மீன்பிடித் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீன்பிடித் திருவிழா தமிழகத்தில் கொண்டாடப்படுகின்ற விழாக்களில் ஒன்றாகும்.

விழாக்கள்[தொகு]

தமிழகத்தில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. [1]

  • பிரிகட்டும் விழா
  • எருது கட்டு திருவிழா
  • புரவியெடுப்புத் திருவிழா [கு 1]
  • வைக்கோல் பிரி திருவிழா
  • மாம்பழம் உண்ணும் திருவிழா
  • புட்டுத்திருவிழா
  • வெற்றிலை பிரி திருவிழா
  • கலப்பை கட்டுத்திருவிழா
  • பனியாரம் சுடும் திருவிழா
  • சாராயம் படைத்து திருவிழா
  • மீன்பிடித் திருவிழா

நல்ல விளைச்சல்[தொகு]

நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காகவும், நன்றாக விளைச்சல் வேண்டும் என்பதற்காகவும், மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்பதற்காகவும் மக்கள் முழக்கமிட்டு கண்மாய் நீரில் மீன் பிடிக்கச் செல்கின்றனர். [2] மீன் பிடித்தால் நல்ல மழை பெய்யும் என்றும், மீன்பிடித் திருவிழா நடத்தாவிட்டால் வறட்சி ஏற்படும் என்றும் மக்கள் நம்புகின்றனர். <>[மீன் பிடித்தால் மழை! மதுரை அருகே மக்களின் நம்பிக்கை திருவிழா, தினமலர், 19 டிசம்பர் 2012] </ref>

வழிபாடு[தொகு]

மீன் பிடிக்கச் செல்வதற்கு முன்பாக தெய்வங்களை வழிபட்டுச் செல்கின்றனர். [2]

நடைபெறும் இடங்கள்[தொகு]

புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இவ்விழா நடைபெறுகிறது.

ஆலத்தூர்[தொகு]

விராலிமலை அருகே ஆலத்தூர் அருகேயுள்ள பெரிய கண்மாயில் அண்மையில் இவ்விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்பாக கண்மாயின் கரையிலுள்ள பிடாரியம்மன், மடை கருப்பர் சாமிகளுக்கு சிறப்பு பூசைகள் செய்கின்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர். [2]

புதூர்[தொகு]

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி அருகில் புதூர் என்னுமிடத்தில் உள்ள ஒரு பெரிய குளத்தில் விழா நடைபெற்றது. குளத்தில் தண்ணீர் குறைந்த காரணத்தினால், அதிலிருந்த அதிகமான மீன்களைப் பிடிக்க இவ்விழா கிராம மக்களால் நடத்தப்பட்டது. மீன் பிடிப்பதற்காக மீன்வலை, சேலை, வேட்டியுடன் தயார் நிலையில் வந்து மீன்களைப் பிடித்துச் சென்றனர். [3]

திருவாதவூர்[தொகு]

மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள பெரிய கண்மாயில் 400 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கதாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் சோழப்பேரேரி என அழைக்கப்பட்ட கண்மாயில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. [4]

மேலூர்[தொகு]

மதுரை அருகே மேலூர் பகுதியில் இரு இடங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. மேலூரிலுள்ள மெய்யப்பன்பட்டி கண்மாயில் இவ்விழா நடைபெற்றது. கண்மாயில் முழங்கால் அளவிற்கு இருந்த நிலையில், அது தொடர்பாக அறிவிக்கப்பட்டவுடன் ஒரே நேரத்தில் கரையில் நின்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்மாய்க்குள் இறங்கி வலை மற்றும் கச்சா மூலம் மீன்களை பிடித்தனர். இதுவரை இப்பகுதியில் நான்கு முறை இவ்விழா நடைபெற்றுள்ளது. [5] அவ்வாறே மேலூர் அருகேயுள்ள சருகுவலைப்பட்டியில் உள்ள கம்புளிக்கண்மாயில் இவ்விழா நடைபெற்றது. [6]

திருப்பத்தூர்[தொகு]

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் அருகேயுள்ள கிராமத்தில் மீன்பிடித் திருவிழாக் கொண்டாடப்படுகிறது. [7]

பிடிக்கப்படும் மீன்கள்[தொகு]

கெண்டை, கெழுத்தி, அயிரை, விரால், ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. உரிய இணைப்பில் புரவை அடுப்பு திருவிழா என்றுள்ளது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்பிடித்_திருவிழா&oldid=3717327" இலிருந்து மீள்விக்கப்பட்டது