செரி மெனாந்தி

ஆள்கூறுகள்: 2°41′51″N 102°09′30″E / 2.69750°N 102.15833°E / 2.69750; 102.15833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரி மெனாந்தி
Soghi Monanti
Seri Menanti
Bandar Diraja Seri Menanti
அரச நகரம்
நெகிரி செம்பிலான்
தித்திவாங்சா மலைத்தொடர் பின்னணியில் இசுதானா லாமா அரண்மனை
தித்திவாங்சா மலைத்தொடர் பின்னணியில் இசுதானா லாமா அரண்மனை
Map
செரி மெனாந்தி is located in மலேசியா
செரி மெனாந்தி
      ஸ்ரீ மெனாந்தி
ஆள்கூறுகள்: 2°41′51″N 102°09′30″E / 2.69750°N 102.15833°E / 2.69750; 102.15833
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்கோலா பிலா
லுவாக்குனோங் பாசிர், செம்போல், தெராச்சி, இனே, உலு மூவார்
நிறுவல்15-ஆம் நூற்றாண்டு
அரச நகரம்1773
மக்கள்தொகை
 • மொத்தம்1,610
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு71550
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 06988 0000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

செரி மெனாந்தி அல்லது ஸ்ரீ மெனாந்தி (மலாய்; ஆங்கிலம்: Seri Menanti; சீனம்: 斯里·梅南蒂; ஜாவி: سري مننتي; நெகிரி செம்பிலான் மலாய்: (Soghi Monanti) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கோலா பிலா மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம் ஆகும். மாநிலத் தலைநகரான சிரம்பான் நகருக்கு கிழக்கே 33 கி.மீ. தொலைவிலும் கோலா பிலா நகருக்கு தென்மேற்கே 14 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

இந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரச தலைநகரம்; மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரச தலைவர் யாங் டி பெர்துவான் பெசார் அல்லது நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளரான யாம் துவான் பெசார் இருப்பிடத்தைக் கொண்டுள்ளது. இந்த அரச அரண்மனை இசுதானா பெசார (Istana Besar) என்று அழைக்கப்படுகிறது.[2]

பொது[தொகு]

செரி மெனாந்தி இருக்கும் பகுதி அடாட் வட்டம் (Adat Lingkungan) என்று அழைக்கப்படுகிறது. குனோங் பாசிர், செம்போல், தெராச்சி, இனே, உலு மூவார் ஆகியவற்றின் சுற்றுப்புற லுவாக் மாவட்டங்களும் செரி மெனாந்தியின் நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. அந்தச் சுற்றுப்புற லுவாக் மாவட்டங்கள் லுவாக் தானா மெங்கண்டுங் (Luak Tanah Mengandung) என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

பாகாரூயோங் டத்தோ பூத்தே[தொகு]

இசுதானா லாமா, இப்போது அரச அருங்காட்சியம்.
அரச கல்லறை மாடம்
பஞ்ச பிரசாதம் நடைபெறும் இடம்

மினாங்கபாவு மக்கள் 14-ஆம் நூற்றாண்டின் போது நெகிரி செம்பிலான் பகுதிக்குள் குடிபெயர்ந்தனர். 15-ஆம் நூற்றாண்டில், மினாங்கபாவு மக்கள் ரெம்பாவ் மாவட்டத்தில் இருந்து செரி மெனாந்திக்கு இடம்பெயர்ந்தனர். அவர்களின் முதல் தலைவராக சுமத்திராவைச் சேர்ந்த பாகாரூயோங் டத்தோ பூத்தே என்பவர் இருந்தார். அவர்தான் அவர்கள் குடிபெயர்ந்த புதிய இடத்திற்கு செரி மெனந்தி என்று பெயரிட்டார்.

பண்டைய ஜாவானிய பாரம்பரியத்தில் ஜாவா மொழியில்: ஸ்ரீ என்ற சொல்லுக்கு அரிசியின் தெய்வம் என்று பொருள் என நம்பப்படுகிறது.

ராஜா மெலாவார் என்பவர் 1773-இல் நெகிரி செம்பிலானுக்கு வந்தார். ரெம்பாவ் நகரில் உள்ள கம்போங் பெனாசிஸ் கிராமத்தின் முதல் யாம் துவான் பெசாராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் தன் அரண்மனையை, நெகிரி செம்பிலானின் இப்போதைய அரச நகரமாக இருக்கும் செரி மெனாந்திக்கு மாற்றிக் கொண்டார்.

