தமிழக சிவன் கோயில்களின் சிற்பவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக சிவன் கோயில்களின் சிற்பவியல் (Iconography of Shiva temples in Tamil Nadu), சிவபெருமானின் முழுமுதற்கடவுளாகக் கொண்ட சைவ ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டமைந்ததாகும். ஆகமங்கள் மதக்கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்ததாகும்.[1] ஆகம விதிகளின்படி, கோயில் வழிபாடானது தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் (கி.பி.551-901) தொடங்கியது. சோழர் காலத்தில் (கி.பி.848-1279) முழுமையைப் பெற்றது.[2] சோழர் காலத்தில் கோயில்கள் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலும் கட்டப்பட்டன. கோயிலில் பல தெய்வங்களின் சிற்பங்களை அமைப்பதற்காகக் கோஷ்டங்கள் உள்ளன. முதலில் லிங்கத்திருமேனியும் தொடர்ந்து திருச்சுற்றில் பிற தெய்வ உருவ சிற்பங்களும், தொடர்ந்து சோழர் காலத்தில் பரிவார தெய்வங்களின் சிற்பங்கள் இடம் பெற ஆரம்பித்தன. தமிழகத்தில் சிவன் கோயில்களின் ஆகம விதிகளின் அடிப்படையில் கோஷ்டங்கள் அமைக்கும் முறையானது நவீன காலத்தில் தொடர்கிறது. முதன்மை சிற்பமான லிங்கத்திருமேனியைப் போலவே அனைத்து சிவன் கோயில்களிலும் விநாயகர் மற்றும் பார்வதியின் சிற்பங்கள் காணப்படுகின்றன. விழா நாட்களிலும், வழிபாட்டு முறையிலும் பெரும்பாலும் அனைத்துக் கோயில்களும் அதே முறையிலான நடைமுறையில் பின்பற்றப்படுகிறது. இதற்கு சில விதிவிலக்குகளும் உண்டு. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ள முன்னீஸ்வரம் கோயில், கோனேஸ்வரம் கோயில், தென்னவர்மன் கோயில், கேதீஸ்வரம் கோயில், நகுலேஸ்வரம் கோயில் போன்ற பெரும்பாலான சிவன் கோயில்கள் திராவிட கட்டிடக்கலைப்பாணியில் அமைந்தவையாகும்.

சைவக் கோயில் கட்டுமானத்தின் பின்னுள்ள குறியீடு[தொகு]

திராவிடக் கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணமான திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் கோயில்

கோயிலின் கட்டட அமைப்பானது மனித உடலை ஒத்து அமைந்த வடிவில் காணப்படுகிறது.[3][4] ஒன்றையோடு ஒன்று சுற்றி அமைந்துள்ள ஐந்து சுவர்கள் மனித இருப்பின் கோசமாகக் கருதப்படுகிறது.[5] வெளிச்சுவரானது அன்னமய கோசமான நம் உடலையும் [5] அடுத்ததாக உள்ள பிரணமய கோசா முக்கியமான சக்தியான மூச்சையும் [5] மூன்றாவது மனத்தையும் [5] நான்காவது விஞ்ஞானமயமான புத்தியையும் [5] ஐந்தாவதும் முக்கியமானதுமான கோசா ஆனந்தமயத்தையும் குறிக்கிறது.[5]

திராவிட கட்டடக்கலைப்பாணியில் அமைந்த கோயில்கள் பலவகையில் அமைந்த முறையைப் பின்பற்றுகிறது. அவை காலத்தால் மட்டுமே வேறுபடுகின்றன.:[6]

  • கோயிலின் முக்கிய அமைப்பு கருவறையின் மீதமைந்த விமானம் ஆகும்.
  • மண்டபம் கருவறையை நோக்கிச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
  • வெளியிலிருந்து காணும்போது முக்கியமான இடத்தைப் பெறுவது கோபுரமாகும்.
  • தூண் மண்டபங்கள் விழாக்காலங்களிலின்போதும் தினசரி நிகழ்ச்சிகளின்போதும் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக ஒரு கோயிலானது, தீர்த்தம் எனப்படுகின்ற குளத்தையோ, கிணற்றையோ கொண்டு அமைந்திருக்கும்.[6]

பொதுவான சொற்கள்[தொகு]

இவ்வகையான சொற்கள் தமிழ்நாட்டிலுள்ள சிவன் கோயில்களுக்கு மட்டுமன்றி திராவிட கட்டடக்கலையில் அமைந்த அனைத்துக்கோயில்களுக்கும் பொருந்தும்,

மூலவர் சன்னதி அல்லது கருவறை[தொகு]

கர்ப்பகிருஹா அல்லது கர்ப்ப க்ரஹா என்பது சமஸ்கிருத சொல்லாகும். ஓர் இந்துக் கோயிலில் இறைவன் மூலவராகக் குடிகொண்டுள்ள கருவறையைக் குறிக்கும். கரு உள்ள அறை என்ற நிலையில் கர்ப்ப என்பது கருவினையும் க்ரஹா என்பது இடத்தையும் குறிக்கும். கருவறையில் கோயில் பூசாரிகள் மட்டுமே செல்ல அனுமதியுண்டு.[7][8]

விமானம்[தொகு]

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தங்க விமானம்

இந்துக் கோயிலின் மூலவர் அமைந்துள்ள இடத்தின் மேலுள்ள பகுதி விமானம் எனப்படும்.[9][10] பிற தெய்வ சிற்பங்கள் அமைந்துள்ள கூரையின்மீதுள்ள வடிவமும் விமானம் எனப்படும். கோபுரத்தினைப் போல இது அதிக முக்கியம் பெறுவதில்லை. அதற்கு விதிவிலக்காக சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட கூரையினைக் கொண்டமைந்த விமானத்தைக் கொண்ட கனகசபையையும், திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கோயிலின் விமானத்தையும் கூறலாம்.

