உள்ளடக்கத்துக்குச் செல்

விநாயகர் அகவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விநாயகப் பெருமானின் தோற்றம் குறித்து பாடப்பெற்றது விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இதனைப் பாடிய ஔவையார் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

விநாயகர் அகவல் பாடல் வரிகள்

[தொகு]

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலஇசை பாட

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பக் களிறே!

முப்பழம் நுகரும் மூஷிக வாகன (15)

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே (25)

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து) (30)

இருவினை தன்னை அறுத்திருள் கடித்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி (35)

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் (40)

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்து மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே (50)

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும் (55)

எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி (60)

என்னை அறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன (65)

அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. (70)

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை (75)

நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

வித்தக விநாயக! விரை கழல் சரணே!.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விநாயகர்_அகவல்&oldid=4254700" இலிருந்து மீள்விக்கப்பட்டது