கா. ந. அண்ணாதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அறிஞர் அண்ணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பேரறிஞர்
கா. ந. அண்ணாதுரை
தமிழ்நாடு முதலமைச்சர்
பதவியில்
14 ஜனவரி,1969 – 03 பெப்ரவரி,1969
பிரதமர்இந்திரா காந்தி
ஆளுநர்சர்தார் உஜ்ஜல் சிங்
முன்னையவர்பதவி உருவாக்கபட்டது
பின்னவர்வி. ஆர். நெடுஞ்செழியன்
மதராஸ் முதல்வர்
பதவியில்
06 மார்ச்சு,1967 – 13 ஜனவரி,1969
பிரதமர்இந்திரா காந்தி
ஆளுநர்சர்தார் உஜ்ஜல் சிங்
முன்னையவர்எம். பக்தவச்சலம்
பின்னவர்பதவி ஒழிக்கபட்டது
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), இந்தியா
பதவியில்
1962–1967
குடியரசுத் தலைவர்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பிரதமர்ஜவஹர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி
சட்டமன்ற மேலவை உறுப்பினர்
பதவியில்
1967–1969
ஆளுநர்சர்தார் உஜ்ஜல் சிங்
முதலமைச்சர்இவரே
முன்னையவர்எஸ். வி. நடேச முதலியார்
பதவியில்
1957–1962
ஆளுநர்ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்,
விஷ்ணுராம் மேதி
முதலமைச்சர்காமராசர்
முன்னையவர்தெய்வசிகாமணி
பின்னவர்எஸ். வி. நடேச முதலியார்
தொகுதிகாஞ்சிபுரம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்
பதவியில்
1962 – 03 பிப்ரவரி 1969
முன்னையவர்இரா. நெடுஞ்செழியன்
பின்னவர்இரா. நெடுஞ்செழியன்
பதவியில்
17 செப்டம்பர் 1949 – 1956
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்இரா. நெடுஞ்செழியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை

(1909-09-15)செப்டம்பர் 15, 1909
காஞ்சிபுரம், மதராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா இந்தியா
இறப்புபெப்ரவரி 3, 1969(1969-02-03) (அகவை 59)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமைஇந்தியா
அரசியல் கட்சிநீதிக்கட்சி,
திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்இராணி அண்ணாதுரை
பிள்ளைகள்யாருமில்லை, தனது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார்
பெற்றோர்(s)தந்தை : நடராஜன் முதலியார்
தாயாா் : பங்காரு அம்மாள்
வேலைஅரசியல்வாதி

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.[1]

பிறப்பு

அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் செங்குந்தக் கைக்கோள முதலியார்[2][3][4] மரபில் கைத்தறி நெசவாளர் நடராசன் முதலியார் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) பிறந்தார்.[5] நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார்.[6] சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார்.

இளமைப் பருவம்

இளமை காலத்தில்

அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராச முதலியார்[7] மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.[8] அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்;[9] அண்ணாவின் அன்னை பங்காரு அம்மா, அண்ணா சிறு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டதால், அண்ணாவின் தந்தை நடராசன், இராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டர். எனவே இவரை இராசமணி அம்மாள்[9] வளர்த்துவந்தார். இவர் மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்[8] சேர்க்கப்பட்ட இவரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக[9] சிறிது காலம் பணிபுரிந்தார்.

கல்வி

1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்)[8] , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல்[9] பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்[10] . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.[9]

ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா

அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது[11]. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது[11], அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்[11]. அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.

பேச்சாற்றலும் படைப்பாற்றலும்

தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர்.[சான்று தேவை] இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.[சான்று தேவை] இவர் பத்திரிகையாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.

மொழிப்புலமை

ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,

என்று உடனே பதிலளித்தார்.[சான்று தேவை]

பெரியார் உடனான தொடர்புகள்

அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.

தத்துவம்

அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர்

என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார்.[12][13].

என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் ".....நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்......" என்றார்.[14]

அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை.[15]

கடமை கண்ணியம் கட்டுபாடு

அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. கட்டுப்பாடு, கடமை[16] ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் [16] என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும்.

அரசியலில் நுழைவு

அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 [17] இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக 1917[18] இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.

பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் [18] கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 [19] இல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்[20].

அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக[9] பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது)[9] தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்[21].