பிரகாரம்[தொகு]

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பிரகாரம்

கருவறையைச் சுற்றி அமைந்துள்ள வெளிப்பாதை பிரகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. அது பெரும்பாலும் திறந்த நிலையில் காணப்படும். சில கோயில்களில் உள் பிரகாரம் சுவர்களால் மூடப்பட்ட நிலையில் காணப்படும். ஓர் இந்துக் கோயிலின் [11] வழிபாட்டுக்கூடமானது முதல் பிரகாரத்தில் கருவறையின் முன்பாகக் காணப்படும்.[12]

கோபுரம்[தொகு]

அண்ணாமலையார் கோயில் கோபுரங்கள்

தென்னிந்தியாவில் கோபுரம் என்பது பெரும்பாலும் அழகாக வடிவமைக்கப்பட்ட நிலையில் கோயிலின் தென் புற வாயிலில் காணப்படும். திராவிடக்கட்டடக்கலையின் முக்கியமான கூறாக அமையும்.[13] கோபுரத்தின் மேல் கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோபுரத்தைச் சுற்றிலும் கோயிலின் சுவர் அமைந்திருக்கும். கோபுரம் வாயிலாகக் காணப்படும்.[11]

பல்லவர் கால ஆரம்ப நிலைக் கட்டுமானமாக கோபுரம் கருதப்படுகிறது. கி.பி.12ஆம் நூற்றாண்டில், பாண்டியர் காலத்தின்போது இந்த வாயில்கள் வெளியில் இருந்து பார்க்கும்போது அதன் பிரம்மாண்ட தோற்றம் காரணமாக உள்ளே உள்ள கருவறையைவிடவும் முக்கியமானவையாக, அமைந்தன.[14] உள் கருவறையில் வேலைப்பாட்டுடன் காணப்படும். ஒரு சன்னதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கோபுரம் உண்டு.[15] சதுர அல்லது செவ்வக வடிவினைக் கொண்ட கருங்கல் அல்லது செங்கல் அடித்தளத்தின்போது பல நிலைகளைக் கொண்டு அது அமைந்துள்ளது. ஒரு கோயிலில் மூலவர் சன்னதியினைச் சுற்றி பல கோபுரங்களைக் காணலாம். இருந்தாலும் ராஜ கோபுரம் முதன்மை கோபுரமாகக் கருதப்படுகிறது. அது பெரும்பாலும் உயரமானதாகவும், பொதுவாக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற வழியினைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும்.

முக்கிய தெய்வங்கள்[தொகு]

இலிங்கம்[தொகு]

லிங்க வடிவ சித்தரிப்பு
அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்

லிங்கம் (லிங்கா, லிங், சிவ லிங்கா, சிவ் லிங்எனப்படும் குறி அல்லது குறியீடானது) இந்து மதக் கடவுளான இந்துக் கோயிலில் வழிபாட்டில் உள்ள தெய்வமான சிவனைக் குறிக்கும் [16] பெரும்பாலான தென்னிந்திய சைவக்கோயில்களில் லிங்கமே முதன்மை தெய்வமாகக் காணப்படும். லிங்கம் என்பதானது சக்தி அல்லது பெண்மையின் ஆக்க சக்தியின் அடையாளமான யோனியுடன் காணப்படும்.[17] லிங்கமும் யோனியும் இணைந்து பிரிக்கமுடியாத ஆண் பெண் ஒன்றிணைப்பைக் குறிக்கும்.[18] எல்லையற்ற இறைவனின் தன்மையைக் குறிக்கின்ற ஆரம்பம் மற்றும் முடிவை உணர்த்துவது லிங்கத்தைப் பற்றிய ஒரு கோட்பாடாகும்.[19][20] தென்னிந்தியாவில் சோழர் காலத்தில் (கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலத்தில்) லிங்க வழிபாடானது அதிகமாகக் காணப்பட்டது. சிவனை லிங்க வடிவில் வழிபடுவது பற்றி மிகவும் பழமையான ரிக் வேதத்தில் காணப்படுகிறது..[21] பல்லவர் காலத்தில், சைவ ஆகமங்களிலிருந்து சற்று வேறுபட்டு, சோமாஸ்கந்தர் வடிவம் அதிகமாக வழிபடப்பெற்றது. மாறாக சோழர்கள் பெரும்பாலும் சைவர்களாக இருந்தபடியால் அனைத்துக் கோயில்களிலும் லிங்கத்தை அமைத்தனர்.[22] சிவனுக்கும் லிங்கத்திற்குமான தொடர்பு சிந்து சமவெளி நாகரிக காலந்தொட்டே இருந்துவருகிறது. ஹரப்பாவில் லிங்கத்தையொத்த உருவ அமைப்பு கொண்ட கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதலால் அக்காலத்திலிருந்தே இவ்வழிபாடு இருந்ததாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.[23] சுயம்புலிங்கம் என்பதானது மனிதர்களால் அமைக்கப்படாத, தானால் உருவானதாகக் கருதப்படுவதாகும்.[24] சில கோயில்கள் லிங்கத்தைச் சுற்றியே, கருவறையில் அது அமையும் வகையில், கட்டப்பட்டுள்ளன.

