விநாயக் தாமோதர் சாவர்க்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வினாயக் தாமோதர் சாவர்க்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வினாயக்கு தாமோதர் சாவர்க்கர்
வினாயக்கு தாமோதார் சாவர்க்கர்
பிறப்பு(1883-05-28)மே 28, 1883
பாகூர், பிரித்தானிய இந்தியா
இறப்புபெப்ரவரி 26, 1966(1966-02-26) (அகவை 82)
மும்பை, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
வலிந்து ஏற்ற வலியில்லா மரணம் யூதனேசியா
தேசியம்இந்தியர்
கல்விபெர்க்குசன் கல்லூரி, புனே, இளங்கலை பட்டம்
அறியப்படுவதுஇந்திய விடுதலை இயக்கம், இந்துத்துவம், காந்தியின் படுகொலை
அரசியல் கட்சிஇந்து மகாசபை
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
யமுனா பாய்
பிள்ளைகள்மகன்கள் பிராபாகர் (குழந்தையிலேயே இறப்பு), விஷ்வாஸ் சாவர்க்கர், மகள் பிராபாத்-தாய் சிபுலங்கர் ( அவரின் திருமணத்திற்குப் பின்)

சாவர்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பங்குகொண்ட ஒரு குறிப்பிடத்தகுந்தவர் என்று கூறப்படுகிறது. இவரை இவருடைய பற்றாளர்கள் அதிகமாக​ வடக்கத்தேய​ இந்து கொள்கையாளர்கள் "வீர் சாவர்க்கர்" என்றழைக்கின்றனர் இவர் ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்று இருந்தாலும்மன்னிப்பு கடிதம் எழுதிய பின்னர் 12 ஆண்டுகளின் பின் 1924 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.[1]

இந்திய சுதந்திரத்திற்காக இந்தியாவில் அபிநவ பாரத சங்கத்தையும் [2], இலண்டனில் சுதந்திர இந்திய சங்கத்தையும் உருவாக்கினார்[3]. இந்திய விடுதலை இயக்கம்-1857 என்ற நூலை எழுதினார்[4]. இந்து மகாசபையை உருவாக்கினார்[5]

இளமைக்காலம்

சாவர்க்கரின் இயற்பெயர் விநாயக தாமோதர் சாவர்க்கர். இவர் 1883-ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் நாசிக்கு அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த சாவர்க்கர், இராதா பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள் ஒரு சகோதரி. இவர் நாசிக்கில் பள்ளிக்கல்வியை முடித்தார். இவர் தனது 11-ஆவது வயதிலேயே சிறுவர்களைச் சேர்த்து வானரசேனையை உருவாக்கினார். இவர் பள்ளிப்பருவத்தில் திலகர் ஏற்படுத்திய சிவாஜி உற்சவம், கணபதி உற்சவம் போன்றவற்றை முன்னின்று நடத்தினார். இவர் தனது 9-ஆவது வயதில் தாயையும், 16-ஆவது வயதில் தந்தையையும் இழந்தார் [6].

1898-இல் மகாராட்டிராவில் இராண்ட மற்றும் ஐரசட்டு ஆகியோரைக் கொன்றதற்காக சபேகர் சகோதாரர்கள் தூக்கிலிடப்பட்டனர். அது சாவர்க்கரைக் கடுமையாகப் பாதித்தது. அவர் 15- ஆவது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக துர்கா தேவி முன்பு சபதம் எடுத்தார் என்று கூறப்படுகின்றது.

அபிநவ பாரத சங்கம்

நிற்போர்: சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா, திகம்பர் பட்சே (ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்). அமர்ந்திருப்போர்: நாராயண் ஆப்தே, வினாயக் தாமோதர் சாவர்க்கர், நாத்தூராம் கோட்சே மற்றும் விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே

1901-ஆம் ஆண்டு யமுனா பாயை மணந்தார். 1902-இல் பெர்க்குசன் கல்லூரியில் கல்லூரியில் சேர்ந்தார். 1904-ஆம் ஆண்டில் நாசிக் நகரத்தில் தனது மூத்த சகோதரர் கணேஷ் தாமோதர் சாவர்க்கருடன் இணைந்து அபிநவ பாரத சங்கத்தை நிறுவினார்.[2]. பின்னர் பால கங்காதர திலகரின் சுயராச்சியக் கட்சியில் சேர்ந்தார். பாலகங்காதர திலகரே இவரது அரசியல் குரு ஆவார். இவரது வீரம் மிக்க சொற்பொழிவுகளால் எரிச்சலுற்ற ஆங்கில அரசு அவரைக் கல்லூரியில் இருந்து நீக்கியது. ஆனால் அவர் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். 1905-ல் திலகரின் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.

