பயணத்தை மேற்கொன்டு இருந்தது. உடனே அந்தக் கப்பலின் பயணத்தை ரத்து செய்துவிட்டு, முடிந்தவரை விரைவாக சிங்கப்பூருக்குத் திரும்பும்படி கட்டளையிடப்பட்டது.[17]

1941 டிசம்பர் 7-ஆம் தேதி, பிரித்தானிய 205-ஆவது வான்படையின் கேடலினா கடல் வானூர்தி மூலமாக, சப்பானியக் கப்பல்கள், தென்சீனக் கடலில் மீண்டும் பார்க்கப்பட்டன. ஆனால் சிங்கப்பூரில் உள்ள வான்படைத் தலைமையகத்திற்கு செய்தியை அனுப்புவதற்கு முன்னர், கேடலினா கடல் வானூர்தி, ஐந்து நகாஜிமா கி-27 குண்டுவீச்சு வானூர்திகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.[18] கடல் வானூர்தியின் தலைமை அதிகாரி பேட்ரிக் பெடல்; மற்றும் அவரின் ஏழு பணியாளர்களும் உயிரிழந்தனர். அந்த நிகழ்வே, சப்பானுடனான போரில் நேச நாடுகளின் முதல் உயிரிழப்புகள் ஆகும்.[17]

படையெடுப்பிற்கு முன்னர் சப்பானியர்கள், ஒரு சிறிய எண்ணிக்கையிலான உள்ளூர் மக்களை "ஆமை சங்கம்" என்ற ஓர் அமைப்பில் சேர்த்து இருந்தனர். அப்போதைய மலாயா காவல்துறையும் இதைப்பற்றி அறிந்திருந்தது. கோத்தா பாருவில் அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள், சப்பானியர்கள் படையெடுப்பு செய்வதற்கு உதவிகளைச் செய்தனர்; மற்றும் வழிகாட்டிகளாகவும் செயல்பட்டனர். இவற்றை அறிந்து கொண்ட மலாயா காவல்துறை; சப்பானியர்கள் தரையிறங்குவதற்கு சற்று முன்பு அந்த அமைப்பின் தலைவர்கள் சிலரைக் கைது செய்தது.[19]

கோத்தா பாருவில் சப்பானியப் படைகள்[தொகு]

மலாயாவில் சப்பானியப் படையெடுப்பிற்கு தலைமை தாங்கிய சப்பானிய இராணுவத் தளபதி தோமோயுகி யமாசிதா

1941 டிசம்பர் 7-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு, கோத்தா பாரு கடற்கரைகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள், கடற்கரையில் இருந்து சுமார் 3 கிமீ (1.9 மைல்) தொலைவில் மூன்று பெரிய நிழல் வடிவங்களைக் கண்டனர்: அவை சப்பானிய கடற்படைக் கப்பல்கள்; அவாஜிசான் மாரு, அயடோசன் மாரு மற்றும் சகுரா மாரு. அந்தக் கப்பல்களில் 5,200 போர் வீரர்கள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவில் நடந்த போர்களில் படைவீரர்களாக அனுபவம் பெற்றவர்கள்.[17]

சப்பானியரின் மலாயா படையெடுப்புப் படை, சப்பானிய அரச இராணுவத்தின் 18-ஆவது படையைச் சேர்ந்தது. தாக்குதல் படைகள் 56-ஆவது தரைப் படைப்பிரிவைச் சேர்ந்தவை. அத்துடன் இந்தத் தாக்குதலுக்கு இராணுவத்தின் 18-ஆவது படையைச் சேர்ந்த மலை பீரங்கிப் படைப்பிரிவு; 12-ஆவது பொறியாளர் படைப்பிரிவு; 18-ஆவது சைகைப் பிரிவு; 12-ஆவது போக்குவரத்துப் பிரிவு; 18-ஆவது பிரிவு மருத்துவப் பிரிவு; 18-ஆவது மருத்துவப் பிரிவின் கள மருத்துவமனைகள்; ஆகியவையும் அடங்கும். இந்த சப்பானியத் தாக்குதல் படைக்கு சினதாரோ அசிமோத்தோ தலைமை தாங்கினார்.[17]

முதல் குண்டுவீச்சு[தொகு]

பிரித்தானியா; ஆஸ்திரேலியா வான்படையைச் சேர்ந்த பவளோ வானூர்திகள் (1941).