பெரியாருடன் கருத்து வேறுபாடு

பெரியாருடன் அண்ணாதுரை

பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக[22] தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.[சான்று தேவை] இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகத்து 15, 1947 அந்த நாளை கருப்பு தினமாக [23] எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று[22]. இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல[17] என்பதை இவர் வலியுறுத்தினார்.

திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் இவர் முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்[17].

பெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) பெரியார் விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்[24].

இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30[24]) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

திராவிட நாடு

திராவிடர் கழகத்தில் அண்ணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார். திமுக வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும் இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார்.

ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார்

தமிழ் திரைக்கலைஞர்களை முன் நிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டது. இது ஈ. வெ. கி. சம்பத்திற்கு அக்கட்சியில் அதிருப்தியை உருவாக்கியது. அதன் காரணமாக திமுக விலிருந்து விலகி தமிழ் தேசியக் கட்சி என்ற தனிக்கட்சியை 1961 [24]-ல் துவங்கினார். 1962-ல் அண்ணா மாநிலங்களைவையில் திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்ள விரும்புகின்றனர்.. நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு என்று உரையாற்றினார்[26].

இந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி) அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார்.

இந்திய சீனப் போர் இந்திய அரசியலமைப்பில் சில மாறுதல்களை உருவாக்கியது. இந்தியாவின் 16 வது திருத்தச் சட்டமாக (பெரும்பாலும் அனைவராலும்அறியப்படும் சட்டம் -பிரிவினைவாத தடைச்சட்டம்) பிரிவினைவாதத்தை முற்றிலும் தடைசெய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்படும்பொழுது அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இச்சட்டத்தை அண்ணாதுரைப் பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை. அதன் விளைவாக திமுக கட்சியினர் அக்கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர். திமுகவின் தனித்தமிழ்நாடு நாடு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது[27]. அதுமுதல் அண்ணாதுரை நடுவண் அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய மாநில சுயாட்சி கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். தமிழகத்தின் மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார்[28].

மாநில சுயாட்சி கொள்கையில் அவர் கட்சியின் நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தினார்.

1953 இல் கண்டனத் தீர்மானங்கள்

1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:[24]

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

இந்தி முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக ஜவகர்லால் நேரு தலைமையிலான குழு இந்திய அரசாங்கத்திற்கு (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரைச் செய்தது. அது முதல் தமிழ் நாட்டில் பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்[29].

1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1938 இல் மதராசு இராசதானியில் காங்கிரசு அரசு சி. ராசகோபாலாச்சாரி தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பாட்டை இராசாசி முன்மொழிந்து, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவித்தார். தமிழ் ஆன்றோர்கள், தலைவர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் வெகுண்டு எழுந்தனர். முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டமும் வெடித்தது.

இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கானோரை இராசாசி அரசு கைது செய்தது; தடியடியில் ஈடுபட்டது. அவ்வாறு தமிழ் காக்க புறப்பட்டு சிறை சென்றோரில் ஒருத்தர் நடராசன். இளைஞர்; தாழ்த்தப்பட்டச் சமூகத்தவர். எதிர்ப்பைக் கைவிடாது 1939 ஆம் ஆண்டு, சனவரி 15 ஆம் நாள் தன் உயிரை நீத்தார். தமிழுக்காக உயிரை ஈகம் செய்தார்.

நடராசனின் இறப்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தத் தொடங்கினர். காஞ்சிபுரத்தில் 27 பெப்ரவரி, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை கொடுத்த தடியடியில் பலர் காயமுற்றனர். இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பெப்ரவரி 13 இல் நடந்த போராட்டத்தில் கைதான தாளமுத்து என்ற இன்னொரு தமிழர், மார்ச் 11 இல் காலமானார்.

நடராசன் - தாளமுத்து ஆகிய இருவரின் ஈகங்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டியது. காங்கிரசு அரசை அவ்வாண்டு இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர், பெப்ரவரி 1940 இல், மதராசு மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.[30]

1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது[29]. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை:

திமுக கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து 1960 இல் ஆகஸ்டில் சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணாதுரை தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியலமைப்பில் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது[24].

இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்படாவிட்டால் இந்தியாவின் 15 வது குடியரசு தின்த்தை 26 ஜனவரி, 1965 துக்கதினமாக அறிவிக்கப்போவதாக அண்ணாதுரை அறிவித்தார். இந்த அறிவிப்பை அன்றைய மதராஸ் மாநில முதலமைச்சரான பக்தவச்சலம் அண்ணாதுரைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கருப்புதின அறிவிப்பை 24 ஜனவரி அன்று மாற்றியமைத்தார். இதற்கான அறைகூவலாக அண்ணாதுரை முழங்கியவை இந்தியை ஒழித்து, இந்தியக் குடியரசு நீண்ட ஆயுளுடன் வாழ்க[29]

சட்டமன்றத்தில் அண்ணா

சட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், ஆளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்பட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைகுனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.

1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார்.

என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு பெயர் மாற்றம்

1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1969 ஜனவரி 14ல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அண்ணாதுரையை யேல் பல்கலைக்கழகம், சப் பெல்லோசிப் (Chubb Fellowship) என்ற கவுரவ விரிவுரையாளராக 1967–1968 இல் அழைத்தது.[33] இந்தியர் ஒருவரை கவுரவ விரிவுரையாளராக அழைத்ததும் இதுவே முதல் முறை.[34][35]

இறுதிக்காலம்

மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர்,03 பிப்ரவரி 1969 இல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.

ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய இவரின் இதயக்கனி எம்.ஜி.ராமச்சந்திரன் இவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினால் வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார்.

இலக்கிய பங்களிப்புகள்

அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்[10]. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர்[36].

பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர்[10]. அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார்[37].

திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இது ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும்[37]. இவரின் வேலைக்காரி (1949), ஒர் இரவு ஆகிய நாடகங்களும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன[38].

வேலைக்காரியில் அண்ணாதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தியுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது[21].

இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரங்களாக விளங்கின[38]. இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள், டி.வி. நாராயணசாமி, கே. ஆர். ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்[24].

அண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியவை. அவற்றில் ஆரிய மாயை[39] (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது. ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதமும் (தண்டம்)[40], சிறைத்தண்டனையும்[24] அளிக்கப்பட்டது. காதல் ஜோதி, சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்), கம்பரசம், தீ பரவட்டும்! பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் இன்றும் அச்சில் கிடைக்கின்றன[41] .

ஆக்கங்கள்

வகித்த பொறுப்புகள்

மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர்.நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்குகொண்டது.

1957 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத்தொகுதிகளையும் வென்றது.[24] அண்ணாதுரையும் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு [24] சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.[8] திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்தது[10].

1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரசை அடுத்து உருவெடுத்திருந்தது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியுற்றார்[8]. அதே வருடத்தில் மீண்டும் திமுக பொதுச்செயலாளர் ஆனார்.பின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபெற்று அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்[8][10]. 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் (மேலவை மூலம்) மதராஸ் மாநிலத்தின் முதலமைச்சரானார்.

இதழியல்பணி

அண்ணாதுரைக்கு ஈ.வெ.ரா.பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டவுடன் குடியரசு இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் விடுதலை இதழின் ஆசிரியாரக இருந்தார். 1942ஆம் ஆண்டில் திராவிடநாடு தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தார். பெரியாரோடு பிணக்கு ஏற்பட்ட பொழுது தமது தரப்பு வாதங்களைக்கூறுவதற்காக டி. எம். பார்த்தசாரதி தொடங்கிய மாலைமணி இதழில் ஆசிரியராக இருந்தார். 1956 சூன் 15இல் தி.மு.க.விற்கென நம்நாடு என்னும் நாளிதழைத் தொடங்கியபொழுது அதன் ஆசிரியராக இருந்தார். 1963ஆம் ஆண்டில் காஞ்சி என்னும் வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். Home Land என்ற ஆங்கில வார இதழை 2-6-1957ஆம் நாள் தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார்.[42]

மறைவு

அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 [24] அன்று மரணமடைந்தார். அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) [43] இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில்.[44] இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர்[45] கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் [46] என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவுச் சின்னங்கள்

அண்ணா நினைவிடம், மெரீனா கடற்கரை, சென்னை

தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரீனா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும், தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன. வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.[47] 2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.அண்ணாதுரையின் நினைவாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அண்ணாதுரையின் சிலை.

