ஐஎன்ஏ வழக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐஎன்ஏ வழக்குகள் (INA trials) அல்லது செங்கோட்டை வழக்குகள் (Red Fort Trials) என்பது பிரித்தானிய இந்தியாவில் நவம்பர் 1945-பெப்ரவரி 1946 காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் (ஐஎன்ஏ) உறுப்பினர்கள் சிலர் மீது பிரித்தானிய அரசு தொடர்ந்த வழக்குகளைக் குறிக்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய இராணுவத்தின் உறுப்பினர்களாக இருந்து கைது செய்யப்பட்டவர்களை இராணுவ நீதி மன்றம் மூலம் தண்டிக்க காலனிய அரசு முடிவு செய்தது. இவற்றுள் பத்து உறுப்பினர்களின் வழக்குகள் தில்லி செங்கோட்டையில் நடைபெற்றன. தேசத் துரோகம், வன்கொடுமை, கொலை, கொலைக்கு துணை போதல் போன்ற குற்றங்கள் ஐஎன்ஏ போர்க்கைதிகள் மீது சுமத்தப்பட்டன. இவற்றுள் முதலாவதாக கர்னல் பிரேம் சகால், கர்னல் குருபக்‌ஷ் சிங் தில்லான், மேஜர் ஜெனரல் ஷாநவாஸ் கான் ஆகிய மூவர் மீதும் இணைந்து ஒரு வழக்கு தொடரப்பட்டது. இது இந்தியா முழுவதிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்த இவ்வதிகாரிகள் பின்பு போசின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து ஜப்பானியப் படைகளுக்கு ஆதரவாக பிரித்தானியப் படைகளை எதிர்த்துப் போரிட்டிருந்தனர். எனவே இவர்கள் மீது அரச துரோகக் குற்றமான “பிரித்தானியப் பேரரசர் மீது போர் தொடுக்க” முயன்றனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் கொலை, மற்றும் கொலைக்குத் துணைபோதல் குற்றங்களும் சுமத்தப்பட்டன. ஆனால் இந்திய பொதுமக்கள் இவர்களை புரட்சியாளர்களாகவும், விடுதலைப் போராட்ட வீரர்களாகவும் கருதியதால் காலனிய அரசின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தி கொண்டனர். இந்திய தேசிய காங்கிரசு மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் இவ்வழக்குகளை எதிர்த்தன. குற்றம் சாட்டப்படவர்களுக்கு உதவ குழுக்கள் அமைக்கப்பட்டன. ஜவகர்லால் நேரு போன்ற காங்கிரசு தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்குரைஞர்களாக வழக்கில் கலந்து கொண்டனர். இவ்வழக்குகள் பம்பாய் கலகம் போன்ற பிரித்தானிய இந்தியப் படைத்துறைக் கலகங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தன. இராணுவ நீதிமன்றங்கள் இவ்வழக்குகளில் ஐஎன்ஏ வீரர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து அவர்களுக்கு நாடுகடத்தல் தண்டனை வழங்கின. ஆனால் இது இந்தியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், இந்தியாவின் தலைமைத் தளபதி ஜெனரல் கிளாட் ஆச்சின்லெக் தண்டனையை நிறைவேற்றாமல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து விட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  • Stephen P. Cohen "Subhas Chandra Bose and the Indian National Army" Pacific Affairs Vol. 36, No. 4 (Winter, 1963) pp 411–429
  • Dhanjaya Bhat, "Which phase of our freedom struggle won for us Independence?" The Tribune, Sunday February 12, 2006. Spectrum Suppl.
  • Judith Brown Modern India. The making of an Asian Democracy (Oxford University Press) 1999 (2nd Edition) pp328–330
  • James L. Raj; Making and unmaking of British India. Abacus. 1997. p. 557
  • Nirad C. Chaudhuri "Subhas Chandra Bose-His Legacy and Legend" Pacific Affairs Vol. 26, No. 4 (December 1953), pp. 349–350
  • Historical Journey of the Indian National Army. INA war Memorial in Singapore. National Archive of Singapopre
  • Lebra, Joyce C., Jungle Alliance: Japan and the Indian National Army, Singapore, Asia Pacific Library
  • Borra R. Subhash Chandra Bose. Journal of Historical Review, 3, no. 4 (Winter 1982), pp. 407–439
  • Hitler's Secret Indian Army Last Section: Mutinies
  • Many I.N.A. men already executed, Lucknow . The Hindustan Times, November 2, 1945.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்ஏ_வழக்குகள்&oldid=2751061" இலிருந்து மீள்விக்கப்பட்டது