புனித பவுல் புதுக்காவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனித பவுல் புதுக்கவிதை என்னும் கிறித்தவக் காப்பியத்தை கவிஞர் ஜோரா என்னும் பெயர் கொண்ட மா.ஜோசப் ராஜ் புதுக்கவிதைப் பாணியில் ஆக்கியுள்ளார். இந்நூல் 2009இல் சென்னை பிரேம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.

நூலின் உள்ளடக்கம்[தொகு]

இக்காப்பியத்தின் பாட்டுடைத் தலைவர் புனித பவுல். இவர் கி.பி. முதல் நூற்றாண்டில் யூத சமயத்தில் ஆழ்ந்த பிடிப்புடையவராய், தொடக்க காலக் கிறித்தவ சபையைத் துன்புறுத்தியவர். சிலுவையில் உயிர்துறந்து பின்னர் உயிர்பெற்றெழுந்த இயேசுவை அவர் ஒருநாள் காட்சியில் கண்டார். அன்றிலிருந்து பவுல் இயேசுவின் சீடராக மாறினார்; இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைப்பதே அவருடைய வாழ்க்கைக் குறிக்கோள் ஆயிற்று.

புனித பவுலின் வரலாற்றையும் அவர் அறிவித்த கிறித்தவ நற்செய்திப் போதனையையும் புனித பவுல் புதுக்கவிதை எடுத்துரைக்கிறது.

நூல் பிரிவுகள்[தொகு]

இக்காப்பியம் புனித பவுலின் பிள்ளைப் பருவம் தொடங்கி இலட்சியப் பயணம் ஈறாகப் பதினாறு தலைப்புகளில் அவருடைய வாழ்வியலைப் புதுக்கவிதையாக்கிப் பாடுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு பாடல்[தொகு]

ஆசிரியர் புனித பவுலை ஒரு புயலுக்கு ஒப்பிடுகிறார்:

புனித பவுல் - புனிதருள் புயல்
முதலில் -
ஆண்டவரை வீழ்த்த
வெகுண்டெழுந்த புயல்!
பிறகு
ஆண்டவரை வாழ்த்த
சுழன்றடித்த புயல்!

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).