அண்ணாதுரையின் நினைவாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அண்ணாதுரையின் சிலை

அண்ணாதுரை பிறந்த நாள்

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடுகிறது. மேலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படைகள் அரசின் விதிகளுக்குட்பட்டு, சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.[48]

அண்ணாவைப்பற்றிய நூல்கள்

  1. அண்ணாதுரை (தொகுப்பு நூல்), 1952, கலைமன்றம், சென்னை [49]
  2. அண்ணாதுரை, பி.வி.ராமசாமி, 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை-2 [50]

மேற்கோள்கள்

  1. https://tamil.oneindia.com/news/tamilnadu/today-is-the-108th-birth-anniversary-anna-262820.html
  2. https://books.google.co.in/books?id=LRduAAAAMAAJ&q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&dq=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&hl=en&sa=X&ved=0ahUKEwjx7_uPtNfqAhVLWysKHS4YAJoQ6AEIKTAA
  3. https://books.google.co.in/books?id=ToZuAAAAMAAJ&q=Annadurai+Sengunthar&dq=Annadurai+Sengunthar&hl=en&sa=X&ved=0ahUKEwjk3un3tNfqAhUDxzgGHdb-BVEQ6AEIPjAD
  4. Irschick, Eugene F. (1994). Dialogue and History: Constructing South India, 1795–1895. University of California Press. பக். 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-91432-2. https://books.google.com/books?id=gwEOfHfUFTkC&pg=PA203. 
  5. பரிமளம் சி.என்.ஏ.; அண்ணா வாழ்வும் வாக்கும்; அபிராமி பப்ளிகேஷன்ஸ், 307 லிங்கிசெட்டி தெரு, சென்னை-1; முதற்பதிப்பு 1987 திசம்பர்; பக். 11 & 12
  6. பாரதிதாசன் (9 1958). "அண்ணாதுரை". குயில் 1 (18). doi:29 சூன் 2015. 
  7. சொனேஜி, தவேஷ் (2012). Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India. சிக்காகோ பல்கலைக்கழகம். பக். 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-76810-6. https://books.google.com/books?id=Eo81ouc5OgQC. 
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 "க.நா. அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாறு மற்றும் இலக்கியப் பணிகள்". தமிழ் மின் நூலகம். பார்க்கப்பட்ட நாள் 2008-12-20.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 கருணாநிதி, முத்துவேல். "க.யா. அண்ணாதுரை (1909–1969)". வந்தேமாதரம்.காம். பார்க்கப்பட்ட நாள் 2008-12-20.
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 சத்தியேந்திர, குசி (2000). இந்து இலக்கிய அகராதி. சரூப் & சன்ஸ். பக். 9-10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8176251593. http://books.google.com/books?id=UcAwrV60cpAC. 
  11. 11.0 11.1 11.2 அண்ணா பேரவை-இங்கிலீசு பேசு-3 ஆம் பக்கம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-06-2009
  12. பக்கம். 66 தெற்கு மகள் - பி. சி கணேசன்
  13. பக்கம். 41 இந்தியாவில் மனித இயக்கம் -கணபதி பழனித்துரை, ஆர். தாண்டவன்
  14. பக்கம். 44 கருத்தரங்கம்
  15. பக்கம். 25 கா.ந. அண்ணாதுரை - பி. சி கணேசன்
  16. 16.0 16.1 அண்ணா வளர்த்த அரசியல் கண்ணியம்-டாக்டர்.அண்ணா பரிமளம்-இரா.செழியன்-சங்கொலி-அண்ணா பேரவை பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-06-2009
  17. 17.0 17.1 17.2 ராஜ்வாத், ம்மஃதா (2004). இந்தியாவின் தலித் கலைக்களஞ்சியம். அன்மோல் பதிப்பகம் பி. லிட். பக். 246-247. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8126120843. http://books.google.com/books?id=ocjlRwK1y5cC. [தொடர்பிழந்த இணைப்பு]
