உள்ளடக்கத்துக்குச் செல்

பழநிபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பழனி பாரதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பழநிபாரதி
கவிஞர் பழநிபாரதி
பிறப்புபாரதி
செக்காலை, காரைக்குடி, தமிழ்நாடு
தேசியம்தமிழர்
பணிதிரைப்படப் பாடலாசிரியர்
அறியப்படுவதுகவிஞர், பாடலாசிரியர்
பெற்றோர்கவிஞர் சாமி பழனியப்பன், கமலா[1]

பழநிபாரதி (Pazhani Bharathi, பிறப்பு:14 சூலை) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.[2][3][4] திரைப்படங்களில் இவரது பாடல்கள் தனித்தன்மை கொண்டதாக விளங்கின. கவிதை நூல்கள் பலவும் எழுதிவரும் இவர் போர்வாள், நீரோட்டம், தாய், பாப்பா, மஞ்சரி, அரங்கேற்றம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியதோடு, தை என்னும் ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராக உள்ளார். இளையராஜா இலக்கிய விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.[5]

இவரை உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்" என்று பாராட்டியுள்ளார். பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதி தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.[6] 1500இற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.[7]

இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்தநாளுக்குப் பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி என்ற பாடலை எழுதி வெளியிட்டார்.[8]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பழநிபாரதி காரைக்குடியில் உள்ள செக்காலையில் சாமி பழனியப்பன் கமலா இணையருக்குப் பிறந்தார். இவருக்கு 4 சகோதரிகளும், சகோதரர் ஒருவரும் உள்ளனர். இவருடைய தந்தை தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உதவியாளரும் பாரதிதாசன் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கவிஞரும் ஆவார். இவரின் தந்தையார் வேலை தேடிச் சென்னைக்குக் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தபோது தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு பத்திரிகையில் பணி கிடைத்தது. இதனால் இவரது படிப்பும், வளர்ச்சியும் சென்னையிலேயே அமைந்தது. சென்னையிலுள்ள மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வியும் கோடம்பக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் கணபதி மேனிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் படித்தார். அதன்பிறகு திரைத் துறையில் படத்தொகுப்புப் பணியில் ஆர்வம் தோன்ற, தமிழ்நாடு அரசின் திரைப்படக் கல்லூரியில் சேர முயற்சித்தார். ஆனால், இவரின் முயற்சி வெற்றியடையவில்லை.[2]

பத்திரிகைத் துறை

[தொகு]

நீரோட்டம், போர்வாள், அரங்கேற்றம் போன்ற நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் பிழை திருத்தும் பணியில் இருந்தார். பின்னர் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் புத்தகக் கிடங்கிலிருந்து வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் புத்தகக்கட்டுகளின் கணக்கைச் சரிபார்த்துப் பதியும் பணி செய்து வந்தார்.

இக்காலகட்டத்தில் தான் வலம்புரிஜானின் தாய் பத்திரிகையில் இவருக்குப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. இவருடைய நெருப்புப் பார்வைகள் என்கிற முதல் கவிதைத் தொகுப்பை வலம்புரிஜானிடம் ஏற்கனவே கொடுத்திருந்தார். இவருடைய இருபது வயதில் சூரியனையும் அடுப்பையும் தவிர எந்தத் தீயும் வெப்பமும் என் தேசத்தை வருத்தப்படுத்தக் கூடாது என்ற வரிகளை வாசித்துப் பாராட்டிய, வலம்புரிஜான் அடுத்த வாரமே தாய் வார இதழின் தலையங்கத்தில் புகழ்ந்து எழுதியதுடன் பணியும் தந்தார்.

பணி செய்துகொண்டே படிக்கலாம் என்று கருதி, தமிழ் இளங்கலை இலக்கியம் (பி.லிட்) பயில, சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல் வழிக்கல்வியில் இணைந்தார். ஆனால் முதல் தேர்விலேயே தேர்வெழுதாமல் வெளியேறினார். அதன் பின்னர் படிப்பைத் தொடரவில்லை. சில ஆண்டுகளில் தாய் வார இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வலம்புரி ஜான் விலகவே இவரும் விலக நேர்ந்தது. பின்னர் பலவேறு பத்திரிகைகளிலும், அச்சகங்களிலும் தொடர்ந்து பணி செய்தார்.[2]

திரைப்படப் பாடலாசிரியராக

[தொகு]

