பிரதோசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரதோசம் (Pradosha) என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால் ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.

பிரதோச விரதம்[தொகு]

பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.

இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் அநுட்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்.

புராணக் கதை[தொகு]

மானிடர்கள் மட்டுமல்லாமற் பட்சிகள் தொடங்கி முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவனகக் கூறப்படுபவன் தேவேந்திரன். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன் செல்வங்களை இழந்த இந்திரன், தேவகுருவின் ஆலோசனையின்படி பாற்கடலைக் கடைந்து ஐராவதம், பரிவாரம் முதலிய செல்வங்களை மீட்க திட்டமிட்டான். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவது இயலாத காரியமென அறிந்த தேவேந்திரன், தனது குல எதிரியென்றும் பாராமற் அசுர பலத்தையும் நாடினான். பாற்கடலை கடையத் துணைப்புரிவதால் என்றும் மரணமெய்யா நிலைதர வல்ல அமிழ்தத்தில் தனக்கொர் பங்கு கிடைக்குமென எண்ணி ஒப்புகொண்டனர் அசுரர்கள். பாற்கடலில் பள்ளிகொண்டருளும் நாராயணனார் தனது இரண்டாவது அவதாரமாகிய கூர்மாவதாரமெடுக்க தருணம் வந்ததையறிந்து தேவேந்திரனுக்கு உதவிட எழுந்தருளினார்.

பாற்கடற் கடைதல்[தொகு]

வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தர மலையை மத்தாக்கி, மலை கடலிலமிழா வண்ணம் கூர்மவதார கடவுள் தாங்கியபடி, தேவர்களும் அசுரர்களும் கடைய முற்பட்டனர். ஆனால் மலைமத்தோ அசைவேண்ணாவென்று அடம்பிடித்தது. இன்னும் பலவான்கள் தேவையெனயறிந்த இந்திரன், இராவணினிடமே மல்யுத்தம் செய்த சக்திசாலிகளாகிய ஆயிரங்கரங்களையுடைய கார்த்தவீரியார்ஜுனன் மற்றும் வானர வேந்தன் வாலியின் உதவியை நாடினான். அசுரர்களுடன் கார்த்தவீரியார்ஜுனன் பாம்பின் தலையினருகே சேர, தேவர்களுடன் வாலி பாம்பின் வாலினருகே சேர்ந்து மந்தர மலையை அப்படியும் இப்படியுமாக இழுத்துக் கடலை இனிதே கடைய ஆரம்பித்தனர்.

தேவ அசுர ஆவல்[தொகு]

  1. தீராப் பகையரும் சாவா வரங்கிடைக்குமென ஒன்றுக்கூடி உழைக்கச் செய்ததந்த ஆவல்.
  2. குணத்தாற் மாறுபட்டோரும் வயதேறா மேனிபெற ஒருமித்த எண்ணங் கொடுத்ததந்த ஆவல்.
  3. நா இதுகாருமுணரா சுவையென கொண்டாடி நிற்கசெய்ததந்த ஆவல்.
  4. முக்கனியுந் தேனுஞ் சர்க்கரையுடஞ் சேர்த்துப் பிசைந்தப் பழச்சாறும் வீணெனக் கூறச்செய்ததந்த ஆவல்.
  5. உடற்கூறுபடினும் உயிரெனுஞ் சீவன் உடனுறைய காந்தத்தினைத் தரவல்லவெனப் போற்றச் செய்ததந்த ஆவல்.
  6. அமிழ்தத்தினை அருந்தியவர் உலகயின்பமனைத்தும் சுவைத்தவரென பெருமைக் கொள்ளச் செய்ததந்த ஆவல்.
  7. இவையன்றி பெறுவதற்கு வேறு பேறில்லையென மருளச் செய்ததந்த ஆவல்.

ஆலகாலத் தோன்றல்[தொகு]

சாகா நிலை தரவல்ல அமிழ்ததின்பாற் கொண்டபற்றினாற் கடைவதை தீவிரபடுத்த, அமிழ்த்தின் வரவை எதிர்நோக்கிட்ட வேளையில், அவர்களுக்கெல்லாம் பேரிடியாக கருகருவென திரண்டு நின்றது ஆலகாலம் எனும்விடம். இக்கொடியவிடத்தில் மேலும் வலுசேர்த்தாற் போல் வாசுகி வலிபொறுக்க முடியாமல் நஞ்சினை கக்கியது. சற்றும் எதிர்பாராமல் தலைப்பட்ட பேராபத்தினால், சித்தம் கலங்கிட, சிந்தை தடுமாறிட, மரணஓலம் கேட்டிட, கை காலெல்லாம் உதறிட, செய்வதறியாமற் பாலகர் போல் தன்னிலை எண்ணி மனந்நொந்து கண்ணீர் மல்கினர்.