1941 டிசம்பர் 8-ஆம் தேதி, மலாயா நேரப்படி, முன்னிரவு 00:30 மணிக்கு (தோக்கியோ நேரப்படி 2:00 டிசம்பர் 8) குண்டுவீச்சுகளுடன் படையெடுப்பு தொடங்கியது. அதே நேரத்தில்தான் சப்பானிய வான்படையின் கேரியர் ரக வானூர்திகள் பேர்ள் துறைமுகத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தன. பேர்ள் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்த வான்படை வானூர்திகளுக்கும், இங்கு கோத்தா பாருவில் குண்டுவீச்சுகள் நடத்திய வான்படை வானூர்திகளுக்கும், இடைவெளி நேரம் ஏறக்குறைய 50 நிமிடங்கள் ஆகும்.

பேர்ள் துறைமுகத் தாக்குதல், மலாயா நேரப்படி, பின்னிரவு 01:48 மணிக்கு (ஹவாய் நேரம்: டிசம்பர் 8 காலை 7:48) தொடங்கியது. பேர்ள் துறைமுகத் தாக்குதல் ,பொதுவாக அமெரிக்காவில் டிசம்பர் 7 தாக்குதல் என்று குறிப்பிடப்படுகிறது. கோத்தா பாருவில் சப்பானியக் கப்பல்கள் நங்கூரமிட்டதும்; கப்பல்களில் இருந்த போர்த் தளவாடப் பொருட்கள் கடற்கரையில் மிகத் துரிதமாக இறக்கப்பட்டன.

சிறிய கப்பல்கள் கடலில் மூழ்கின[தொகு]

அந்தக் கட்டத்தில் தென்சீனக் கடலில் மோசமான கடல் அலைகளின் கொந்தளிப்புகள்; மற்றும் பலத்த பருவமழைக் காற்றும் வீசியது. அதனால் சப்பானிய கடல்படையின் பல சிறிய கப்பல்கள் கடலில் மூழ்கின.[12] சப்பானிய வீரர்கள் பலரும் கடல் கொந்தளிப்பில் மூழ்கினர். இவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டபோதிலும், பின்னிரவு 00:45-க்கு முதல் சப்பானியத் தரைப்படையினர், நான்கு அணிகளாகக் கோத்தா பாரு கடற்கரையில் அணிவகுத்துச் சென்றனர்.[17]

தீபகற்ப மலாயாவின் பாதுகாப்புக்கு, பிரித்த்தானிய கூட்டு இராணுவத்தில் இரண்டு தற்காப்பு படைகள் இருந்தன. முதலாவது: 8-ஆவது இந்தியத் தரைப்படை. இதற்கு பிரிகேடியர் பி. டபிள்யூ. கீ என்பவர் தலைமை தாங்கினார்; 9-ஆவது தரைபடைக்குகு மேஜர் ஜெனரல் ஏ. இ. பார்ஸ்டோவ் என்பவர் தலைமை தாங்கினார். இந்தப் படைகளுக்கு உதவியாக, பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 21-ஆவது மலைத் தரைப்படை; மற்றும் 3/17-ஆவது டோக்ரா தரைப்படை ஆகிய படைப்பிரிவுகளும் இருந்தன. உதவிப் படைகளுக்கு லெப்டினன்ட் கர்னல் ஜி.ஏ. பிரஸ்டன் என்பவர் தளபதியாக இருந்தார்.[20]

டோக்ரா தரைப்படை[தொகு]

டோக்ரா தரைப்படைக்கு பொறுப்பு வகித்த பிரஸ்டன், 10 மைல் (16 கிமீ) நீளமான கடற்கரைப் பாதுகாப்பிற்கும் பொறுப்பாக இருந்தார். அந்தக் கடற்கரைப் பகுதி, தரையிறங்குவதற்கு சப்பானியர் தேர்ந்தெடுத்த மையப்பகுதியாகும். பிரித்தானியக் கூட்டுப் படைகள் குறுகிய கடற்கரைகளிலும் மற்றும் தீவுகளிலும் கண்ணிவெடிககை வைத்தனர்; முள்வேலிகள் மற்றும் பதுங்குமாடங்களை அமைத்தனர். டோக்ரா தரைப்படைக்கு பிரித்தானிய 5-ஆவது பீரங்கி தரைப்படையும்; 73-ஆவது பீரங்கி தரைப்படையும் உதவியாக இருந்தன. மேலும் டோக்ரா தரைப்படையின் ஒரு பகுதி, பெங்காலான் செப்பா வானூர்தி நிலையத்தை ஒட்டி நிறுத்தப்பட்டன.[21][22]

