கன்னிமரி காவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னிமரி காவியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை இயற்றியவர் த.பத்திநாதன் என்பவர். இந்நூல் 1987ஆம் ஆண்டு பாடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

இக்காவியத்தைப் பாடிய கவிஞர் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறையில் பணியாற்றியவர். அன்னை மரியாவின் வரலாற்றை அவர் இந்நூலில் எடுத்தியம்புகிறார். மனித மீட்பு வரலாற்றில் அன்னை மரியாவின் வாழ்வும் இயேசுவின் வாழ்வும் இணைந்திருக்கும் அருமையை இக்காவியத்தில் பாடுகிறார்.

நூல் பிரிவுகள்[தொகு]

கன்னிமரி காவியத்தில் இருபத்தேழு தலைப்புகள் உள்ளடங்கும். நூலின் இறுதியில் ஆரோக்கிய மாதா, லூர்து மாதா, பாத்திமா மாதா ஆகிய பெயர்களில் வழங்கும் அன்னை மரியாவின் காட்சிகளையும் அன்னையின் வேண்டுதலால் நிகழ்ந்த புதுமைகளையும் பொலிவுறப் பாடி கவிஞர் இணைத்துள்ளார்.

துயருற்ற அன்னை மரியா[தொகு]

திருமகன் சிலுவை சுமந்து சென்ற வழியில் நின்று தியானித்து உருகிய அன்னை மரியாவின் துயரத்தை கவிஞர்,

என்றெல்லாம் திருமரியின் இதயம் தன்னில் ஈடற்ற
     தன் மைந்தன் தியாகம் பற்றி
எண்ணங்கள் எழுகின்ற போதில் அன்னை
     எழுந்திடுவாள்! கல்வாரி மலையில் ஏசு
புண்பட்ட கால்களோடு நடந்து சென்ற புனிதமிகும்
     சிலுவையதன் பாதை மீதில்
அன்னை யவள் சென்றிட்டாள்! தியானம் செய்தாள்
     அறவாழ்வின் விளக்காக இலங்கி வந்தாள்

என்று விவரிக்கின்றார்.

ஆதாரம்[தொகு]

இர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிமரி_காவியம்&oldid=3175794" இலிருந்து மீள்விக்கப்பட்டது