என். எஸ். கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(என்.எஸ்.கிருஷ்ணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
என். எஸ். கிருஷ்ணன்
கலைவாணர்
பிறப்பு(1908-11-29)நவம்பர் 29, 1908
நாகர்கோயில், பத்மநாபபுரம் பிரிவு, திருவிதாங்கூர் அரசாட்சி, பிரித்தானிய இந்தியா
(தற்போது கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்புஆகத்து 30, 1957(1957-08-30) (அகவை 48)
மதராசு,
சென்னை மாநிலம், (தற்போது சென்னை, தமிழ்நாடு), இந்தியா
பணிநடிகர்
பெற்றோர்சுடலைமுத்துப் பிள்ளை,
இசக்கி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
டி. ஏ. மதுரம்
என். எஸ். கிருஷ்ணன் &
டி. ஏ. மதுரம் (பைத்தியக்காரன் 1947)

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் (N. S. Krishnan) என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப் பிள்ளை கிருஷ்ணன் (Nagercoil Sudalaimuthu Pillai Krishnan, நவம்பர் 29, 1908 - ஆகத்து 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29 இல் சுடலைமுத்துப் பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நடத்தி வந்த தபால் அலுவலகத்தில் தபால்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தாயார் இசக்கி அம்மாள் கணவரின் வருமானம் குறைவென்பதால், குடும்ப வறுமையை சமாளிக்க தனது வீட்டிலே சிற்றுண்டி செய்து விற்று வந்தார். இந்த வறுமையான குடும்பத்தில் கிருஷ்ணன் பிறந்தாலும் தனது ஆசையான நடிப்பில் கால்பதிக்க அவர் முதலில் நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக தனது திரை வாழ்க்கையை இளமைப் பருவத்திலே தொடங்கினார். பின் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.

இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பண உதவி வழங்கியவர்.

காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

கொலைக் குற்றச்சாட்டு[தொகு]

அப்போது புகழ்பெற்ற கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் இலட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலைப் பயணத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

குடும்பம்[தொகு]

கிருஷ்ணன்-மதுரம் தம்பதிகளுக்கு 18-2-1948 இரவு 10.50 மணிக்கு பெண்மகவு ஒன்று பிறந்தது.[1] கலைச்செல்வி எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை 1948 மே 18 அன்று இறந்தது.[2] மனைவி டி. ஏ. மதுரம் 1974 இல் காலமானார்.

இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்[தொகு]

இவர் இயக்கிய படங்கள்[தொகு]

இவர் பாடிய பாடல்கள்[தொகு]

  • ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)
  • பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)
  • ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)
  • ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)
  • இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)
  • சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)
  • ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
  • காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
  • ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
  • ஆரவல்லியே (ஆர்ய மாலா)
  • கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)
  • கண்ணனெந்தன் (கண்ணகி)
  • இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)
  • கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
  • சந்திர சூரியர் (அம்பிகாபதி)
  • தீனா...மூனா...கானா...(பணம்)
  • உன்னருளால் (ரத்னமாலா)
  • என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
  • சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா ராணி)
  • நாலுக் கால் குதிரை (ஆசை)
  • தாலி பொண்ணுக்கு வேலி (ஆசை)
  • சங்கரியே காளியம்மா (நன்னம்பிக்கை)
  • வாதம் வம்பு பண்ண (டாக்டர் சாவித்திரி)]
  • காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற (டாக்டர் சாவித்திரி)
  • கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
  • ஏண்டிக் கழுதை (உத்தமபுத்திரன்)
  • தளுக்கான வால வயசு (உத்தமபுத்திரன்)
  • விடுதியில் மேய்திடுவோம் (ஜகதலப்ரதாபன்)
  • பெண்ணுலகிலே பெருமை (கிருஷ்ணபக்தி)
  • சங்கர சங்கர சம்போ (கிருஷ்ணபக்தி)
  • நித்தமும் ஆனந்தமே (பவளக்கொடி)
  • விஜய காண்டிப வீரா (பவளக்கொடி)
  • அன்னம் வாங்கலையோ (பவளக்கொடி)
  • இவனாலே ஓயாத தொல்லை (பவளக்கொடி)
  • சொந்தமாக நெனச்சு (வனசுந்தரி)
  • ஊன்னு ஒரு வார்த்தை (மனோன்மணி)
  • இன்னிக்கு காலையிலே (சகுந்தலை)
  • வெகுதூரக்கடல் தாண்டி (சகுந்தலை)
  • நல்ல பெண்மணி (மணமகள்)
  • ஆயிரத்திதொள்ளாயிரத்தி (மணமகள்)
  • சுதந்திரம் வந்ததுண்ணு (மணமகள்)
  • குடி கெடுத்த குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
  • மழையில்ல சீமையில் (தக்ஷயக்ஞம்)
  • சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
  • இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
  • சோனா இல்லன்னா (லைலா மஜ்னு)
  • சும்மா இருக்காதுங்க (நல்லகாலம்)

மறைவு[தொகு]

என். எஸ். கிருஷ்ணன் 1957 ஆகத்து 30 அன்று தனது 49வது வயதில் காலமானார்.[3]

கலைவாணர் அரங்கம்[தொகு]

தமிழ்நாடு அரசு என். எஸ். கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. குடி அரசு 21-2-1948, பக்.11
  2. "செய்திச்சுருள்". பேசும் படம்: பக். 43. சூன் 1948. 
  3. கார்த்திகேயன் வெங்கட்ராமன், தொகுப்பாசிரியர் (30 ஆகத்து 2016). 30.08.1957 - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம். தினமணி நாளிதழ். https://www.dinamani.com/specials/indha-naalil/2016/aug/30/30081957--%C2%A0கலைவாணர்-என்எஸ்கிருஷ்ணன்-நினைவு-தினம்-2558911.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எஸ்._கிருஷ்ணன்&oldid=3771683" இலிருந்து மீள்விக்கப்பட்டது