கொடைக்கானல்-மூணாறு சாலை
கொடைக்கானல்-மூணாறு சாலை (பழைய SH-18) தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கி தேணி மாவட்டத்தின் வழியாக சென்று, கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் முடிவடைகிறது. இந்த சாலை 81 கிலோ மீட்டர் நீளமுள்ளது. இது 1942ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட சாலை ஆகும். இந்த சாலை 2,480 மீட்டர் (8,140 அடி) உயரத்தில் வந்தரவு சிகரத்தில் அமைந்துள்ளது. இந்த சாலை 1990 ஆம் ஆண்டு மூடப்படுவதற்கு முன்பு இதுவே தென்னிந்தியாவின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்த சாலை ஆகும்.
வரலாறு[தொகு]
1915 ஆம் ஆண்டு வத்தலக்குண்டு முதல் கொடைக்கானல் வரை சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து பெரிஜம் ஏரி வழியாக டாப் ஸ்டேஷன் வரை சாலை அமைக்கப்பட்டது. இதுவே எஸ்கேப் ரோடு என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. இச்சாலை மூணாறு முதல் கொச்சி வரை செல்லும் சாலையுடன் இணைகிறது. இச்சாலை வழியாக கொச்சியை அடைய 11 மணி நேரமாகும். மழைக் காலங்களில் இச்சாலையை பயன்படுத்த முடியாது.
1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் மதராஸ் நகரை தாக்கியது. அப்போது மேலும் தாக்குதல் அதிகரிக்கும் என்று அஞ்சிய ஆங்கிலேயக் குடும்பங்கள் கொடைக்கானலுக்கு குடி பெயர்ந்தனர். மேலும் தாக்குதல் அதிகரித்தால், இவர்கள் கொச்சி துறைமுகத்தின் வழியாக தப்பிச்செல்ல இச்சாலையை பயன்படுத்த திட்டமிட்டிருந்தார்கள். எனவே, இந்த சாலை எஸ்கேப் ரோடு என்று அழைக்கப்பட்டது.
இந்த சாலை 1990 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. தமிழ்நாடு வனத்துறைக்கும் கேரள நெடுஞ்சாலை துறைக்கும் ஏற்பட்ட உரிமைப் பிரச்சனைகளால் இந்த சாலையின் பராமரிப்பு கைவிடப்பட்டது. இதனால் இந்த சாலை தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.