  18. 18.0 18.1 ரால்கன், ஒ.பி. (2002). அரசியல் கட்சிகளின் கலைக்களஞ்சியம். அன்மோல் பதிப்பகம் பி. லிட்.,.. பக். 125-128. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8174888659. http://books.google.com/books?id=P4lCjG1DUV4C&pg=PA423&dq=Madras+Dravidian+Association&lr=#PPA37,M1. [தொடர்பிழந்த இணைப்பு]
  19. வில்கின்சன், ஸ்டீவன் I(2006). "மதராசில் சுதந்திரத்திற்கு முன்னிருந்த சாதீய புழக்கங்கள்". வாக்களிப்பு மற்றும் வன்முறை: இந்தியாவின் தேர்தல் களங்கள் மற்றும் இனக்கலவரங்கள், 189-192, கேப்பிரிட்ஜ் பல்கல்க்கழகப் பதிப்பகம். 2008-12-16 அன்று அணுகப்பட்டது..
  20. கந்தசாமி, டபுள்யூ.பி. வசந்தா; புளோரின்டின் சமாரண்டேக்; கே. கந்தசாமி (2005). தீண்டாமைக்குறித்து பெரியாரின் பார்வை,அணுகுமுறை மற்றும் ஆய்வு. HEXIS: Phoenix. பக். 106. http://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA106,M1. 
  21. 21.0 21.1 சரக், டிக்கி (1993), "அரசியல் இச்சகம்: தென்னிந்தி அரசியல்வாதிகளின் திரைப்பட்த் தயாரிப்புகள்", ஆசியக் கலவியின் பத்திரிகை, 52 (2): 340–372.
  22. 22.0 22.1 ராசகோபாலன், சுவர்ணா (2001). தெற்காசிய நாடுகள் மற்றும் மாநிலங்கள். லைன் ரைன்னர் பதிப்பகம். பக். 152-154. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-55587-967-5. http://books.google.com/books?id=q7Yz5aGeoTsC. 
  23. ராமசாமி, சோ. "ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மற்றும் கா.ந. அண்ணாதுரை". இந்தியா டுடே இம் மூலத்தில் இருந்து 2008-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081024183112/http://www.india-today.com/itoday/millennium/100people/durai.html. பார்த்த நாள்: 2008-12-19. 
  24. 24.00 24.01 24.02 24.03 24.04 24.05 24.06 24.07 24.08 24.09 ஆசான், ஜிவிகே (2008). "அண்ணா ஒரு மேதை". அறிஞர் அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டு விழா (கா.ந.அண்ணாதுரை- 15 செப்டம்பர் 1909 – 3 பெப்ரவரி 1969) செப்டம்பர் 2008 முதல் செப்டம்பர் 2009 வரை கொண்டாடப்பட்டது. முதல் பகுதி செப்டம்பர் வெளியீட்டில் வந்துள்ளது. இந்த வெளியீட்டில் இரண்டாவதும் இறுதி பகுதியும் வெளியிடப்பட்டுள்ளன. நவீன புரட்சியாளர்கள். Archived from the original on 2011-01-26. பார்க்கப்பட்ட நாள் 2008-12-20.
  25. 25.0 25.1 பதனிசு, ஊர்மிலா; ரசத் கங்கூலி (2001). தெற்காசியாவின் மனித இனமனப்பான்மை மற்றும் தேசிய கட்டமைப்பு. சேஜ். பக். 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7619-9439-4. http://books.google.com/books?id=wbf2wzyuWkUC. 
  26. கங்குலி, அமுல்யா (2007-05-26). "திமுக வின் எதிர்மறை அரசியல் கொள்கை". த டிரிபியூன், இந்தியா. http://www.tribuneindia.com/2007/20070526/edit.htm. பார்த்த நாள்: 2008-12-20. 
  27. புக்கோவ்சுகி, செனி ஜே; சுவர்ணா ராசகோபாலன் (2000). மறு பகிர்வுக் குழு. கிரீன்உட் பதிப்பக குழு. பக். 19-21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-275-96377-2. http://books.google.com/books?id=mgK1Fltsh4cC. 
  28. ஜெயின், சுமித்ரா குமார் (1994). இந்தியாவின் அரசியல் கட்சிகள் மற்றும் மைய, மாநில உறவுகள். அபினவ் பதிப்பகம். பக். 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170173094. http://books.google.com/books?id=Gm9p_VPDZCgC. 
  29. 29.0 29.1 29.2 ஆர்ட் கிரேவ், ராபர்ட் (1965). "தமிழ்நாட்டில் கலகங்கள்: இந்தியாவின் மொழிப்பிரச்சினைக்கான சர்ச்சைகள் மற்றும் தீர்வுகள்". ஆசிய ஆய்வுகள் 5 (8): 399-407. http://caliber.ucpress.net/doi/abs/10.1525/as.1965.5.8.01p0095g. பார்த்த நாள்: 2008-12-20. 