கோயிலின் வடிவமானது ஐந்து லிங்க வடிவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது கருவறையில் உள்ள, மற்றவற்றிற்கு சக்தி தருகின்ற லிங்கமாகும். மற்றவை த்வஜ லிங்கம் அல்லது கொடி லிங்கம் (கொடி மரத்தைக் குறிப்பது), பத்ர லிங்கம் (பலி பீடத்தைக் குறிப்பது), ஸ்தூப லிங்கம் (விமானத்தைக் குறிப்பது), மற்றும் பூசாரியாகச் செயல்படுபவர்.[25]

பார்வதி[தொகு]

சிவன் கோயிலில் பார்வதி சன்னதி

பார்வதி ஓர் இந்துக் கடவுளாவார். சைவ மரபில் அதிக எண்ணிக்கையிலான பெண் தெய்வங்களும் துணைத் தெய்வங்களும் உள்ளனர். அவர்களில் பார்வதி மிகவும் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.[26] பார்வதியை அழித்தல் மற்றும் அருளலுக்குரிய சிவனின் இரண்டாவது துணைவராகக் கூறுவர். சிவனின் துணைவரின் மறு அவதாரமான தாட்சாயிணி அவரிடமிருந்து வேறுபட்டவர் அல்லர். பார்வதி, அனைத்து ஆண் மற்றும் பெண் தெய்வங்களுக்கும், விநாயகருக்கும், முருகனுக்கும் தாயாகக் கருதப்படுகிறார். அவரை விஷ்ணுவின் சகோதரியாகக் கூறுவதும் உண்டு. சிவனுடன் இருக்கும்போது பார்வதி பொதுவாக இரு கைகளுடன் காணப்பெறுவார். தனியாக இருக்கும்போது நான்கு அல்லது எட்டு கைகளுடன், அருகில் புலி அல்லது சிங்கத்துடன் இருப்பார். பொதுவாக இரக்கக் குணம் கொண்ட பார்வதி துர்க்கை, காளி,[27] சீதளா தேவி, தாராதேவி சண்டி, போன்ற வடிவங்களிலும், காத்யாயினி, மகாகௌரி, கமலாம்பிகா, புவனேஸ்வரி மற்றும் திரிபுரசுந்தரி போன்ற இரக்க குண வடிவங்களிலும் காணப்படுவார்.

கணேசர்[தொகு]

ஒரு கோயிலில் கணேசர் சன்னதி

கணேசர், கணபதி, விநாயகர் மற்றும் பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார். இவர் இந்துத் தெய்வங்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.[28] விநாயகர், சிவனின் முதல் திருக்குமாரனாகக் கருதப்படுகிறார். ஆதலால் அனைத்து சிவன் கோயில்களிலும் அவரை வணங்குவதில் வழிபாடு தொடங்குகிறது. பிள்ளையார் என்பதற்கு பிள்ளை + யார் என்பதானது யாருடைய பிள்ளை என்றும் கூறுவர். சமஸ்கிருத சொல்லான புலிசாரா என்பதிலிருந்து இச்சொல் வந்ததாகக் கூறுவர். இச்சொல்லுக்கு யானை என்பது பொருளாகும்.[29] சாளுக்கியர்களிடமிருந்து விநாயகர் என்ற கருத்தினை பல்லவர்கள் எடுத்துக்கொண்டதாக கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (1963:57-58) கூறுகிறார்.[30] கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாதாபி கணபதி சிற்பம் சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியிலிருந்து சாளுக்கியர்களைத் தோற்கடித்த பல்லவர்களின் படைத்தளபதியான பரஞ்சோதியால் கொண்டுவரப்பட்டது. [31]

முருகன்[தொகு]

ஆறு முகங்களுடன் ஸ்கந்த சிற்பம்

முருகன், கார்த்திகேயன், கந்தன், சுப்ரமணியர் என்றெல்லாம் தென்னிந்தியாவில் அழைக்கப்படுகிறார். அவரை தமிழ்க்கடவுள் என்றும் கூறுவர். அவர் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்குமான முக்கியமான கடவுளாகக் கருதப்படுகிறார்.[32] பிற தெய்வங்களுக்கு உள்ளதுபோலவே இவருக்கும் செந்தில், சரவணன், கார்த்திகையின் மகன் என்று குறிக்கும் வகையில் கார்த்திகேயன், ஆறு முகங்களைக் கொண்டவர் என்பதைக் குறிக்கும் ஆறுமுகம், சண்முகம், குழந்தை அல்லது மகனைக் குறிக்கும் குமரன், கந்தன் போன்ற பல பெயர்கள் உண்டு.

[33] சுப்ரமண்யர், வேலன், சாமிநாதன் என்ற பெயர்களும் அவருக்கு உண்டு [34] கி.மு.3ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.5ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய பழந்தமிழ் இலக்கியமான தொல்காப்பியத்தில் என்றும் இளமையான, நீல நிற மயிலில் அமர்ந்துள்ள, தமிழர்களின் அபிமான கடவுள் என்று குறிப்பிடுகிறது.[35] சங்க இலக்கியம் ஐவகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. சங்க காலப்புலவரான நக்கீரரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படையில் (கி.பி.400-450) குறிஞ்சி நிலத்தலைவனாக முருகன் சுட்டப்பெறுகிறார். திருமுருகாற்றுப்படை, மூன்றாம் சங்க காலத்தில் தோன்றிய பத்துப்பாட்டின் ஒரு பிரிவாகும்.[36] கி.பி.6ஆம் நூற்றாண்டில் மறைய ஆரம்பித்த கந்த வழிபாடு கி.பி.7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல்லவர் காலத்தில் பரவ ஆரம்பித்தது. இதற்குச் சான்றாக பல்லவர் காலத்திய சோமாஸ்கந்தர் சிற்பங்களைக் கூறலாம்.[37]

பிற சிற்பங்கள்[தொகு]

சிவபெருமானை லிங்கம், லிங்கோத்பவர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பைரவர், வீரபத்திரர், நடராஜர், தட்சிணாமூர்த்தி ஆகிய ஒன்பது வடிவங்களில் வணங்குகின்றனர். .[38]

இலிங்கோத்பவர்[தொகு]

லிங்கோத்பவர்

லிங்கோத்பவர் பற்றிய குறிப்புகள், சிவனின் வடிவமாக, தூண் மற்றும் லிங்க வடிவின் இணைப்பாக, பல புராணங்களில் காணப்படுகின்றன.[39] தூணில் இருக்கின்ற கடவுள், பின்னர் லிங்கத்திலிருந்து வெளிவருகின்ற சிவன் என்ற நோக்கில் காணப்பட்டார்.[21] லிங்கோத்பவர் சிற்பத்தை கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு பின்புறமாக இருக்கக் காணலாம். சிவனின் லிங்கோத்பவர் வடிவத்தைப் பற்றி 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ நாயன்மாரான அப்பர், புராண நிகழ்வின் அடிப்படையில் கூறுகிறார். ஞானசம்பந்தரோ பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் கண்டுபிடிக்கப்பட முடியாத அடிமுடிகாணா அண்ணலாகக் கூறுகின்றார்.[40]