டோக்ரா தரைப்படை உடனடியாக பீரங்கி மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மூலம் சப்பானியர் மீது தீவிரமான துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். 1941 டிசம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவில், சப்பானிய படைகளின் முதல் அணியினர் கடற்கரையை நோக்கிச் சென்றனர். இதற்கிடையில் வடக்குக் கடற்கரை பகுதியில் சப்பானிய போர்வீரர்கள் சிலர் ஒரு தீவில் சிக்கிக் கொண்டனர். நேச நாட்டு விமானங்கள் தீவில் சிக்கியிருந்த வீரர்களைத் தாக்கத் தொடங்கின. இந்தத் தாக்குதலில் சப்பானியர் பலர் உயிரிழந்தனர். அதே வேளையில் டோக்ரா தரைப்படையினரின் தாக்குதல்களால் சப்பானியருக்குப் பலத்த உயிருடற் சேதங்கள் ஏற்பட்டன.[23] ஏறக்குறைய 150 சப்பானிய வீரர்கள் இறந்து இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.[22]

முடிவு[தொகு]

இந்தப் போரில், சப்பானிய கடற்படைக் கப்பல்களான அவாசிசான் மாரு, அயடோசன் மாரு மற்றும் சகுரா மாரு; ஆகியவை கணிசமான அளவுக்கு சேதமடைந்தன. ஆனால் அயடோசன் மாரு மற்றும் சகுரா மாரு மேலும் பயணம் செய்ய முடிந்த நிலையில், அவாசிசான் மாரு மட்டும் எரிந்து விட்ட நிலையில் கைவிடப்பட்டது.[24] அவாசிசான் மாருவின் பணியாளர்களில் குறைந்தது 110 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.[25]

மேலும் இந்தப் போரில் சப்பானியர் தரப்பில் 320 இறப்புகள்; மற்றும் 538 பேர் காயம் அடைந்தனர். நேச நாடுகளின் தரப்பில் 68 இறப்புகள்; மற்றும் 360 பேர் காயம் அடைந்தனர்; 37 பேர் காணாமல் போனார்கள்.[26]

மேற்கோள்கள்[தொகு]

  1. L, Klemen (1999–2000). "Lieutenant-General Arthur Ernest Percival". Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942. Archived from the original on 24 September 2011.
  2. L, Klemen (1999–2000). "Rear-Admiral Shintaro Hashimoto". Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942.
  3. 3.0 3.1 3.2 Niehorster 2020.
  4. 1 Squadron RAAF, Australian War Memorial
  5. 8 Squadron RAAF, Australian War Memorial
  6. 21 Squadron RAAF, Australian War Memorial
  7. 453 Squadron RAAF, Australian War Memorial
  8. 8.0 8.1 Hackett, Bob; Kingsepp, Sander, "IJN SENDAI: Tabular Record of Movement", Imperial Japanese Navy Page, பார்க்கப்பட்ட நாள் 4 January 2011
  9. 9.0 9.1 Warren 2002, ப. 64.
  10. Rahill, Siti, (Kyodo News) "Remembering the war's first battle", Japan Times, 10 December 2009, p. 3.
  11. Burton 2006, ப. 91: "The first major battle of the Pacific War was under way more than two hours before Japan's carrier planes descended on Hawaii."
  12. 12.0 12.1 Dull 2007, ப. 37.
  13. "The Battle of Singapore". Generals at War. National Geographic Channel. No. 6. 50 minutes in.
  14. L, Klemen (1999–2000). "The Japanese Invasion of Ambon Island, January 1942". Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942. பார்க்கப்பட்ட நாள் 4 October 2020.
  15. L, Klemen (1999–2000). "The Japanese Invasion of Dutch West Timor Island, February 1942". Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942.
  16. L, Klemen (1999–2000). "The capture of Rabaul and Kavieng, January 1942". Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942.
  17. 17.0 17.1 17.2 17.3 17.4 L, Klemen; et al. (1999–2000). "Seventy minutes before Pearl Harbor – The landing at Kota Bharu, Malaya, on December 7, 1941". Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942.
  18. Warren 2002, ப. 86.
  19. Jap fifth column in Malaya was small, Allington Kennard, The Straits Times, 24 August 1947, Page 6
  20. "Dogra Regiment". Globalsecurity.com. பார்க்கப்பட்ட நாள் 2009-05-23.
  21. Jeffreys & Anderson 2005, ப. 35.
  22. 22.0 22.1 Percival 1946.
  23. Tsuji 1997.
  24. Burton 2006, ப. 95.
  25. Dutch Submarines: The submarine KXII, Dutch Submarines, பார்க்கப்பட்ட நாள் 4 January 2011
  26. Burton 2006, ப. 96.

மேலும் படிக்க[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா_பாரு_போர்&oldid=3937289" இலிருந்து மீள்விக்கப்பட்டது