மரணப்பயம் கொண்ட நெஞ்சினுள் சங்கரன் நினைவு இருளைக் கிழித்துத் தென்படும் ஒளியினைப் போலெழ, சதாசிவா!!! சங்கரா!!! அபயமென அலறி, பாற்கடலினிருந்து கயிலைநாதனின் திருவடியிற் தஞ்சம் புக கயிலைமலைக்கு விரைந்தனர். ஆலகாலமோ இவர்கள் செல்லும் வழிநெடுக்க தொடர்ந்துவர, தப்பித்தோம் பிழைத்தோமென மரணோலத்துடன் நந்தியம்பதியின் இருப்பிடத்திற்கு வந்தனர். விடயமறிந்த நந்தியோ அபயமருள பரம்பொருளின் கடைக்கண்பட அவ்வனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

சேதியறிந்து திகைத்தனர் அங்கிருந்தோர். எப்பணி தொடங்கினும் சிவனருளைப் பெறும் நெறியினை மறந்த காரணத்தினாலேயே இவ்வபாயத்தில் சிக்கிவிட்டோமென பரம்பொருளின் திருவடியில் சரணடைந்தனர் ஓடிவந்தோர்.

தீவினைத் தீர்த்தல்[தொகு]

மறுமொழியேதுங் கூறாமற் நாடிவந்தோர் உயிர்காக்க அபயந் தந்தருள மனமிறங்கினார் ஒப்பாரும் மிக்காருமில்லா சிவபெருமான். இந்நிலையில் கடைந்தோரின் உயிரைக்கவர காலனாக கயிலைக்கே வந்தது அவ்வாலகாலம். நெறிமறந்தாற் துன்பம் அவர்தம் செய்வினையாயினுந், தவறை யொப்புக்கொண்டு சரணடைந்தோர் இன்னல் போக்க, சித்தர்கள் கூடியிருக்குமந்த கயிலைமலையில், சிவகணங்கள் அஞ்சிய “அவ்விடத்தை, இவ்விடத்திற்குக் கொண்டு வருவாயாக!!!” யெனச் சுந்தரரை நோக்கி திருவாய் மொழிந்தார் விரிசடைப் பெருமான். பாரில்வுள்ளோர் பயந்து நடுங்கிய விடத்தினை ஒன்றுத்திரட்டி உருண்டையாக்கிட சுந்தரர், “நமசிவாய!!! நமசிவாய!!! நமசிவாய!!!” வென முன்மொழிய, அவையிலிருந்தோர் அதனை வழிமொழிய, அண்ட சராசரங்களும் இறைவனின் அத்திருநாமத்தையே உச்சரித்தவனவாக ஒருமித்த சிந்தனையிற் ஒடுங்க, அக்கொடியவிடமானது வடிவஞ் சிறுத்து உருண்டையானது.

பிரளயக் காலத்து அக்னியினைப் போன்ற வீரியமிகு விடத்தினை தன்னிருக் கரங்களால் ஏந்திய ஈசன் அவையோரை நோக்க, “ஐயனே!!! ஆலகாலத்திலிருந்து எங்களைக் காக்க உகந்த வழி செய்க” வென தேவ அசுரரனைவரும் வேண்டினர், நடப்பன யெண்ணி மலைமகள் பதற, அவள் தமையனார் தோள் நடுங்க, அடியவர்கட்கு அடியவராம் சிவனார் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவ்விடத்தினை வாயிற்யிட்டு விழுங்கலானார்.

அம்மாசறுகோனின் அருளை காணுங்கால் பயங்கொண்டவராகத் திகைத்து நின்ற உமையும், பரந்தாமனும், எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் யுடலிற் நஞ்சு சேர்ந்தால் சகல யுயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சி, ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை யிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் சிவனார்.

இவ்வாறு கயிலையில் சகல தேவ அசுர படைசுல அபயந்தேடி ஒன்றாகக் கூடியிருக்கின்ற வேளையிற் நாமும் கோயினுளிருக்க வரவிருக்கின்ற அபாயம் ஆலாமேயாயினுங் ஈசனின் திருவருளால் மறைந்துப் போகுமென்பது உறுதி.

பிரதோஷக் காலம்[தொகு]

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோசகாலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.