நடராசர்[தொகு]

நடராசர்

நடராசர், நடனத்தின் ராஜா ஆவார். அவரைக் கூத்தன் என்பர். சிவபெருமான் களைப்புற்ற உலகை அழித்து, புதிய பூவுலகைப் படைக்கும் தொழிலை பிரம்மா மேற்கொள்வதற்காக கூத்தனாக நடனமாடினார். தமிழ் மரபின் ஒரு கூறாக சோழர்களின் செப்புத்திருமேனிகளிலும் சிற்பங்களிலும் சிவன் நடராஜராகக் கொண்டமைந்த சிற்பமே காணப்படுகிறது. தில்லை எனப்படும் சிதம்பரத்தில் சிவபெருமான் ஆடும் நடனம் சிவனை நடராஜராகச் சித்தரிப்பதாகும்.[41][42][43] அவர், சபையில் ஆடும் ஈசன் என்று குறிக்கும் வகையில் சபேசன் என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வடிவமானது தென்னிந்தியாவில் உள்ள பல சிவன் கோயில்களில் காணப்படுவதோடு, சிதம்பரத்தில் முக்கியக்கடவுளாகக் கருதப்பெறுகிறது.[44] பொதுவாக செம்பு உலோகத்தினால் செதுக்கப்படுகின்ற இச்சிற்பத்தில் சிவன் நடமாடும் கோலத்தில் இருப்பார். தீப்பிழம்போடு இருக்கும் அச்சிற்பத்தில் அவர் தன் இடது காலைத் தூக்கிய நிலையில் (சில சமயங்களில் வலது காலைத் தூக்கிய நிலையில்) அறியாமை என்ற முயலகன் மீது நின்று நடனமாடிய நிலையில் தோன்றுவார்.

தட்சிணாமூர்த்தி[தொகு]

தட்சிணாமூர்த்தி

'தட்சிணாமூர்த்தி அல்லது ஞான தட்சிணாமூர்த்தி [45] என்பவர் சிவன் குரு நிலையில் காணப்படுகின்ற அம்சமாகும். விழிப்புணர்வு, புரிதல், அறிவு போன்ற அனைத்தும் அறிந்தவர் என்ற நிலையில் அவர் கருதப்படுகிறார்.[46] இச்சிற்பமானது சிவனை ஒரு யோக, இசை, மற்றும் அறிவின் ஆசிரியராக இருந்து சாத்திரங்களை சீடர்களுக்கு விளக்கும்முகத்தான் அமைந்துள்ளது.[47] அவர் அறிவின் கடவுளாகவும். தியானத்தை உணர்த்துபவராகவும் வழிபடப்படுகிறார்.[48] சிவனின் இவ்வகையான உருவ வழிபாடு இந்தியாவின் தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் பிரபலமானதாகும். தட்சிணா என்பது தென் திசையைக் குறிக்கும் நிலையில் இந்த சிற்பமானது பெரும்பாலும் தென் திசையை நோக்கியே, கருவறை கோஷ்டத்தில் காணப்படும்.

சோமாஸ்கந்தர்[தொகு]

குழந்தை ஸ்கந்தர் மற்றும் பார்வதியுடன் சிவன்

சோமாஸ்கந்தர் என்ற சொல்லானது சிவன் பார்வதியுடனும், குழந்தை ‘கந்தனுடன் (முருகன்) இருப்பதைக் குறிக்கும்.[49] இச்சிற்பத்தில் சிவன் தன் துணைவரான பார்வதியுடனும், குழந்தையான கந்தனுடனும் [50] அமர்ந்த நிலையில் காணப்படுவார். பெயர் சமஸ்கிருதமாக இருந்தால்கூட, கருத்தானது தமிழை அடிப்படையாகக் கொண்டாகும். வட இந்தியக் கோயில்களில் சோமாஸ்கந்தர் சிற்பங்களைக் காணமுடியாது.[51] திருவாரூரிலுள்ள கோயிலில் மூலவராக சோமாஸ்கந்தர், தியாகராஜர் என்ற பெயரில் உள்ளார்.[50] தியாகராஜர் வழிபாட்டைக் கொண்ட அனைத்துக் கோயில்களிலும் சோமாஸ்கந்தர் தியாகராஜராக உள்ளார். சிற்ப அடிப்படையில் நோக்கும்போது ஒன்றாகத் தோன்றினாலும், சில வேறுபாடுகளைக் காணலாம். கட்டட அமைப்பில் நோக்கும்போது சோமாஸ்கந்தரின் உற்சவத் திருமேனிகளுக்கான தனி சன்னதிகளை தியாகராஜர் சன்னதி என்றே கூறுகின்றனர்.[52] சோழர் கால வளர்ச்சி வடிவமான, நடராஜரைப் போலன்றி, சோமாஸ்கந்தர் சிற்பம் சோழர் காலத்திற்கு முன்பாக பல்லவர் காலத்திலேயே இருந்து வந்துள்ளது.[53] சோமாஸ்கந்தர் சிற்ப வளர்ச்சிக்கூறானது பல்லவர் காலத்தில் கி.பி.7ஆம் நூற்றாண்டில் தொடங்கியுள்ளதை பல்லவர் காலக் கோயில்களின் கருவறை வாயில்களின் அருகேக் காண முடியும்.[54] காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் அவ்வகையான 40 சிற்பங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலானவை ராஜசிம்ம பல்லவன் (கி.பி.700-728), மகேந்திர பல்லவன் (கி.பி.580-630), நரசிம்ம பல்லவன் (கி.பி.630-668) மற்றும் பரமேஸ்வர பல்லவன் (கி.பி.670-700 A.D) ஆகியோரின் காலத்தில் அமைக்கப்பட்டவையாகும்.[54][55] பல்லவர் காலத்தில் லிங்கத்திருமேனிக்குப் பதிலாக சோமாஸ்கந்தர் சிற்பம், யுனெஸ்கோ அங்கீகரித்த உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மகாபலிபுரம் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் முக்கியமான இடத்தைப் பெற்றது. இருந்தாலும் சோமாஸ்கந்தர் வழிபாடு பிரபலமாகவில்லை. துணைச்சன்னதிகளிலேயே சோமாஸ்கந்தரைக் காணமுடிந்தது.[56] சங்க இலக்கியங்களிலோ, கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரத்திலோ சோமாஸ்கந்தரைப் பற்றிய குறிப்பு காணப்படவில்லை.[54] முக்கிய விழாக்களில் இடம்பெறுகின்ற நிலையில் சோமாஸ்கந்தரின் தொடர் முக்கியத்துவத்தை அறியலாம்.

