கிலாபத் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிலாபத் இயக்கம் அல்லது கிலாஃபட் இயக்கம் 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஓர் இயக்கம். முதலாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு ஆதரவாகப் போரிட்ட உதுமானியக் கலீபகம், போரில் ஏற்பட்ட தோல்வியினால் அழியும் நிலைக்கு ஆளானது. வெற்றி பெற்ற நேச நாடுகள் உதுமானியக் கலீபகத்தைப் பிரிவினை செய்து கலீபாவின் அதிகாரத்தை அழிக்க முடிவு செய்தனர். கலீபாவினை தங்கள் சமய அதிகாரத்தின் சின்னமாகக் கருதிய உலக முசுலீம்களிடையே இது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. கலீபகத்தைப் பாதுகாக்க அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் 1919ம் ஆண்டு இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.

விரைவில் கிலாபத் இயக்கம் இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. ஒட்டோமானிய கலீபகத்தைப் பாதுகாக்கும்படி பிரித்தானிய அரசை வலியுறுத்தியது. காங்கிரசு அப்போது துவங்கியிருந்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு இந்திய முசுலிம்களின் ஆதரவைத் திரட்ட மகாத்மா காந்தியும் காங்கிரசும் கிலாபத் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இவ்வியக்கம், தேசியவாதத்துக்கு எதிரான பரந்த இசுலாமியத்தை பிரதிபலிக்கிறது என்று குற்றம் சாட்டிய முசுலிம் லீக் மற்றும் இந்து மகாசபை ஆகிய அமைப்புகள் இதனை எதிர்த்தன. கிலாபத் இயக்கத்தின் விளைவாக கேரளாவின் மலபார் பகுதியில் உருவாகிய மாப்ளா கலகத்தில் கடும் வன்முறைச் செயல்கள் நிகழ்ந்தன. இதனால் கிலாபத் இயக்கம் சர்ச்சைகளுக்காளாகியது. காங்கிரசுக்குள்ளும் அதற்கு எதிர்ப்பு உருவானது. சவுரி சாவ்ரா நிகழ்வுக்குப் பின்னர் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டதை அலி சகோதரர்கள் ஏற்கவில்லை. கிலாபத் இயக்கத்தைத் தனியே தொடர்ந்தனர். 1924ல் துருக்கியில் கெமால் அடாடுர்க் தலைமையில் ஏற்பட்ட புரட்சியால் உதுமானியக் கலீபகம் ஒழிக்கப்பட்டு மதச்சார்பற்ற குடியரசு உருவானதால் கிலாபத் இயக்கம் பலனற்றுப் போனது. மத அடிப்படையில் ஓர் அரசு (கலீபகம்) அமைவதற்காக இந்த இயக்கம் செயல்பட்டதால், இந்தியப் பிரிவினைக்கும் பாக்கித்தானின் உருவாக்கத்துக்கும் இது முன்னோடியாகக் கருதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலாபத்_இயக்கம்&oldid=2751055" இலிருந்து மீள்விக்கப்பட்டது