பிச்சாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்சிக் கோபுரத்தில் இருந்து அலையாத்திக் காட்டின் தோற்றம்
பிச்சாவரம் காடுகள்

பிச்சாவரம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி ஆகும். பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது.[1]

இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.

பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.[2]

பிச்சாவரம் காடுகளின் சிறப்புகள்[தொகு]

பிச்சாவரம் காடு கடலை ஒட்டி அமைந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. அத்தகைய அலையாத்தி தாவரங்கள் கொண்டதே பிச்சாவரம் காடு. இந்தக் காட்டில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் காய்கள் முருங்கைக்காய் போல் நீண்டிருக்கும். இந்தக் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன.[3] செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இதற்கு அந்த காலகட்டத்தில் இயற்கையாகவே சுற்றுப்புறத்தில் அதிகரிக்கும் இரை உயிரினங்களே காரணம். மேலும் வெளிநாடுகளில் இருந்து வலசை வர பறவைகள் எடுத்துக்கொள்ளும் கால அளவும் வருடம்தோறும் இங்கு குடியேறும் பறவைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.

சுற்றுலா[தொகு]

பிச்சாவரம் காடு கடலூர் மாவட்டம் 'கிள்ளை' என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. சிதம்பரம் நகரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்துக்கு, பேருந்தில் செல்ல கட்டணம் பத்து ரூபாய். சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம். பிச்சாவரம் வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க, அரசு சார்பில் படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் படகில் ஆறு நபர்களுக்கு 2,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள கால்வாய் வழியாக, இந்தப் படகு 45 நிமிடங்களில் வனத்தைச் சுற்றி வரும். துடுப்பு படகில் பயணிக்க நபர் ஒருவருக்கு 75 ரூபாய் கட்டணம். இதில் பயணிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு படகில் ஐந்து பேர் பயணிக்கலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி உண்டு. காட்டின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க, கரையில் கண்காணிப்பு கோபுரம், நவீன மைக்ரோஸ்கோப் வைக்கப்பட்டுள்ளன. உணவகம், பயணிகள் காத்திருப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு பூங்கா என, பல்வேறு வசதிகளும் சுற்றுலாத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 16.101943 சுதேசமித்திரன் இதழ்
  2. "பிச்சாவரம் பற்றிய கடலூர் மாவட்ட அரசுத்தளம்". Archived from the original on 2011-08-14. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.
  3. 3.0 3.1 http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36430&ncat=1360
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்சாவரம்&oldid=3563324" இலிருந்து மீள்விக்கப்பட்டது