சண்டிகேஸ்வரர்[தொகு]

மழுவுடன் சண்டிகேஸ்வரர்

சண்டிகேஸ்வரர், கி.பி.7-10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 63 நாயன்மார்களில் ஒருவராவார். அவருக்குத் தரப்பட்ட பாலை மண்ணால் ஆன லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ததாகவும், அவருடைய தந்தை கோபத்தால் அந்த லிங்கத்தை உதைக்கவே, கோபம் கொண்ட மகன் தன் தந்தையின் காலை மழுவால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. சிவன் அவர்முன் தோன்றி அவரைத் தன்னுடைய கணங்களில் முதன்மையாவராக நியமித்ததோடு, சிவன் கோயில்களில் அவர் வணங்கப்பபடும்படி செய்தார்.[57] தமிழகத்திலுள்ள சிவன் கோயில்களில் கையில் மழுவுடன் உள்ள சண்டீஸ்வரர் சிற்பத்தை கருவறையைச் சுற்றி அமைந்துள்ள முதல் பிரகாரத்தில் காணமுடியும்.

பைரவர்[தொகு]

பைரவர், பார்ப்பதற்கு பயங்கரமானவர்.[58]), ராஜஸ்தானில் சில இடங்களில் பைரோ, பைரோன், பைரோட்யா, பேருஜி என்றவாறு அழைக்கப்படுகிறார். அதற்கு அழிவினை உணர்த்துகின்ற சிவனோடு தொடர்புடையவர் என்று பொருளாகும்.[59] உடலில் நெளிந்த பாம்புகளை காதணிகளாகவும், கழுத்தணியாகவும், இடையணியாகவும், புரிநூலாகவும் கொண்டவர். புலித்தோலையும், மனித எலும்புகளையும் ஆடையாக அணிந்தவர்.[60] பைரவரின் வாகனம் நாய் ஆகும். பைரவரை வைரவர் என்றும் அழைப்பர். அவர் எண்திசைகளிலிருந்து பக்தரைக் காக்கின்ற கிராமத்தெய்வமாகவும், நாட்டுப்புறத் தெய்வமாகவும் அறியப்படுகிறார். சோழர் காலத்தில் பைரவரை பிட்சாடனர் என்று கூறினர். பெரும்பாலான சோழர் கோயில்களில் அவரது சிற்பங்களைக் காணமுடியும்.[61]

நவக்கிரகம்[தொகு]

மரபுப்படி அமைந்த நவக்கிரகம்

கிரகம்[62] பூமித்தாயின் மடியில் வாழ்பவர்கள்மீது ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். இந்து ஜோதிடத்தில் நவக்கிரகங்கள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. அனைத்து ஒன்பது கிரகங்களும் ராசி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் பின்னணியில் ஒன்றோடொன்று தொடர்புடையன. அவற்றுள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது ஆகிய கோள்கள் அடங்கும்: இந்து மரபுப்படி நவக்கிரகங்கள் ஒரு சதுரத்தில் அமைந்துள்ளன. நடுவில் சூரியன் உள்ளது. சூரியனைச் சுற்றி பிற ஒன்றையொன்று நேருக்கு நேர் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் அனைத்து முக்கிய சிவன் கோயில்களிலும் இவற்றைக் காணலாம். இவை பெரும்பாலும் தனிச் சன்னதியில், குறிப்பாக சுமார் மூன்று அடி உயரமுள்ள மேடையில், கருவறையின் வடகிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றை அமைப்பதில் ஆகம பிரதிஷ்டை, வைதீக பிரதிஷ்டை என இரு வகை உண்டு. ஆகம பிரதிஷ்டையில் சூரியன் நடுவிலும், சந்திரன் சூரியனுக்கு கிழக்கிலும், புதன் தெற்கிலும், பிரஹஸ்பதி மேற்கிலும், சுக்ரன் வடக்கிலும், மங்கலம் தென்கிழக்கிலும், சனி தென் மேற்கிலும், ராகு வட கிழக்கிலும், கேது வட மேற்கிலும் காணப்படும். சூரியனார் கோயில், திருவிடைமருதூர், திருவையாறு மற்றும் திருச்சிராப்பள்ளியிலுள்ள கோயில்களில் இம்முறை காணப்படுகிறது. வைதீக பிரதிஷ்டையில் சூரியன் நடுவிலும், சுக்கிரன் சூரியனுக்கு கிழக்கிலும், மங்கலம் தெற்கிலும், சனி மேற்கிலும், பிரஹஸ்பதி வடக்கிலும், சந்திரன் தென்கிழக்கிலும், ராகு தென் மேற்கிலும், கேது வட கிழக்கிலும், புதன் வட கிழக்கிலும் காணப்படும்.,

துர்க்கை[தொகு]

