நசிகேதன்
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
![]() |
நசிகேதன் (சமசுகிருதம்: नचिकेता), யசூர் வேதத்தில் அமைந்துள்ள கடோபநிடதக் கதையில் கூறப்படும் சிறுவன் ஆவான். நசிகேதன், யமனிடம் மோட்சம் எனும் ஆத்ம தத்துவத்தை அறிந்தவன்.[1]
வேத காலக் குறிப்புகள்[தொகு]
ரிக் வேதத்தின் 10.135 ஆம் பகுதிகள் யமன் மற்றும் ஒரு சிறுவனைப் குறிப்பிடுகிறது.[2] அச்சிறுவன் நசிகேதனை குறிப்பதாக கருதப்படுகிறது.[3] தைத்ரிய பிராஹ்மணத்தின் 3.1.8ஆம் பகுதிகளில் நசிகேதனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.[3] மஹாபாரத காவியத்தின் ஸபா பர்வத்தின், பகுதி நான்கில், தர்மரின் அவையில் இருந்த முனிவர்களில் நசிகேத முனிவரும் காணப்பட்டதாக உள்ளது.[4] மேலும் மஹாபாரதத்தின் அநுஶாஸன பர்வம், அத்யாயம் 106இல் நசிகேதனின் வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது.[3]). கடோபநிஷதத்தில் யமதர்மராஜன் – நசிகேதனுக்கு நடந்த உரையாடல்களும்; நசிகேதனுக்கு யமதர்மராஜன் ஆத்ம வித்யையைக் கற்றுத் தரும் கதை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
கடோபநிஷதத்தில் நசிகேதன் வரலாறு[தொகு]
நசிகேதனின் தந்தை வாசஶ்ரவ முனிவர், ஸ்வர்க லோகம் வேண்டி, விஶ்வஜித் எனும் பெரும் யாகம் செய்தார். விஶ்வஜித் யாகத்தின் படி, யாகத்தின் முடிவில், யாகம் செய்பவர் தனது செல்வங்கள் அனைத்தும் தானமாக வழங்கிட வேண்டும் என்பது விதியாகும்.
அவ்வாறு யாகம் முடிந்து தானம் வழங்கும் போது, வாசஶ்ரவஸ், தனது கறவை நின்ற பசுக்களை மட்டும் தானமாக தருவதை [5] கவனித்த நசிகேதன், தன்னை யாருக்கு தானமாக கொடுப்பீர்கள் என அடிக்கடி தனது தந்தை வாசஶ்ரவஸை நோக்கி கேட்க, வாசஶ்ரவஸ் எரிச்சலுடன் உன்னை யமனுக்கு தானமாக கொடுக்கிறேன் என்று கூறிவிட, உடனே நசிகேதன் யமலோகத்திற்கு சென்று, மூன்று நாட்கள் காத்திருந்து யமதேவரை ஸந்திக்கிறான்.
யமலோகத்திற்கு விருந்தாளியாக வந்த நசிகேதனை காக்க வைத்த காரணத்தால் யமன், நசிகேதனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். முதல் வரத்தின் மூலம் தனது தந்தை மனஅமைதி அடைந்து தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறான். எந்த ஒரு யாகத்தை செய்தால் மக்கள் ஸ்வர்க லோகம் அடையமுடியும் என்பதை இரண்டாம் வரத்தின் மூலம் நசிகேதன் தெரிந்து கொள்கிறான். மூன்றாவது வரத்தின் மூலமாக, உடல் அழிந்த பின்னும் அழியாது இருக்கின்ற ஆத்ம தத்வத்தைப் பற்றிய அறிவை உபதேசிக்கும் படி வேண்டுகிறான்.
முதல் இரண்டு வரங்களை நசிகேதனுக்கு உடனே வழங்கிய யமன், மூன்றாவது வரத்தை தருவதற்கு முன் அதற்கான தகுதி நசிகேதனுக்கு உள்ளதா என சோதிக்கிறார். ஸ்வர்கலோகம், பிரஹ்மலோகம் செல்வதற்கு வழி சொல்கிறேன் என்று யமதேவர் கூறியும், நிலையற்ற அந்த லோகங்கள் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி, தனக்கு நிலையான ஆத்ம ஞானம் எனும் பிரஹ்ம தத்வம் ஒன்றே போதும் என்று நசிகேதன் உறுதியாக கூறி விடுகிறான்.
இறுதியில் யமதர்மராஜன் வைத்த அனைத்துச் சோதனைகளிலும் வெற்றி பெற்ற நசிகேதனுக்கு ஆத்ம தத்வத்தை விளக்கமாக யமதேவர் எடுத்து கூறினார். இந்த ஆத்மதத்துவம் எனும் பிரஹ்ம தத்வத்தை அறிந்தவர்கள் உயிருடன் இருக்கும் போதே ஜீவ முக்தி (மனநிறைவு) அடைந்து பின்பு மரணத்திற்குப்பின் விதேஹ முக்தி எனும் பிறப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வு அடைகிறார்கள் என்று யமதேவர் கூறினார்.
ஜட உடல் தான் அழிகிறது; ஆத்மா என்றும் அழிவதில்லை என்ற பிரஹ்ம ஞானத்தை அறிந்த நசிகேதன், ஜீவ முக்தனாக வாழ்ந்தான்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தத்துவ விசாரம்: நசிகேதன் ஆகலாம்
- ↑ "The Rig Veda, Hymn 10.135". Free media library. 2005-09-19. 2011-10-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 3.2 Radhakrishnan, S. (1994). The Principal Upanishads, New Delhi: HarperCollins Publishers India. ISBN 81-7223-124-5 p. 593.
- ↑ Mahabharata, Book 2, Sabha Parva Mahabharata, Book 2, Section IV, sacred-texts.com. p. 7.
- ↑ Swami Prabhavananda and Frederick Manchester, Breath of the Eternal http://www.atmajyoti.org/up_katha_upanishad_text.asp பரணிடப்பட்டது 2011-04-29 at the வந்தவழி இயந்திரம்
- Sister Nivedita & Ananda K.Coomaraswamy: Myths and Legends of the Hindus and Bhuddhists, Kolkata, 2001 ISBN 81-7505-197-3
- Sri Krishna Prem: The Yoga of the Kathopanishad, London, John M. Watkins, 1955 (No ISBN)
- Swami Krishnananda.org பரணிடப்பட்டது 2010-03-22 at the வந்தவழி இயந்திரம்
- A History of Pre-Buddhistic Indian Philosophy By Benimadhab Barua
- Encyclopaedia of the Hindu world By Gaṅgā Rām Garg