பிரதோச வகைகள்[தொகு]

பிரதோசத்தில் 20 வகைகள் உள்ளன. அவையாவன:

  • 1.தினசரி பிரதோஷம்
  • 2.பட்சப் பிரதோஷம்
  • 3. மாசப் பிரதோஷம்
  • 4. நட்சத்திரப் பிரதோஷம்
  • 5. பூரண பிரதோஷம்
  • 6. திவ்யப் பிரதோஷம்
  • 7.தீபப் பிரதோஷம்
  • 8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
  • 9. மகா பிரதோஷம்
  • 10. உத்தம மகா பிரதோஷம்
  • 11. ஏகாட்சர பிரதோஷம்
  • 12. அர்த்தநாரி பிரதோஷம்
  • 13. திரிகரண பிரதோஷம்
  • 14. பிரம்மப் பிரதோஷம்
  • 15. அட்சரப் பிரதோஷம்
  • 16. கந்தப் பிரதோஷம்
  • 17. சட்ஜ பிரபா பிரதோஷம்
  • 18. அஷ்ட திக் பிரதோஷம்
  • 19. நவக்கிரகப் பிரதோஷம்
  • 20. துத்தப் பிரதோஷம்

திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சோமவாரப் பிரதோசம் எனவும், சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படுகிறது.[1]

சோம சூக்தப் பிரதட்சணம்[தொகு]

சோம சூக்தப் பிரதட்சணம் என்பது பிரதோச நாளில் சிவாலயத்தினை வலம் வரும் முறையாகும். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள். இம்முறையிலேயே சிவாலயங்களில் பிரதோசக் காலங்களில் வலம் வருகிறார்கள்.[2]

திருமுழுக்குப் பொருள்களும் பலன்களும்[தொகு]

  1. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
  2. பழங்கள் - விளைச்சல் பெருகும்
  3. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
  4. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
  5. தேன் - இனிய சாரீரம் கிட்டும்
  6. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
  7. எண்ணெய் - சுகவாழ்வு
  8. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
  9. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  10. தயிர் - பல வளமும் உண்டாகும்
  11. நெய் - முக்தி பேறு கிட்டும்

பிரதோசதலங்கள்[தொகு]

நந்தி தேவர் துதி[தொகு]

நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி, சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி, கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி. கைலை யிலே நடம்புரியும் கனிந்த நந்தி..

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி நாள்தோறும் தண்ணீரில் குளி க்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி செவி சாய்த்து அருள் கொடு க்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

நாட்டமுள்ள நந்தி

நந்தியிது நந்தியிது நா ட்டமுள்ள நந்தியிது நந் தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிது செந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிது சிந்தையில் நினைப்பவ ர்க்குச் செல் வம்தரும் நந்தி யிது (நந்தி)

தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது எல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது ஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிது வெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது

பச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிது பார்ப்பவர்க்குப்பலன் கொடுக்கும் பட்சமுள்ள நந்தியிது சங்கம் முழங்குவரும் சங்கர னின் நந்தியிது எங்கும் புகழ்மணக்கும் எழி லான நந்தியிது (நந்தி)

கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிதுநற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிது நெய்யிலே குளித்து வரு ம் நேர்மையுள்ள நந்தியிது ஈஎறும்பு அணுகாமல் இறைவ ன்வ ரும் நந்தியிது (நந்தி)

வானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிது காணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிது உலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிது நக ரத்தை வளர்த்துவரும் நா ன் மறையின் நந்தியிது (நந்தி)

நந்திதேவர் வணக்கம்

(ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என் ற மெட்டு)

வழிவிடு நந்தி வழிவிடுவே வாழ்வில் நாங்கள் வளர்ந்துயர வழிவிடு நந்தி ! வழிவிடுவே வையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு)

எம்பிரான் சிவனைச் சுமப் பவனே எல்லா நலனும் தருபவனே ஏழைகள் வாழ்வில் இருளகல என்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு)

நீரில் என்றும் குளிப்பவனே நெய்யில் என்றும் மகிழ்பவனே பொய்யில்லாத வாழ்வு தர பொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு)

உந்தன் கொம்பு இரண்டிடையே உமையாள் பாகன் காட்சிதர தேவர் எல்லாம் அருள் பெற்றார் தேனாய் இனிக்கும் செய்தி அப்பா. (வழிவிடு)

தேடிய பலனைத் தந்திடுவாய் தேவர் போற்றும் நந்திதேவா ! வாழ்வில் வளமே வந்துயர வழியே காட்டி அமைந் திடுவாய். (வழிவிடு)

நந்தனார் போற்றும் நந்தி தேவா ! நாலுந் தெரிந்த வல்லவ னே எம்பி ரான் அருளை எமக்கருள என்றுந் துணையாய் நிற்பவனே. (வழிவிடு)

பிரதோஷம் என்றால் உன் மகிமை பெரிதும் வெளியில் தெரிந்திடுமே தேவர்க்குக் காட்சி உன்மூலம் தெரியச் செய்த பெரியவனே. (வழிவிடு)

நலம்தரும் நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி பேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.

கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி குடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "www.aanmegam.co.in - பிரதோசம் - Pradosham".
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-03-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதோசம்&oldid=3677278" இலிருந்து மீள்விக்கப்பட்டது