துர்க்கை சிற்பம்

துர்க்கை என்றால் அணுகமுடியாதவர் [63] வெல்ல முடியாதவர் அல்லது எத்தகு சோதனையிலிருந்தும் மீட்பவர் [64] என்று பொருளாகும். அவர் 18 கைகளுடன், சிங்கம் அல்லது புலியினை ஓட்டியபடி, ஆயுதங்களையும், தாமரைப்பூவையும் கொண்டிருக்கிறார். அவருடைய முகத்தில் தியான நிலையிலான புன்னகையைக் காணலாம். அவர் கைகள் சைகைகளை வெளிப்படுத்துவனவாக உள்ளன. சமஸ்கிருதத்தில் (துர்கா) துர் என்பதற்கு கடினமாக என்றும், கா என்பதற்கு வா அல்லது போ என்றும் பொருளாகும். தன் காலின்கீழ் உள்ள எருமை அரக்கனைக் கொன்ற நிலையில் அவருடைய சிற்பம் உள்ளது.[65] பொதுவாக இச்சிற்பம் வடக்கு திசையை நோக்கிய நிலையில் கருவறை கோஷ்டத்தில் காணப்படும். தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் துர்க்கை வெட்டப்பட்ட எருமைத்தலையின்மீது நின்ற நிலையில் காணப்படுவார். சில இடங்களில் சிங்கத்தோடும் இருக்கிறார்.[66]

சப்தமாதர்[தொகு]

சப்தமாதர் என்போர் ஏழு இந்துப் பெண் தெய்வங்களைக் கொண்ட தொகுப்பாகும்.[67] அவர்கள் சப்தமாத்ரிகாக்கள் என்றும் அழைக்கப்படுவர். அவர்கள் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி "seven mothers"): வட இந்தியக் கோயில்களை ஒப்புநோக்கும்போது தமிழ்நாட்டுக் கோயில்களில் சப்தமாதர்களை நடனக் கோலத்தில் அரிதாகவே காணமுடியும்.[66]

பிற அமைப்புகள்[தொகு]

கொடி மரம் மற்றும் பலி பீடம்[தொகு]

தாமரை இதழ்களுடன் பலிபீடம்
ஒரு கோயிலின் கொடி மரம்

கோயிலின் முதன்மை வாயிலைக் கடந்து வரும்போது துவஜஸ்தம் எனப்படும் கொடி மரமும், பலி பீடமும், வாகனமும் மூலவரை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளன.[68] சைவக்கோயில்கள் என்ற நிலையில் பலி பீடத்தில் பூக்களும், வடித்த சாதமும் படைக்கப்படும். தென்னிந்தியாவில் பெரும்பாலான சிவன் கோயில்களில் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொன்றைக் காணலாம். சில கோயில்களில் எண்திசையிலும் எட்டு காணப்படும். பலிபீடம் பொதுவாக உயர்ந்த நிலையிலுள்ள மேடையில் காணப்படும். தாமரைப்பீட இதழ்களைக் கொண்டும் அவை அமைக்கப்பட்டிருக்கும். தாமரைப்பீட வடிவமானது வளமையைக் குறிப்பதால் அதனை பத்ர லிங்கம் அல்லது வளமை லிங்கம் என்றும் அழைப்பர்.[69] கொடி மரம் என்பதானது துவஜஸ்தம் எனப்படுகிறது. ஆகம அடிப்படையில் அமைந்த கோயிலில் கோபுரத்தை அடுத்து வாகனத்திற்கு முன்னால் கோள வடிவில் காணப்படும்.[68][70] உச்சியில் சிவன், நடுவில் விஷ்ணு, கீழ் அரைப்பகுதி பிரம்மாவைக் குறிக்கும் வகையில் மூன்று பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.[71]

நந்தி[தொகு]

நந்தி சிற்பம்

சிவன் கோயிலில் முக்கியமான அம்சமாக ஒவ்வொரு தெய்வத்திற்குமான வாகனம் உள்ளது. சிவனுக்கு நந்தி, பார்வதிக்கு சிங்கம், முருகனுக்கு மயில், விநாயகருக்கு மூஞ்சுறு என்ற வகையில் அவை உள்ளன. நந்தி சிவனின் வாகனமாகக் கருதப்படுவதோடு இந்து புராணங்களில் சிவன் மற்றும் பார்வதிக்கு வாயிற்காவலாகவும் நந்தி உள்ளது. சிவன் மற்றும் பார்வதியைக் கொண்ட கோயில்களில் அமர்ந்த நிலையிலான, மூலவர் சன்னதியைப் பார்த்த நிலையில், கல் நந்தி சிற்பத்தைக் காணலாம். நந்திக்காகவே பல கோயில்கள் உள்ளன.

நந்தி என்ற பெயரை காளைக்குப் பயன்படுத்துதல் என்பது அண்மைக்காலமாக நடைபெறுவதாக கௌரீஸ்வர் பட்டாச்சார்யா நந்தியும் ரிஷபமும் என்ற கட்டுரையில் ஆவணப்படுத்தியுள்ளார்.[72]

நாயன்மார்கள்[தொகு]

63 நாயன்மார்கள்

தமிழ்நாட்டிலுள்ள சில பெரிய சிவன் கோயில்களில் அறுபத்துமூவர் என்றழைக்கப்படுகின்ற 63 சைவ நாயன்மார்களுக்கும் தனி சன்னதி உள்ளது. இவர்கள் கி.பி.6 முதல் கி.பி.9 வரையிலான நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். சில சிறிய கோயில்களில் இவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்ற அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகருக்கான சிற்பங்கள் உள்ளன. பாடல் பெற்ற தலங்கள் 275 [73] சிவன் கோயில்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை கி.பி. 6 முதல் கி.பி.9 வரையிலான நூற்றாண்டைச் சேர்ந்த நாயன்மார்களால் பாடப்பட்ட தேவாரத்தில் போற்றப்படுகின்றன. அவ்வாறே வைப்புத்தலங்கள் என்பன ஆங்காங்கே தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்ற தலங்களாகும்.[74] ஒவ்வொரு நாயன்மாரும் ஒவ்வொரு குறியீட்டுடன் காணப்படுவர். ஒவ்வொரு சிற்பத்தலைமுறையைச் சார்ந்தவர்களும் அவ்வாறே அச்சிற்பங்களை வடித்துள்ளனர்.[75]