  30. திருமாவளவன்; மீனா கந்தசாமி (2004). Uprrot Hindutva. பாப்புலர் பிரகாசன். பக். 125-126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8185604797. http://books.google.com/books?id=HfNRO-LtsN4C. 
  31. நந்தி வர்மன், என் (2008-01-27). "1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நினைவுகூறல்". தமிழ் தேசியம். பார்க்கப்பட்ட நாள் 2008-12-20.
  32. அண்ணாவின் அரசியல்-சட்டமன்ற நகைச்சுவைப் பேச்சுக்கள் பார்த்து பரணிடப்பட்ட நாள் 22-06-2009
  33. The Chubb Fellowship
  34. List of Chubb Fellowship Fellows
  35. https://chubbfellowship.yale.edu/past-fellows
  36. ஏனைய ஆசிரியர்கள் (1987). இந்திய இலக்கியவாதிகளின் கலைக்களஞ்சியம்- தொகுதி 1. சாகித்ய அகாடமி. பக். 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8126018038. 
  37. 37.0 37.1 ஆர்ட்கிரேவ் ஜூனியர்,, ராபர்ட், எல் (March 1973). "தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மற்றும் அரசியல்: திமுக நட்சத்திரங்கள்". ஆசியக் கள ஆய்வு (JSTOR) 13 (3): 288-305. 
  38. 38.0 38.1 குணரேட்டின், அந்தோனி ஆர்.; விமல் திசநாயகே, சுமிதா.எஸ். சக்ரவர்த்தி (2003). மூன்றாம் தலைமுறையில் மறுநினைவு. ரூட்லெட்ஜ். பக். 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-21354-1. http://books.google.com/books?id=2IFR0oHGHKUC. 
  39. ஆரிய மாயை நூல் (அச்சு வடிவில்) [1] பரணிடப்பட்டது 2020-11-29 at the வந்தவழி இயந்திரம்
  40. ராமானுசம், கே எஸ் (1967). பெரிய மாற்றம். இக்கின்பாதம்ஸ். பக். 226. http://books.google.com/books?id=dYIhAI1tNnEC&dq=&pgis=1. 
  41. அச்சில் கிடைக்கக்கூடியஅண்ணாவின் நூல்கள் [2]
  42. திராடவிடநாடு (இதழ்) 26-5-1957, பக்.4
  43. வெங்கடாசலபதி, ஏ ஆர் (2008-04-10). option=com_content&issueid=48&task=view&id=6878&acc=high "கா.ந. அண்ணாதுரை — அரசியல்வாதி, 1909–1969". http://indiatoday.digitaltoday.in/index.php option=com_content&issueid=48&task=view&id=6878&acc=high. பார்த்த நாள்: 2008-12-20. 
  44. கண்ணன், ஆர் (2004-09-15). "அண்ணா நினைவுகூறல்". த இந்து இம் மூலத்தில் இருந்து 2009-01-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090110204857/http://www.hinduonnet.com/2004/09/15/stories/2004091503061000.htm. பார்த்த நாள்: 2008-12-20. 
  45. மெக் பர்லான், டொனால்டு; நோரிஸ் மெக்ஒய்ர்டர் (1990). id=y8Pm70o2tmoC&q=Annadurai+%2215+million%22+funeral&dq=Annadurai+%2215+million%22+funeral&pgis=1 கின்னஸ் உலக சாதனை நூல், 1990G. பாந்தம் நூல்கள். பக். 400. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-553-28452-2. http://books.google.com/books id=y8Pm70o2tmoC&q=Annadurai+%2215+million%22+funeral&dq=Annadurai+%2215+million%22+funeral&pgis=1. 
  46. கிஷோர், பிஆர். இந்தியா சுற்றுலா கையேடு. டைமன்ட் பாக்கெட் புக்ஸ் பி லிட். பக். 702. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8128400673. http://books.google.com/books?id=COHI7LlpkSAC. 
  47. [3]
  48. "அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு". Archived from the original on 2021-11-25. பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  49. திராவிடநாடு (இதழ்) நாள்:22-6-1952, பக்கம் 12
  50. திராவிடநாடு (இதழ்) நாள்:10-8-1952, பக்கம் 3

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._ந._அண்ணாதுரை&oldid=3743226" இலிருந்து மீள்விக்கப்பட்டது