மனிதரல்லா முதனிகள் மீதான விலங்குப் பரிசோதனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆய்வகக் கூண்டுகளில் இரண்டு முதனிகள்

மனிதரல்லா முதனிகள் (non-human primates [NHPs]) தொடர்புடைய விலங்குப் பரிசோதனைகளில் மருந்துசார் மற்றும் மருத்துசாரா பொருட்களுக்கான நச்சுத்தன்மை சோதனை; எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பற்றிய ஆய்வுகள்; உடற்கூறாய்வு; நரம்பியல் ஆய்வுகள்; நடத்தையியல் மற்றும் அறிதிற ஆய்வுகள்; இனப்பெருக்க ஆய்வுகள்; மரபியல் ஆய்வுகள்; மற்றும் வேற்று உறுப்பு மாற்று சிகிச்சை (xenotransplantation) ஆய்வுகள் உள்ளிட்டவை அடங்கும். ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 65,000 மனிதரல்லா முதனிகளும், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் சுமார் 7,000 மனிதரல்லா முதனிகளும் அறிவியல் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.[1][2] இவற்றில் பெரும்பாலானவை இதற்காகவே நோக்கம் கொண்டு வளர்க்கப்படுகையில், சில காடுகளிலிருந்து பிடிக்கப்படுகின்றன.[3]

அறிவியல் பரிசோதனைகளுக்கான முதனிகளின் பயன்பாடு சர்ச்சைக்குரியது. மனிதரல்லா முதனிகள் பயன்படுத்தப்படுவதற்குக் காரணம் அவற்றின் மூளை மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு அம்சங்களை ஒத்துள்ளது. எனினும் "இந்த ஒற்றுமை அறிவியல் ரீதியாக சில நன்மைகளைக் கொண்டிருந்தாலும், கூடவே மனிதர்களைப் போலவே இந்த முதனி வகைகளும் வலியையும் துன்பத்தையும் அனுபவிக்கும் தன்மை கொண்டவை என்ற வகையில் இது அறநெறி ரீதியாக சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது" என்று நுஃபீல்ட் கவுன்சில் ஆன் பயோஎதிக்ஸ் அமைப்பு கூறுகிறது.[4] விலங்குரிமைக் குழுக்களால் விலங்கு ஆராய்ச்சிக் கூடங்கள் மீதான மிகவும் பரவலாகப் பேசப்பட்ட தாக்குதல்கள் பெரும்பாலும் முதனிகள் ஆராய்ச்சியின் விளைவாக நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. சில முதனி ஆராய்ச்சியாளர்கள் அச்சுறுத்தல்களாலும் தாக்குதல்களாலும் தங்களது ஆய்வுகளை கைவிட்டுள்ளனர்.

டிசம்பர் 2006-ல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான சர் டேவிட் வெதரால் தலைமையிலான ஒரு விசாரணைக்குழு சில ஆராய்ச்சிகளில் முதனிகளைப் பயன்படுத்துவதற்கு "வலுவான அறிவியல் மற்றும் தார்மீக காரணங்கள்" இருப்பதாகத் தெரிவித்தது.[5] இதனை உடற்கூறாய்வு ஒழிப்பிற்கான பிரித்தானிய ஒன்றியம் (British Union for the Abolition of Vivisection) கண்டித்து மறுத்தது.[5] "இந்த உணர்வும், புத்திசாலித்தனமும் கொண்ட உயிரினங்களை வாழ்நாள் முழுவதும் இங்கிலாந்து நாட்டு ஆய்வகங்களில் அடைத்துத் துன்புறுத்துவதில் உள்ள நலன்சார் மற்றும் தார்மீக காரணங்களை வெதரால் குழு அறிக்கை கூறத் தவறிவிட்டது" என்று அந்த அமைப்பு உரைத்தது.[5]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]