உற்சவ மேனிகள்[தொகு]

ஒவ்வொரு மூலவருக்கும் உற்சவர் உண்டு. இந்த உற்சவர் சிற்பங்கள் பெரும்பாலும் செம்பினால் செய்யப்பட்டு, அந்தந்த உரிய சன்னதிகளில் பாதுகாக்கப்பட்டிருக்கும். பஞ்சலோகம் ஐந்து உலோகங்களைக் கொண்டமைந்ததாகும். இந்துக் கோயில் தெய்வங்களின் உருவங்கள் பஞ்சலோகத்தில் செதுக்கப்படுகின்றன. சோழர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிற்ப வடிவமைப்பு முறையானது கி.பி.7ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து இன்றைய நவீன காலம்வரை நீடிக்கிறது.[76] விழாக்களின்போது உற்சவ மேனிகள் கோயிலைவிட்டு வெளியே ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது.

கிராமத் தெய்வங்கள்[தொகு]

கோபி அருகில் ஐயனார் சிலைகள்

கிராமத் தெய்வங்கள் சைவக்கோயில்களின் அங்கமல்ல. அவை சிவன் கோயிலின் வெளியிலோ, கிராமங்களில் சிவன் கோயிலின் வெளியிலோ அமைந்துள்ளன. பெரும்பாலான ஆண் தெய்வங்கள் சிவனின் வடிவங்களாகக் கருதப்படுவதோடு, காக்கும் தெய்வங்களாகவும் கருதப்படுகின்றன.

  • ஐயனார் தமிழகத்தில் பெரும்பாலும் காக்கும் தெய்வமாக தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் வழிபடப்படுகிறார். ஐயனார்-சாஸ்தா தொடர்பான ஆரம்பகாலக் குறிப்புகள் தமிழகத்தில் ஆற்காடு மாவட்டத்தில் காணப்பட்ட இரண்டோ அதற்கு மேற்பட்டோ அமைந்த நடுகற்களாகும். கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நடுகற்களில் அயனப்பா, சாத்தனுக்கான சன்னதி என்ற பொருள்படும்படியான குறிப்புகள் உள்ளன. இதைத்தொடர்ந்து திருச்சி அருகே உறையூரில் கி.மு.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டினையும் காணமுடியும்.[77] ஐயனார்-சாத்தன் தொடர்பான இலக்கியச் சான்றுகளை கி.பி.4-5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் காணலாம்.[78] சோழர் காலம்தொட்டு (கி.பி.9ஆம் நூற்றாண்டு) ஐயனார்-சாஸ்தா வழிபாடு அதிகமானது.[79]
  • மதுரை வீரன், தென் தமிழ்நாட்டில் பிரபலமாகக் காணப்படுகின்ற மதுரையைச் சேர்ந்த போர் வீரனைக் குறிக்கும். தென் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நகரான மதுரையைக் குறிக்கின்ற, அதனைக் காப்பவனாக இத்தெய்வத்தைக் கூறுகின்றனர்.[80]
  • முனீஸ்வரன் ஓர் இந்துக் கடவுள் ஆவார். முனி என்பது முனிவரையும் ஈஸ்வரன் என்பது சிவனையும் குறிப்பனவாகும். சிவனின் வடிவமாக அவர் குறிப்பிடப்பட்டாலும் அது தொடர்பான சான்றுகளைக் காணமுடியவில்லை. பெரும்பாலான சைவக்குடும்பங்களில் அவரை குடும்பத் தெய்வமாக வழிபடுகின்றனர்.
  • கருப்புசாமி, என்றும் பிற பெயர்களிலும் அழைக்கப்படுகின்ற இததெய்வம் தென்னிந்தியாவில் காணப்படுகின்ற சில சமூகக் குழுக்களாலும், கேரளாவின் சில பகுதிகளிலும் அவர் ஐயனாரின் 21 நாட்டுப்புறத் துணை தெய்வங்களில் ஒருவராக இருப்பதால் தமிழர்களின் காவல் தெய்வமாகக் கருதப்படுகிறார்.
  • சுடலை மாடன் அல்லது மாடன் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வழிபடப்படுகின்ற வட்டார ஆண் தெய்வமாகும். சிவன்-பார்வதியின் மகனாக அவர் கருதப்படுகிறார். ஐயனாரைப் போலவே, தமிழகத்தின் சில இனத்தவரிடையோ கிராமங்களிலோ காணப்படுகின்ற முன்னோர்களின் காக்கும் ஆத்மாவாகக் கருதப்படுகிறார்.

குறிப்புகள்[தொகு]

