மாம்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாம்பழம் என்பது மாமரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பழமாகும். இவை பழமாகவும், பழரசமாகவும் உண்ணப்படுகின்றன. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பழமாக மாம்பழம் உள்ளது.

வரலாறு[தொகு]

இந்தியாவின் வேதங்களில் மாம்பழத்தைக் கடவுள்களின் உணவாகக் குறிக்கின்றன. மேங்கோ (Mango) என்ற ஆங்கிலப் பெயர் 'மாங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதே ஆகும். மேலும் மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும்.

இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர்.

மாமரம்[தொகு]

பூத்துக் குலுங்கும் மாமரம்

மாமரம் 35 – 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 – 35 செ.மீ நீளமும், 6 – 16 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச்சிறியதாக, 5 – 10 மி.மீ. நீளமுடைய இதழ்களையும், மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன. பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.

மாம்பழம் நீண்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். பழங்கள் 10 – 25 செ.மீ நீளமும், 7 – 12 செ.மீ விட்டமும், 2.5 கிலோகிராம் வரை எடையும் உடையவை. காய்கள் பச்சையாகவும், பழங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பெரும்பாலும் இரகத்தைப் பொருத்து நிறம் மாறினாலும், சூரியன் படும் பாகங்கள் சிவப்பாகவும், மற்ற இடங்கள் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கிறது. பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை காணப்படும். இரகத்தைப் பொருத்து இந்த ஓடு நார்களுடனோ வழுவழுப்பாகவோ இருக்கும். விதை 4 – 7 செ.மீ நீளமும், 3 – 4 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டு, ஒரு மெல்லிய விதை உறையுடன் இருக்கும்.

தோட்டம் அமைக்கும் போது கன்றுகள் 40 – 50 அடி இடைவெளியில் 90x90x90cm pit (ஏக்கருக்கு சுமார் 100 மரங்கள்) நடப்படுகின்றன. சாதாரணமாக, மாமரத்தோட்டங்களில் கழித்து விடுதல் தேவையற்றது. எனினும், முதல் சில ஆண்டுகள் அடிப்பாகத்தில் 3 அடி உயரம் வரை கிளைகள் வளராமல் கழித்து விடுவது நல்லது. அதன் பிறகு மாமரங்கள் தாமாகவே விரும்பத்தகுந்த நிலைக்கு வளரும்.

மாம்பழ விளைச்சல்[தொகு]

மாம்பழம்

உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழம். மாம்பழத்தின் விளைச்சல் வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம் ஆகிய மற்றெல்லாப் பழங்களைக்காட்டிலும் கூடுதல் ஆகும். உலகநாடுகள் மன்ற உணவு, வேளாண்மை நிறுவனம் (The Food and Agriculture Organization of the United Nations), கணித்தபடி 2001 ஆம் ஆண்டில் உலகில் 23 மில்லியன் டன் மாம்பழம் விளைவிக்கப்பட்டது[1]. இதில் இந்தியாவில் விளைந்த அளவு 12 மில்லியன் டன். இது உலக விளைவில் பாதிக்கு மேலாகும். சீனாவில் 3 மில்லியன் டன்னும், பாக்கித்தானில் 2.25 மில்லியன் டன்னும், மெக்சிக்கோவில் 1.5 மில்லியன் டன்னும் தாய்லாந்தில் 1.35 டன்னும் அடுத்து நிற்கும் நாடுகள். முன்னணி 10 நாடுகளின் மொத்த விளைச்சல் உலக விளைச்சலில் 80% ஆகும்.

பயன்பாடு[தொகு]

மாம்பழம்

மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. இந்தியாவில், இது மிக அதிக அளவில் காணப்படும் பழக்கம். பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில், மாம்பழக்கூழில் சர்க்கரை சேர்த்து உலர்த்தப்பட்டு சிறு துண்டுகளாக மிட்டாய் போலவும் உண்ணப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், மற்றொரு பிரபலமான பானம், மாம்பழத்தையும் தயிரையும் கலந்து செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி ஆகும்.

உப்பு, மிளகாய் சேர்க்கப்பட்ட மாங்காய்த் துண்டுகள்

மாங்காயும், பலவிதமாக உலகெங்கும் உண்ணப்படுகிறது. இந்தியாவில், மாங்காய் துண்டுகள் மிளகாய்த் தூள் அல்லது உப்பு சேர்த்து உண்ணப்படுகின்றன. மேலும் மாங்காயைக் கொண்டு குழம்புகள், ஊறுகாய்கள், பச்சடிகள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், மாங்காய்கள் ருஜக் அல்லது ரொஜக் எனப்படும் புளிப்பு பச்சடி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில், மாங்காய்கள் 'பகூங்க்' எனப்படும் மீன் அல்லது இறால் கொண்டு தயாரிக்கபடும் கூழுடன் உண்ணப்படுகின்றன. மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி இனிப்பாகவோ, புளிப்பாகவோ, காரமாகவோ பல நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில், மாங்காயைக் காயவைத்து அரைத்து 'அம்ச்சூர்' என்ற சமையல் பொடியாக பயன்படுத்தப்படுகிறது.

முழுமையான மாமரம், கேரளா

உடல் நல பலன்கள்[தொகு]

மாம்பழம், சமைக்காதது
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்272 kJ (65 kcal)
17.00 g
சீனி14.8 g
நார்ப்பொருள்1.8 g
0.27 g
புரதம்
.51 g
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ
(5%)
38 μg
(4%)
445 μg
தயமின் (B1)
(5%)
0.058 mg
ரிபோஃபிளாவின் (B2)
(5%)
0.057 mg
நியாசின் (B3)
(4%)
0.584 mg
(3%)
0.160 mg
உயிர்ச்சத்து பி6
(10%)
0.134 mg
இலைக்காடி (B9)
(4%)
14 μg
உயிர்ச்சத்து சி
(33%)
27.7 mg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(1%)
10 mg
இரும்பு
(1%)
0.13 mg
மக்னீசியம்
(3%)
9 mg
பாசுபரசு
(2%)
11 mg
பொட்டாசியம்
(3%)
156 mg
துத்தநாகம்
(0%)
0.04 mg
Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொறுத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும்.

மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்குக் காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும், இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.

இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

வகையினங்கள் அல்லது இரகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jedele S, Hau AM, von Oppen M. An analysis of the world market for mangoes and its importance for developing countries. Conference on International Agricultural Research for Development, 2003 [1]
  2. குறிஞ்சிப்பாட்டு - அடி 64

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாம்பழம்&oldid=3761777" இலிருந்து மீள்விக்கப்பட்டது