பெங்குலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோனேசியா, மத்திய சுமத்திராவில் ஒரு பெங்குலுவின் 19-ஆம் நூற்றாண்டு உருவப்படம்

பெங்குலு (மலாய்; ஆங்கிலம்: Penghulu; ஜாவி: ڤڠهولو) என்பது [[கடல்சார் தென்கிழக்காசியா]வின் மலாய் தீவுக்கூட்டத்தில் உள்ள பாரம்பரிய சமூகங்களில் ஒரு வட்டாரத்தின் தலைவரைக் குறிப்பிடுவதாகும். இந்தச் சொல் தற்போது புரூணை மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் ஒரு சிறிய நிலப்பகுதி அல்லது ஒரு குடியேற்றத்தின் சமூக தலைவரைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.[1]

பெங்குலு என்ற சொல் "உலு" என்ற சொல்லில் இருந்து வந்தது; அதாவது "தலை" என்று பொருள். இதை தலைமகன் என்றும் கூறலாம்.

வரலாறு[தொகு]

17-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இன்றைய மலேசியாவில் உள்ள நெகிரி செம்பிலான் மாநிலத்தில் குடியேறிய மினாங்கபாவு மக்கள், தங்களுக்குள் ஒரு பெங்குலுவைத் தேர்ந்தெடுத்தனர். இந்த பெங்குலுக்கள், குறிப்பாக சுங்கை ஊஜோங், செலுபு, ஜொகூல் மற்றும் ரெம்பாவ் போன்ற பகுதிகளின் பெங்குலுக்கள் மற்ற பெங்குலுக்களை விட தங்களின் தரத்தை உயர்த்திக் கொள்ளும் அளவுக்கு மிகுந்த ஆற்றல் பெற்றனர்.[2]

18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சுங்கை ஊஜோங், செலுபு, ஜொகூல் மற்றும் ரெம்பாவ் பகுதிகளின் தலைவர்கள்; மற்ற பெங்குலுக்களில் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள "உண்டாங்" என்ற அதிகாரப் பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

மினாங்கபாவு மக்கள்[தொகு]

மேற்கு சுமத்திராவில் ஒரு புதிய பெங்குலு நியமிக்கப்படும் நிகழ்வு.

1821-ஆம் ஆண்டு; மற்றும் 1838-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தோனேசியா, மத்திய சுமத்திராவில் இசுலாமியம் திவிரமாகப் பரவியது. பல நூறாண்டுகளாக தங்களின் சமூக வம்சாவளி பாரம்பரியத்தைக் கட்டிக் காத்து வந்த மினாங்கபாவு மக்கள், இசுலாமியத்தின் ’சரியா’ பயன்பாட்டை எதிர்த்தனர்.[3]

அந்த வகையில், இசுலாமிய தீவிரவாதத்தை எதிர்க்கும் முயற்சியில் பெங்குலுக்கள், டச்சுக்காரர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இதை பத்திரி போர் என்று அழைக்கிறார்கள். அதில் இருந்து பெங்குலுக்களின் அதிகார வலிமை அதிகரிக்கத் தொடங்கியது.

புரூணை பெங்குலு பதவி[தொகு]

இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருப்பதைப் போலவே தற்போதைய புரூணையிலும் பெங்குலு பதவிப் பயன்பாடு உள்ளது. புரூணையில், பெங்குலு பதவி பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டது. இது பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்திற்கு புரூணை குடிமக்களிடமிருந்து வரி வசூலிக்க பெங்குலு பதவி பயன்படுத்தப்பட்டது.[4]

மலேசிய பெங்குலு பதவி[தொகு]

பெங்குலு என்ற தகுதி கொண்ட ஒருவர் பல கிராமங்களைக் கொண்ட முக்கிம்களில் மிக உயர்ந்த தலைவராகக் கருதப்படுகிறார். இவரின் கீழ் கிராமத் தலைவர்; தோக் சிடாங் அல்லது தோக் தெம்பாட் ஆகியோர் வருகின்றனர். எனவே, பெங்குலு தகுதி என்பது மாநில அரசு பொறுப்பு ஆகும்; மற்றும் மலேசியாவில் ஒரு பெங்குலு என்பவர் மாநில அரசுகளால் நியமிக்கப்படும் அதிகாரியாக அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ricklefs, M.C. (2008). History of Modern Indonesia Since c. 1200. Stanford University Press. பக். 173. 
  2. Holt, Claire, (2007), Culture and Politics in Indonesia, Modernization in the Minangkabau World by Taufik Abdullah, Jakarta: Equinox Publishing, ISBN 978-979-3780-57-3.
  3. Westenenk, L. C. (1918). De Minangkabausche Nagari. Weltevreden: Visser. பக். 59. 
  4. (March 2018) "Penghulus and Ketua Kampongs: Relevancy and Challenges in Brunei Darussalam". {{{booktitle}}}, 174, Atlantis Press.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்குலு&oldid=3882090" இலிருந்து மீள்விக்கப்பட்டது