  1. Siva sutras: The Yoga of Supreme Identity By Vasugupta, Jaideva Singh
  2. Vasudevan 2003, p. 26
  3. Rao 1989
  4. Subramuniyaswami 2003, p. 810
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Chakrabarti 1998, p.36
  6. 6.0 6.1 Fergusson, James (1997) [1910]. History of Indian and Eastern Architecture (3rd ). New Delhi: Low Price Publications. பக். 309. 
  7. "Architecture of the Indian Subcontinent - Glossary". Archived from the original on 2012-03-06. பார்க்கப்பட்ட நாள் 2007-01-24.
  8. "Templenet - Glossary". பார்க்கப்பட்ட நாள் 2007-01-29.
  9. "Glossary". art-and-archaeology. Archived from the original on 2007-01-12. பார்க்கப்பட்ட நாள் 2007-02-10.
  10. Adam Hardy. Indian temple architecture: form and transformation : the Karṇāṭa Drāviḍa. https://books.google.com/books?id=aU0hCAS2-08C&pg=PA17&lpg=PA17&dq=vimana+architecture&source=bl&ots=2jijqDCzc1&sig=q8VJfvmVtanB85EUsv_xiPjFiyM&hl=en&ei=ymVXTrCIK9HnrAf4iIGJCw&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEAQ6AEwBA#v=onepage&q=vimana%20architecture&f=false. 
  11. 11.0 11.1 Ching, Francis D.K. (1995). A Visual Dictionary of Architecture. New York: John Wiley and Sons. பக். 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-28451-3. https://archive.org/details/visualdictionary0000fran. 
  12. "Architecture of the Indian Subcontinent - Glossary". Archived from the original on 2012-03-06. பார்க்கப்பட்ட நாள் 2007-01-08.
  13. Ching, Francis D.K. (2007). A Global History of Architecture. New York: John Wiley and Sons. பக். 762. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-26892-5. https://archive.org/details/globalhistoryofa0000chin_n0o7. 
  14. Mitchell, George (1988). The Hindu Temple. Chicago: University of Chicago Press. பக். 151–153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-226-53230-5. https://archive.org/details/hindutempleintro0000mich. 
  15. "gopura". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2008-01-20.
  16. Hinduism: Beliefs and Practices, by Jeanne Fowler, pgs. 42-43, at Books.Google.com
  17. Heinrich Zimmer, Joseph Campbell, Myths and symbols in Indian art and civilization, 127 [1]
  18. Jansen, Eva Rudy (2003) [1993]. The book of Hindu imagery: gods, manifestations and their meaning. Binkey Kok Publications. பக். 46, 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-74597-07-6. 
  19. Harding, Elizabeth U. (1998). "God, the Father". Kali: The Black Goddess of Dakshineswar. Motilal Banarsidass. பக். 156–157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1450-9. 
  20. Vivekananda, Swami. "The Paris Congress of the History of Religions". The Complete Works of Swami Vivekananda. Vol.4. http://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_4/translation_prose/the_paris_congress.htm. 
  21. 21.0 21.1 Vasudevan 2003, p. 105
  22. Vasudevan 2003, p. 106
  23. Darian 2001, pp. 100-102
  24. Anand 2004, p. 177
  25. Hiltebeitel 1991, p. 134
  26. Dehejia 1999, p. 4
  27. Dehejia 1999, p. 30
  28. Rao, p. 1.
  29. Brown 1991, p. 25.
  30. Clothey 1978, p. 221
  31. "Vatapi Ganapati". பார்க்கப்பட்ட நாள் 2010-03-28.
  32. Cage of Freedom By Andrew C. Willford
  33. Clothey, p.49 ஸ்கந்தா என்பது skanḍr என்பதிலிருந்து வந்ததாகும்
  34. Many Faces of Murakan: The History and Meaning of a South Indian God By Fred W. Clothey p.1 [2]
  35. Kanchan Sinha, Kartikeya in Indian art and literature, 1979,Delhi: Sundeep Prakashan.
  36. Krishan 1999, p.59
  37. Krishan 1999, p.60
  38. Cuppiramaṇiyan 1985, p. 224
  39. Anand 2004, p. 132
  40. Parmeshwaranand 2001, p. 820
  41. Singh 2009, p. 1079
  42. National Geographic 2008, p. 268
  43. Soundara Rajan 2001, p. 263-264
  44. G. Vanmikanathan. (1971). Pathway to God through Tamil literature, Volume 1. A Delhi Tamil Sangam Publication.
  45. For iconographic description of the Dakṣiṇāmūrti form, see: Sivaramamurti (1976), p. 47.
  46. Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dallapiccola
  47. For description of the form as representing teaching functions, see: Kramrisch, p. 472.
  48. Magick of the Gods and Goddesses: Invoking the Power of the Ancient Gods By D. J. Conway p.284
  49. Pal 1988, p. 271
  50. 50.0 50.1 Smith 1996, p. 203
  51. Ghose 1996, p. 3
  52. Ghose 1996, p. 11
  53. Smith 1996, p. 205
  54. 54.0 54.1 54.2 Ghose 1996, p. 12
  55. Williams 1981, p. 61
  56. Vasudevan 2003, pp. 39-40
  57. Pal 1988, pp. 283-284
  58. भैरव சிவனின் எட்டு வடிவங்களில் இவ்வுருவமும் ஒன்றாகும். பைரவர் என்பதற்கு பார்ப்பதற்கு பயங்கரமானவர் என்ற பொருளாகும். see: Apte, p. 727, left column.
  59. For Bhairava form as associated with terror see: Kramrisch, p. 471.
  60. Bhairava statuette பரணிடப்பட்டது 2011-01-30 at the வந்தவழி இயந்திரம் in copper from 15th-16th century Nepal, in collection of Smithsonian Institution. Accessed August 11, 2007.
  61. Dehejia 1990, p. 21
  62. Sanskrit-English Dictionary by Monier-Williams, (c) 1899
  63. "Durga". Encyclopædia Britannica Online. பார்க்கப்பட்ட நாள் October 31, 2011.
  64. "Article on Durga About.com Hinduism". Archived from the original on 1 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 2 October 2011.
  65. Hiltebeitel 1988, p. 62
  66. 66.0 66.1 Pal 1988, p. 37
  67. Kinsley, p.151
  68. 68.0 68.1 Rampal 2008, p. 60
  69. Hiltebeitel 1991, p. 135
  70. Subramuniyaswami 2003, p. 233
  71. Hiltebeitel 1991, pp. 134-135
  72. Gouriswar Bhattacharya, "Nandin and Vṛṣabha", Zeitschrift der Deutschen Morgenländischen Gesellschaft, Supplement III,2, XIX. Deutscher Orientalistentag, 1977, pp. 1543-1567.
  73. "A comprehensive description of the 275 Shivastalams glorified by the Tevaram hymns". templenet.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2011.
  74. International review for the history of religions, Volumes 15-17. International Association for the History of Religions, CatchWord (Online service)
  75. Aravamuthan 1992, p. 61
  76. Varghese 2008, p. 53
  77. Williams, p.67
  78. Williams, p.66
  79. Williams, p.62
  80. Stephanides 1994, p. 146

மேற்கோள்கள்[தொகு]