ம. கோ. இராமச்சந்திரன்
| மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் | |
|---|---|
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் |
|
| பிறப்பு | ஜனவரி 17, 1917 நாவலப்பிட்டி, |
| இறப்பு | திசம்பர் 24 1987 (அகவை 70) தமிழ்நாடு, |
| பணி | நடிகர், அரசியல்வாதி |
| வாழ்க்கைத் துணை | தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி |
| பிள்ளைகள் | இல்லை |
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.
தனிப்பட்ட வாழ்க்கை [தொகு]
இளமைப்பருவம் [தொகு]
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[1][2]
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
இல்லறம் [தொகு]
எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். இதற்கிடையே ஜானகி அம்மையாரை திரைப்படத்தில் கதாநாயகியாக சந்தித்தார். மூன்று படங்கள்தான் ஜானகியுடன் நடித்திருந்தாலும் காதல் பிறந்தது. எனவே ஜானகி தன் கணவரிடம் விவாகரத்து பெற்றுக் கொண்டார். ஜானகி அம்மையாருக்கு மகன் ஒருவனும் இருந்தான். இருந்தும் எம்.ஜி.ஆர். தான் காதலித்து வந்த வி. என். ஜானகியை மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.[3]
வளர்ப்பு குழந்தைகள் [தொகு]
லதா ராஜேந்திரன், ராதா கோபாலகிருஷ்ணன், கீதா மதுமோகன், ஜானகி சிவராமன் ஆகியோர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் ஆவார்கள். [4] விஜயன் என்பர் வளர்ப்பு மகனாவார். [5]
கல்வி உதவி [தொகு]
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.
செல்லப் பிராணிகள் [தொகு]
எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார்.
சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.[6]
சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்தவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாக துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.
திரைப்பட வாழ்க்கை [தொகு]
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
அரசியல் வாழ்க்கை [தொகு]
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.
1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[7] இவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.[8] இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.
திட்டங்கள் [தொகு]
- சத்துணவுத் திட்டம்
- விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி
- தாலிக்கு தங்கம் வழங்குதல்
- மகளிருக்கு சேவை நிலையங்கள்
- பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள்
- தாய் சேய் நல இல்லங்கள்
- இலவச சீருடை வழங்குதல் திட்டம்
- இலவச காலணி வழங்குதல் திட்டம்
- இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்
- இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்
- வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.[9]
தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல் [தொகு]
1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
- முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13.6.1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.
- 1981 ஆகஸ்ட் 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.
- இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமயினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது. [10]
தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு [தொகு]
இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார்.
பழ நெடுமாறன் கருத்து [தொகு]
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் பற்றி பிரபாகரன் [தொகு]
விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையை கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றி பிரபாகரனிடம் கூறியுள்ளார்.[11] எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.[12]
எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் [தொகு]
1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.
இயக்குனர் சீமான் நம்பிக்கை [தொகு]
"முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார். [13]
எழுத்துகள் [தொகு]
நாடோடி மன்னன் புத்தகம் [தொகு]
எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.[14] இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.[15]
சுயசரிதைத் தொடர் [தொகு]
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.[16]
சிறப்பு விருதுகளும் பட்டங்களும் [தொகு]
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
விருதுகள் [தொகு]
- பாரத் விருது - இந்திய அரசு
- அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
- பாரத ரத்னா விருது - இந்திய அரசு
- பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
- சிறப்பு முனைவர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
- வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் [தொகு]
- இதயக்கனி - அறிஞர் அண்ணா
- புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
- நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
- மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
- பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
- மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
- கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
- கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
- கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
- கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
- கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
- திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் [தொகு]
- கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
- கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
- நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
- பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
- மக்கள் திலகம் - தமிழ்வாணன்
- வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
- புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
- இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
- மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
- ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
செயல்பாடுகள் [தொகு]
- 01.01.1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார். 7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் அலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார்.
எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் [தொகு]
எம்.ஜி.ஆர் சமாதி [தொகு]
தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர். [17]
சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காக பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்கு கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார். [18]
டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் [தொகு]
சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நினைவு இல்லம் குறித்து எம்.ஜி.ஆர் உயில் [தொகு]
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் தான் அலுவலகமாக பயன்படுத்திய வீட்டினை நினைவில்லமாக மாற்றுமாறும், இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் தன் உயிலில் குறிப்பிட்டுள்ளார். [19]
நினைவு இல்லத்தில் உள்ள நினைவுப் பொருள்கள் [தொகு]
எம்.ஜி.ஆர் வளர்த்த ஆண் சிங்கம் ராஜா பாடம் செய்து பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. எம்.ஜி.ஆர் படித்த நூல்கள் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருள்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் முதன் முதலாக இணைந்த 12 பேரின் உறுப்பினர் படிவங்கள். எம்.ஜி.ஆரின் அம்பாசிடர் கார் எம்.ஜி.ஆர் உபயோகித்த உடற்பயிற்சி கருவிகள். துப்பாக்கி சூட்டினை அடுத்து அவர் கழுத்தில் இடப்பட்டிருந்த மாவுக் கட்டு போன்றவை நினைவு இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் [தொகு]
திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்த கோவிலை அமைத்து பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்கு கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்கு பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது. [20]
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. [21]
எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் [தொகு]
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ எம்.ஜி.ஆர். வாழ்கை
- ↑ எல்.ஆர்., ஜெகதீசன். "ஆளும் அரிதாரம்" (in தமிழ்). பி. பி. சி.. http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/. Retrieved 2006-11-08.
- ↑ வாழ்க்கைக் குறிப்பு
- ↑ 22-வது நினைவு நாள், எம்.ஜி.ஆர். சமாதியில் ஜெயலலிதா அஞ்சலி
- ↑ எம்.ஜி.ஆர்., சாமிக்கு ஜே... கோஷம் முழங்க கும்பாபிஷேகம்!
- ↑ எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
- ↑ எல்.ஆர்., ஜெகதீசன். "ஆளும் அரிதாரம்". பி.பி.சி.. http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/. Retrieved 2006-11-08. "திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் பிம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து. எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு கோயில் கட்டும் அளவுக்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணம்."
- ↑ [The nurturing hero Changing images of MGR Sara Dickey (2005). Appeared in Tamil Cinema: The cultural politics of India’s other film industry]
- ↑ தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்வோம்: ஜெயலலிதா
- ↑ ஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
- ↑ * எம்.ஜி.ஆர்ப் பற்றி பிரபாகரன்
- ↑ * பழ.நெடுமாறன் மற்றும் பிரபாகரன்
- ↑ [1]
- ↑ * நாடோடி மன்னன் திரைப்படம் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம்
- ↑ http://cinema.maalaimalar.com/2009/11/16110341/nadodi-mannan.html தன் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்து எம்.ஜி.ஆர். இப்படத்தை எடுத்ததால், அவருடைய நண்பர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இது குறித்து எம்.ஜி.ஆரிடமே நிருபர்கள் கேட்டபோது, "படம் வெற்றி பெற்றால், நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி" என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
- ↑ [lakshmansruthi.com]
- ↑ எம்.ஜி.ஆர் நினைவிடம்
- ↑ எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அன்னதானம்
- ↑ எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில்
- ↑ எம்.ஜி.ஆர்., சாமிக்கு ஜே... கோஷம் முழங்க கும்பாபிஷேகம்!
- ↑ அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்
வெளி இணைப்புகள் [தொகு]
அரசியல் குறிப்புகள் [தொகு]
திரைப்பட வாழ்க்கை [தொகு]
பொது [தொகு]
- சங்கமம் இணைய இதழில் வெளியான எம்.ஜி.ஆர் சில நினைவுகள்-தொகுப்பு
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "எம்.ஜி.ஆர். குறித்த நூல்கள்" பட்டியல்
- எம்.ஜி.ஆர் பற்றிய இணையதளம்
|
||||||||||||||||||||||||||
|
|||||||||||||