தேவதானப்பட்டி

ஆள்கூறுகள்: 78°06′22″N 9°59′55″E / 78.1062°N 9.99866°E / 78.1062; 9.99866
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவதானப்பட்டி (ஆங்கிலம்:Devadanapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது வத்தலகுண்டு - பெரியகுளம் நெடுஞ்சாலையில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 18,952 மக்கள்தொகையும், 6 உட்கிடை கிராமங்களும் கொண்ட தேவதானப்பட்டி பேரூராட்சி, 14 சகிமீ பரப்பும், 4298 குடியிருப்புகளும், 18 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]


தேவதானப்பட்டி
தேவதானப்பட்டி
இருப்பிடம்: தேவதானப்பட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 78°06′22″N 9°59′55″E / 78.1062°N 9.99866°E / 78.1062; 9.99866
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
வட்டம் பெரியகுளம்
ஆளுநர் ஆர். என். ரவி[2]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[3]
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [4]
மக்கள் தொகை 18,952 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் http://http://www.townpanchayat.in/devathanapatti


மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,772 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தேவதானப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகமானதே. தேவதானப்பட்டி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பெயர்க்காரணம்[தொகு]

இந்தப் பகுதி தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாகக் கொடுக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் இது நாளடைவில் மருவி “தேவதானம்” என்றாகி தற்பொழுது “தேவதானப்பட்டி” என்று மாறிவிட்டது என்கின்றனர்.

வரலாறு[தொகு]

இப்பகுதியை நாயக்கர் ஆட்சி காலத்தில் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்த பூசாரி நாயக்கர் என்பவர் ஆட்சி செய்தார். இங்குள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தை இவர் கட்டியுள்ளார். திருமலைநாயக்கருக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார் .[6]

தொழில்[தொகு]

இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை அதிக அளவில் உள்ளன. இந்த விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது.

கோயில்கள்[தொகு]

  • அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயில்

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் தேனி மாவட்டத்தின் சிறப்பு பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோயிலுக்கு முன்புள்ள கதவுக்குத்தான் பூசை நடைபெறுகிறது. இங்கு நெய்த்தீபமின்றி வேறு தீபம் ஏற்றப்படுவதில்லை. அன்ன நைவேத்தியம் இல்லை. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமுமே நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன. மார்ச் (மாசி) மாதம் வரும் மகாசிவராத்திரி நாள் சிறப்புத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

  • அருள்மிகு முருகமலை பரமேஸ்வரர் திருக்கோயில்

அருகில் உள்ள முருகமலையில் பரமேஸ்வரர் பார்வதி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இத்தலத்தில் மூலவர் சுயம்புக்கடவுளாக அமைந்துள்ளனர் .இங்கு வந்து தரிசிக்கும் தம்பதிக்கு குழந்தை வரம் கிட்டும் என்றும் அதிலும் ஆண் குழந்தை வேண்டுவோர்க்கு ஈசன் வரம் தருவார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு மாத பவுர்ணமி, பிரதோஷம் மற்றும் சிவராத்திரி நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. இங்கு கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகை அன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுகிறது .திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருவிழாவைக் காண சுற்றுவட்டார மக்களும் வருகின்றனர். திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாகப் பக்தர்களினால் வழங்கப்பட்ட தீபப்பொருட்களினால் மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது . ..

தேவதானப்பட்டி பள்ளிவாசல்[தொகு]

தேவதானப்பட்டியில் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இதில் சின்ன பள்ளிவாசல் என கட்டப்பட்டு நாளடைவில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பெரிய பள்ளிவாசலாக கட்டப்பட்டது. பண்டைய காலத்தில் வெள்ளிமலை பள்ளிவாசல் என்ற பள்ளிவாசல் உருவாக்கப்பட்டு தற்பொழுது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பெருநாள் தொழுகை தொழ வைக்கப்படுகிறது. இவை தவிர மட்டமலை தர்கா, காட்வாவா சாகிபு தர்கா, தைலயார் அருகில் கொந்தாளம் சாயபு தர்கா என பல தர்காக்கள் உள்ளது.

வசதிகள்[தொகு]

இங்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியும், அரசு தொடக்கப்பள்ளியும், ஒரு தனியார் நடுநிலைப்பள்ளியும் , இன்னொரு தனியார்  தொடக்கப்பள்ளியும் உள்ளன . இங்கு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், அஞ்சலகம் போன்றவையும் உள்ளன. இங்கு வாரந்தோறும் கூடும் சந்தையில் காய்கறிகளும், மளிகை சாமான்களும் கால்நடைகளும் விற்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. தேவதானப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
  6. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதானப்பட்டி&oldid=3594633" இலிருந்து மீள்விக்கப்பட்டது