நெகிரி செம்பிலானின் யாங் டி பெர்துவான் பெசார்[தொகு]

நெகிரி செம்பிலானின் யாங் டி பெர்துவான் பெசார் அவர்களின் அதிகாரப்பூர்வ அரண்மனை இசுதானா பெசார் ஆகும். பிரதான அரண்மனை, சிம்மாசன அறை மற்றும் அரச விருந் து மண்டபம் ஆகியவற்றை இசுதானா செரி மெனாந்தி அரண்மனை வளாகம் கொண்டுள்ளது. இசுதானா செரி மெனாந்தி 1932-இல் கட்டி முடிக்கப்பட்டது.

இசுதானா லாமா (Istana Lama) என்று அழைக்கப்படும் பழைய மர அரண்மனை யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முகம்மது சா இப்னி அல்மர்கும் துவாங்கு அன்டாவின் (1888 - 1933) ஆட்சியின் போது கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. இந்த அரண்மனை ஆறு வருடங்கள் கட்டப்பட்டு 1908-ஆம் ஆண்டு $ 45,000.00 செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

மினாங்கபாவு கட்டிடக்கலை[தொகு]

அரண்மனையின் வடிவமைப்பில் மினாங்கபாவு கட்டிடக்கலையின் நுட்பமான கலை அமைப்புகள் உள்ளன; ஐந்து படிநிலைகளில் 67 அடி அல்லது இருபது மீட்டர் உயரம் கொண்டது; மேலும் முக்கிய கட்டமைப்பைத் தாங்கி நிற்க 99 நெடுவரிசைகள் உள்ளன. பிரித்தானியர்களால் தீயிடப்பட்ட புலே அரண்மனைக்கு மாற்றாக இசுதானா லாமா எனும் பழைய அரண்மனை கட்டப்பட்டது.

பழைய அரண்மனை 1932 வரை பயன்படுத்தப்பட்டது, அதன் பிறகு யாங் டி பெர்துவான் பெசார் அவர்களின் அதிகாரப்பூர்வ அரண்மனை இசுதானா செரி மெனாந்திக்கு மாற்றப்பட்டது. பின்னர் இசுதானா லாமா ஒரு தேசிய பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. 1992-இல் அரச அருங்காட்சியமாக மாற்றப்பட்டது.

சுற்று வட்டார பகுதிகள்[தொகு]

இப்பகுதியில் உள்ள கிராமங்களில் கம்போங் தானா தாதார், கம்போங் தெங்கா, கம்போங் கமின், கம்போங் இசுதானா லாமா, கம்போங் சிகாய், கம்போங் புயாவ், கம்போங் பத்து அம்பர், கம்போங் மெர்டாங் செபெராங், கம்போங் மெருவல், கம்போங் கலாவ், கம்போங் மசுஜித் பட்கார், கம்போங் மசுஜித் தெர்பாக்கார், சம்பாங், கம்போங் குனுங் பாசிர் போன்றவை முக்கியமானவை ஆகும்.

இவற்றைத் தவிர மினாங்கபாவு கட்டிடக்கலையின் பாரம்பரிய பாணியில் சில வீடுகள், செரி மெனாந்தியைச் சுற்றியும் அதை ஒட்டிய கிராமங்களிலும் உள்ளன. செரி மெனாந்தியில் உள்ள நிலத்தில் குறிப்பிடத்தக்க பகுதிகள் மலாய்க்காரர்களுக்கான சிறப்பு நிலப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Seri Menanti is the Royal City for Negeri Sembilan. It is located 32.8 km to the east of Seremban, the state capital of Negeri Sembilan, and 15.8 km to the west of Kuala Pilah". heritagemalaysia.my. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
  2. "Seri Menanti is a picturesque area with green rice paddies and majestic hills. It is the royal capital of the state of Negeri Sembilan and houses the seat of the Yang Di-Pertuan Besar of Negeri Sembilan or Yamtuan Besar, the ruler of the state of Negeri Sembilan". பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செரி_மெனாந்தி&oldid=3880028" இலிருந்து மீள்விக்கப்பட்டது