மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும். மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் புனரமைக்கப்பட்டது.[1]
நம்பிக்கை
[தொகு]மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் எனும் பாண்டிய மன்னன் சமண மதத்தைத் தழுவிய போது அவனது ஆட்சிக்குட்பட்ட பாண்டிய நாட்டின் பகுதி முழுவதும் சமண மதம் இருந்தது. சிவாலயங்களில் பூசைகள் நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் சிவ வழிபாடு வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. கூன்பாண்டியனின் மனைவி மானியும் (மங்கையர்க்கரசி) சைவ சமயத்தில் பற்று கொண்டவர். மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். அரசியும் மந்திரியும் கலந்தாலோசித்து திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். மதுரைக்கு வந்த திருஞானசம்பந்தரை மந்திரி குலச்சிறையார் மதுரை ஆதீன மடத்தில் தங்க வைத்தார். சமணர்கள் சம்பந்தரைக் கொல்லும் நோக்கத்துடன் சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில் வந்து ஆலவாய் அண்ணலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக மாறிக் கூன்பாண்டியனை வாட்டியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் பலனில்லை. திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வெப்பு நோயைக் குணப்படுத்தினார். சமணர்கள் மீண்டும் போட்டிக்கு அழைத்தனர். அனல்வாதம், புனல்வாதம் அனைத்திலும் ஞானசம்பந்தர் வென்று கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார்.
ஞானசம்பந்தர் சைவத்தையும், தமிழையும் மதுரையில் மீண்டும் நிலைநாட்டினார். இச்செய்திகள் முழுவதும் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்திலும் சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகையிலும் நம்பியாண்டார்நம்பிகள் அருளிய திருத்தொண்டர் அந்தாதியிலும் காணப்படுகின்றன. தமிழகத் திருக்கோயில் கல்வெட்டுகள் மற்றும் தேவாரப்பதிகப் பாடல்கள் ஆகியவற்றிலும் இவ்வரலாற்றுச் செய்திகள் சிறப்பாக இடம்பெற்று உள்ளன.
பீடாதிபதி தேர்வுமுறை
[தொகு]திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும். இன்றுவரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292 ஆவதாக அருணகிரிநாதர் இருந்தார். இவர் தனக்கு அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆவார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் மூத்த தம்பிரான் ஆக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆன்மீக பணியிலும் பொது பணியிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார்கள்.[2]
பீடாதிபதிகள் பட்டியல்
[தொகு]- 291 சோமசுந்தர தேசிகர்
- 292 அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி (13 ஆகத்து 2021 வரை)
- 293 ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (23 ஆகஸ்டு 2021 முதல்)
மதுரை ஆதீனக் கோயில்கள்
[தொகு]மதுரை ஆதினத்திற்குரிய மூன்று கோயில்கள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் உள்ளது.[3]
- கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
- திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
- கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில், திருத்துறைப்பூண்டி
- மீனாட்சி அம்மன் கோவில், மதுரை
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ சைவ ஆதீனங்கள், முனைவர் தவத்திரு ஊரான் அடிகள், வர்த்தமானன் பதிப்பக வெளியீடு, 2002 ப. 545–550
- ↑ http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=592455&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%20%3C/font%3E%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88[தொடர்பிழந்த இணைப்பு]!
- ↑ "Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam". temple.dinamalar.com. Retrieved 2025-05-05.