ஒரு பிரபல வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த இவரது நண்பர் பேரமனூர் சந்தானம் விக்ரமனிடம் இவரை அறிமுகப்படுத்தினார். இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் உருவான முதற்படமாகிய புது வசந்தம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பெரும்புள்ளி என்கிற படத்தின் கதை ஆலோசனையில் இவர் இடம்பெற்றார். விக்ரமனின் இரண்டாவது படமான பெரும்புள்ளியில் தான் முதல் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இப்படத்தில் இளமையின் விழிகளில் வளர்பிறைக் கனவுகள் என்ற பாடலை எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் எழுதினார்.[6] திரைப்படத்தின் நாயகன் பாபு விபத்தில் சிக்கியதால் பாடல் இடம்பெறவில்லை.

மீண்டும் பத்திரிகைகளிலும் பதிப்பகங்களிலும் பிழைதிருத்தும் பணியைத் தொடர்ந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு விக்ரமனின் அடுத்த படம் நான் பேச நினைப்பதெல்லாம், பொன்வண்ணனின் அன்னை வயல் ஆகிய இரண்டு படங்களிலும் பாடல்கள்  எழுதினார். அன்னை வயலின் 'மல்லிகைப் பூவழகில்' என்ற பாடலை ஒரு பூங்காவில் அமர்ந்து ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்ரமனுக்காகக் கோகுலம், புதிய மன்னர்கள் முதலிய படங்களில் பாடல்களை இயற்றினார். 1996, 1997 ஆம் ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ நாற்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்கள் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..[2]

சிறப்புப் பாடல்கள்

[தொகு]

பழநிபாரதி திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி குறிப்பிட்ட சில சிறப்புப் பாடல்களையும் இயற்றித் தந்துள்ளார். குறிப்பாகப் புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்ணினைத் தமிழாக்கம் செய்தவர்களுள் இவரும் ஒருவராவார்.[9] அதுபோலவே ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக் கீதம் ஒன்றினையும் இயற்றித் தந்துள்ளார். இதற்கு ஊதியம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[10]

கவிதை நூல்கள்

[தொகு]

பழனி பாரதி எழுதியுள்ள கவிதை நூல்கள்.[11]

  • நெருப்புப் பார்வைகள்
  • வெளிநடப்பு
  • காதலின் பின்கதவு
  • மழைப்பெண்
  • முத்தங்களின் பழக்கூடை
  • புறாக்கள் மறைந்த இரவு
  • தனிமையில் விளையாடும் பொம்மை
  • தண்ணீரில் விழுந்த வெயில்
  • சூரியனுக்குக் கீழ் ஒரு வெள்ளைக் காகிதம்

பாடலாசிரியராக

[தொகு]
  1. 1991 - பெரும்புள்ளி (அறிமுகம்)-
  2. 1992 - அன்னை வயல்
  3. 1993 - கோகுலம்
  4. 1994 - புதிய மன்னர்கள்
  5. 1995 - முறை மாமன்
  6. 1996 - மேட்டுக்குடி
  7. 1996 - செங்கோட்டை
  8. 1996 - பூவே உனக்காக
  9. 1996 - உள்ளத்தை அள்ளித்தா
  10. 1997 - சூர்யவம்சம்
  11. 1997 - தேடினேன் வந்தது
  12. 1997 - ராசி
  13. 1997 - பூச்சூடவா
  14. 1997 - பெரிய இடத்து மாப்பிள்ளை
  15. 1997 - உல்லாசம்
  16. 1997 - பெரிய மனுஷன்
  17. 1997 - அருணாச்சலம்
  18. 1997 - நந்தினி
  19. 1997 - கல்யாண வைபோகம்
  20. 1997 - காதலுக்கு மரியாதை
  21. 1998 - ஆசைத் தம்பி ‎ 
  22. 1998 - அரிச்சந்திரா ‎ 
  23. 1998 - அவள் வருவாளா
  24. 1998 - என் உயிர் நீதானே
  25. 1998 - பொன்மனம்
  26. 1998 - கிழக்கும் மேற்கும் ‎ 
  27. 1998 - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
  28. 1999 - தொடரும்
  29. 1999 - என்றென்றும் காதல் ‎ 
  30. 1999 - புதுக்குடித்தனம்
  31. 2000 - பாரதி
  32. 2000 - கண்ணுக்குள் நிலவு
  33. 2001 - காசி
  34. 2001 - ரிஷி
  35. 2001 - தாலி காத்த காளியம்மன்
  36. 2001 - நந்தா
  37. 2001 - பிரண்ட்ஸ்
  38. 2001 - ஸ்டார்
  39. 2002 - ஜெயம்
  40. 2002 - கார்மேகம்
  41. 2002 - ரமணா
  42. 2003 - மனசெல்லாம்
  43. 2003 - அன்பே அன்பே
  44. 2003 - புன்னகை பூவே
  45. 2003 - பிதாமகன்
  46. 2004 - குத்து
  47. 2005 - மாயாவி
  48. 2006 - வாத்தியார்
  49. 2007 - நான் அவன் இல்லை
  50. 2009 - குரு என் ஆளு
  51. 2010 - திருப்பூர் ‎ 
  52. 2018 - கேணி
  53. - தமிழரசன் (வெளிவர இருக்கும் திரைப்படம்)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