ஜூன் 1906-இல் பாரிஸ்டர் படிப்புக்கு இலண்டன் சென்றார்[3]. அங்கே இந்தியா அவுசு என்ற இடத்தில் இந்திய மாணவர்களைச் சேர்த்து சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். அங்கே முக்கிய இந்திய விழாக்கள் கொண்டாடப்பட்டன. அங்கே கூடுபவர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி எடுத்துக் கூறினார். அதில் பெண்களும் இருந்தனர். அங்கே குண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்து அறிய இயலாமல் இசுக்காட்லாந்து காவல் துறையினரே திணறினர். அவர் ஆயுதங்கள் மூலம் இந்திய சுதந்திரத்தை அடைய வழி தேடினார்.

இந்திய விடுதலை இயக்கம் 1857

இந்தியாவில் இருக்கும் ஆங்கில அதிகாரிகள் சிப்பாய்க் கலகம் என்று பூசி மெழுகியது கலகமோ, கலவரமோ இல்லை. அதை விரிவாக ஆராய்ச்சி செய்து அது இந்திய சுதந்திரப் போராட்டம்தான் என்பதை நிரூபிக்கும் "இந்திய சுதந்திரப் போராட்டம்-1857" என்னும் நூலை எழுதினார். அது வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது. 1909-ல் இந்தப் புத்தகம் பிகாஜி காமாவால் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டு வெவ்வேறு புத்தக அட்டைகளுடன் இந்தியாவிற்குக் கடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2000 புத்தகங்கள் மிக அதிக விலையில் விற்பனை ஆயின.பிரித்தானியரின் கணக்குப்படி ஒரு புத்தகம் ஆறு பேரால் படிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் பின்னர் பகத்சிங்கால் வெளியிடப்பட்டது.

சாவர்க்கரின் தூண்டுதலால் நிகழ்ந்த செயல்கள்

1909-ல் சாவர்க்கரின் சீடரான மதன்லால் டிங்கரா இலண்டனில் சர். கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்றார். நாசிக் மாவட்ட ஆட்சியர் சாக்சனை, ஆனந்த இலட்சுமண் கான்னாரே என்ற இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் இந்தியா ஹவுஸ் ஆங்கிலேயரின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தது. அதனால் ஆங்கில அரசு சாவர்க்கரை 1910 மார்ச் 13-ல் கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பியது. இந்தியாவுக்குக் கப்பலில் வரும்போது கப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்துக் கடலில் குதித்து பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்த ஒரு பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்த வழக்கு பன்னாட்டு நீதிமன்றத்தில், பிரிட்டிஷ், பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே நடந்தது. பிரிட்டிஷ் அரசு சாவர்க்கரை மீண்டும் பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பு கூறப்பட்டது. அவர்மீது சட்ட விரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களைத் தூண்டும் விதமாகப் பேசியது என்று குற்றம் சாட்டி 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பியது.

1948 ஆம் ஆண்டு சனவரி மாதம் 30 ஆம் நாள் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் கொலையாளியான நாதுராம் கோட்சேவும் அவனது கூட்டாளிகளும், கூட்டுசதிகாரர்களும் கைது செய்யப்பட்டனர். கூட்டுசதி செய்ததாக சாவர்க்கரை சிவாஜி பார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பிப்ரவரி 5ஆம் நாள் 1948இல் கைது செய்யப்பட்டார். பின்னர் இவ்வழக்கில் இருந்து போதிய ஆதாரம் இன்மையால் அப்போது விடுதலை செய்யபட்டாலும் 1966ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கபூர் கமிஷன் அறிக்கைபடி, அவருக்கு, காந்தியை கொலை செய்யும் திட்டத்தில் பங்கு இருந்தது உறுதியானது.[7]

அந்தமான் சிற்றறைச் சிறையில் சாவர்க்கர்

அந்தமான் சிற்றறைச் சிறை எதிரில் வீர சாவர்க்கரின் சிலை

அந்தமான் சிற்றறைச் சிறையின் அளவு சுமார் 13 அடிக்கு 7 அடி மட்டுமே. சுமார் 7 அடி உயரத்திற்கு மேல் ஒரு சிறிய சன்னல் வழியே வரும் குறைந்த வெளிச்சம் போதுமானதாக இருக்காது. கடுமையான வேலை, மோசமான சாப்பாடு, மனிதாபிமானமற்ற அடி, உதை, கடுமையான குளிர் போன்றவை அந்தமான் சிறையின் அடையாளங்கள் ஆகும் [8].

சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேசு தாமோதர் சாவர்க்கரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அந்தமான் சிறையில் இருந்தார். அவர் பாபாராவ் என்று அழைக்கப்பட்டார். அவர் சாவர்க்கருக்கு பக்கபலமாக விளங்கினார். சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயண் தாமோதர் சாவர்க்கரும் திலகரின் சீடராவார். அந்தமான் சிறையில் சாவர்க்கருக்கு எழுதுவதற்குத் தாளும் பேனாவும் கொடுக்கப்படவில்லை. அவர் சுவரில் கல்லால் எழுதினார். மனதில் மனப்பாடம் செய்தார். இந்தியா வந்த பிறகு அவற்றை எழுதினார். சுதந்திரம் குறித்து மராத்தியில் இவர் எழுதிய கவிதைகள் மிகவும் புகழ்வாய்ந்தவை[9]. இந்திய சுதந்திரத்திற்காக போராடியதற்காக அந்தமான் சிறையில் அவர் 11 ஆண்டுகள் சிரமப்பட்டார். பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதி கொடுத்ததால் 1921 மே 2-இல் இரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். இரத்தினகிரி சிறையில் "இந்துத்வா" என்ற நூலை எழுதினார்[10]. இரத்தினகிரி மாவட்டத்தைவிட்டு வெளியேறக் கூடாது; அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனை விதித்து 1924 ஜனவரி 6 அன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் காந்திஜியின் அரசியலைக் கடுமையாக விமர்சித்தார். இந்தியப் பிரிவினையை எதிர்த்தார்.

பதித பவன்

இவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி. தீண்டாமையை ஒழிக்கப்பாடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட எல்லா இந்துக்களும் வணங்க "பதித பவன்" என்ற கோவிலை இரத்தினகிரியில் 1931 பிப்ரவரி 22 அன்று ஏற்படுத்தினார்[11]. 1937-இலேயே காசுமீர் பிரச்சினை வரும் என்றும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மற்றும் சீனப்போர் பற்றியும் கூறியிருந்தார். 1943 ஆம் ஆண்டு அவரது 61- ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1963- ஆம் ஆண்டு சாவர்க்கரது மனைவி யமுனாபாய் இறந்தார்[12]. அவர் சாவர்க்கருக்கு எல்லா விதத்திலும் துணை நின்றார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுமியை சாவர்க்கர் அழைத்து வந்தபோது அவர் அந்த சிறுமியைக் கவனித்துக் கொண்டார். சாவர்க்கருக்கு இரு குழந்தைகள். அவர்கள் விஸ்வாஸ், பிரபா ஆகியோர்[6].

இறுதி அஞ்சலி

விநாயக் தாமோதர் சாவர்க்கர் நினைவு அஞ்சல் தலை, ஆண்டு 1970

1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1966 பிப்ரவரி 26-ல் இறந்தார். ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் பூர்த்தியான பிறகு, சமூகத்திற்கு சேவை செய்யும் வலிமை இழந்த நிலையில் இறப்புக்காக காத்திருக்காமல் இறப்பைச் சந்திப்பது சிறந்தது என்று கூறினார். இது ஆத்ம ஹத்யா அல்ல, ஆத்ம சமர்ப்பணம் முதலான பல நூல்களை எழுதினார்[13]. இவரது இறப்பிற்கு இலட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். 2000 இராட்டிரீய சுயம் சேவக்கு ("RSS") சேவகர்கள் இறுதி ஊர்வலத்தில் மரியாதை செலுத்தினர். சாவர்க்கரைப் பற்றி ஒரு திரைப்படம் 2001-ல் வெளியானது.[14]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. https://en.youturn.in/factcheck/savarkar-50years-prison-sentence.html
  2. 2.0 2.1 http://www.savarkar.org/en/armed-struggle/oath-abhinav-bharat
  3. 3.0 3.1 http://www.savarkar.org/en/armed-struggle/savarkar-london
  4. http://www.savarkar.org/en/armed-struggle/1857-war-independence
  5. http://www.savarkar.org/en/hindutva/hindu-mahasabha
  6. 6.0 6.1 http://www.savarkar.org/en/lifesketch/veer-savarkars-associates/veer-savarkars-family-members
  7. "Savarkar and Gandhi's murder". frontline.thehindu.com. Archived from the original on 2019-12-26. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  8. http://www.savarkar.org/files/u1/Cellular_Jail.pdf
  9. http://www.savarkar.org/en/poetry
  10. http://www.savarkar.org/en/hindutva-hindu-nationalism/essentials-hindutva
  11. http://www.savarkar.org/en/social-reform/patitpavan-mandir
  12. http://www.savarkar.org/en/yamunabai-vinayak-mai-savarkar
  13. http://www.savarkar.org/en/poetry-drama/saantvan
  14. Veer Savarkar (film)

சாவர்க்கர் பற்றிய புத்தகங்கள்

வெளி இணைப்புகள்