[தொகு]

விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது வகை முடிவுகள் குறிப்புகள் மேற்கோள்
1997 தமிழக அரசு திரைப்பட விருதுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது வெற்றி காதலுக்கு மரியாதை திரைப்படத்திற்காக [12]
1998 கலைமாமணி விருது திரைப்பட ஆளுமை வெற்றி தமிழ்நாடு அரசின் உயரிய விருது [13]
2021 கவிக்கோ விருது வெற்றி [14]
  • 1996 - உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான சினிமா எக்சுபிரசு விருது
  • 1997- காதலுக்கு மரியாதை திரைப்படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
  • 1998 - கலை வித்தகர் கண்ணதாசன் விருது
  • 2007- இசைஞானி இளையராஜா இலக்கிய விருது
  • பிதாமகன் திரைப்படத்திற்காக ஐ. டி. எப். ஏ - பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Correspondent, Vikatan. "நாங்கள் 'பாரதி' ஆனது இப்படித்தான்!" (in ta). https://www.vikatan.com/news/miscellaneous/68203-why-we-changed-our-name-to-bharathi. 
  2. 2.0 2.1 2.2 2.3 "நான்... பழநிபாரதி - Kungumam Tamil Weekly Magazine". www.kungumam.co.in. Retrieved 2022-05-26.
  3. http://www.ntamil.com/451 பரணிடப்பட்டது 2015-02-24 at the வந்தவழி இயந்திரம் என் தமிழ் இணையம்
  4. "பழநிபாரதி – காற்றைக் குளிர வைத்த கவிஞன் – ஜோ.சலோ". Angusam News - Online News Portal about Trichy Tamilnadu (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-08-20.
  5. "Kollywood Lyricist Palani Bharathi Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). Retrieved 2022-05-27.
  6. 6.0 6.1 "பழநிபாரதியின் முதற்பாடல் குறித்து முத்துலிங்கம்".
  7. "பழநிபாரதி - கரும்பாறை மனசில் மயில் தோகை விரித்தவர்". ETV Bharat News. Retrieved 2022-05-26.
  8. "பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி! - கவிஞர் பழனி பாரதி". கருத்துக்களம். Retrieved 2022-08-15.
  9. "புதுவைப் பல்கலைக்கழகம்", தமிழ் விக்கிப்பீடியா, 2021-08-21, retrieved 2022-08-15
  10. "ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைய ரூ.10 கோடி நிதியுதவி: தமிழுக்கு மகுடம் சூட்டிய தமிழக அரசு". Hindu Tamil Thisai. Retrieved 2022-08-15.
  11. "கவிதை அழியாது; சரித்திரத்தில் புனிதமாகப் போற்றப்டுவது ஒரு கவியின் பிறப்புதான்! -திரைப்படப் பாடலாசிரியர் பழநிபாரதி நேர்காணல்". Archived from the original on 2011-03-14. Retrieved 2015-03-16.
  12. "Tamilnadu Government Cinema Awards". தினகரன். Archived from the original on 1 January 2008. Retrieved 11 August 2009.
  13. "கலைமாமணி விருதுகள் 1991–2010". ValaiTamil. Archived from the original on 31 May 2022. Retrieved 31 May 2022.
  14. "பாடலாசிரியர் பழனிபாரதிக்கு கவிக்கோ விருது: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வழங்கினார்". இந்து தமிழ் திசை. 23 December 2021. Archived from the original on 24 May 2022. Retrieved 6 July 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழநிபாரதி&oldid=4184518" இலிருந்து மீள்விக்கப்பட்டது