தெசுமாண்ட் தூட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டெசுமான்ட் டுட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தெசுமாண்ட் தூட்டு
Desmond Tutu
ஓய்வு பெற்ற கேப் டவுன் ஆங்கிலிக்கப் பேராயர்
தென்னாப்பிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுத் தலைவர்
சபைதென்னாப்பிரிக்க ஆங்கிலிக்கத் திருச்சபை
ஆட்சி பீடம்கேப் டவுன் மறைமாவட்டம் (ஓய்வு)
ஆட்சி துவக்கம்7 செப்டம்பர் 1986
ஆட்சி முடிவு1996
முன்னிருந்தவர்பிலிப்பு இரசல்
பின்வந்தவர்ஜொங்ஙொங்குலு இந்தான்கனே
பிற பதவிகள்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு
  • 1960 (உதவிக்குரு)
  • 1961 (குரு)
ஆயர்நிலை திருப்பொழிவு1976
பிற தகவல்கள்
இயற்பெயர்தெசுமண்டு உம்பிலோ தூட்டு
பிறப்பு(1931-10-07)7 அக்டோபர் 1931
கிளெர்க்சுடோர்ப், மேற்கு திரான்சுவால், தென்னாபிரிக்க ஒன்றியம்
இறப்பு26 திசம்பர் 2021(2021-12-26) (அகவை 90)
செஞ்சூரி நகரம், கேப் டவும், தென்னாப்பிரிக்கா
வாழ்க்கைத் துணைவர்நொமொலீசோ லியா சென்கான் (தி. 2 சூலை 1955)
பிள்ளைகள்4
தொழில்
  • ஆயர்
  • இறையியலாளர்
  • சமூக செயற்பாட்டாளர்
  • நூலாசிரியர்
கல்விகிங்சு கல்லூரி, இலண்டன் பல்கலைக்கழகம்
கையொப்பம்தெசுமாண்ட் தூட்டு-இன் கையொப்பம்

தெசுமாண்ட் உம்பீலோ தூட்டு (Desmond Mpilo Tutu; 7 அக்டோபர் 1931 – 26 திசம்பர் 2021) தென்னாப்பிரிக்க ஆங்கிலிக்க ஆயரும், இறையியலாளரும் ஆவார்.[1] இவர் தென்னாப்பிரிக்காவின் இனவொதுக்கலுக்கெதிராகக் குரல் கொடுத்தவரும், மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். இவர் 1985 முதல் 1986 வரை யோகான்னசுபர்க் ஆங்கிலிக்க ஆயராகவும், 1986 முதல் 1996 வரை கேப் டவுன் பேராயராகவும் பணியாற்றினார். இப்பதவிகளில் பணியாற்றிய முதலாவது கறுப்பு ஆப்பிரிக்கர் இவராவார்.

தெசுமாண்ட் தூட்டு தென்னாப்பிரிக்காவின் கிளெர்க்சுடோர்ப் என்ற இடத்தில், ஒரு ஏழைக் குடும்பத்தில் கலப்பு சோசா, மோட்சுவானா பாரம்பரியத்தில் பிறந்தார். ஆசிரியராகப் பயிற்சி பெற்ற இவர், 1955 இல் நோமலிசோ என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். 1960-இல், ஆங்கிலிக்கன் குருவானவராக நியமிக்கப்பட்டு, 1962 இல் லண்டன் கிங்சு கல்லூரியில் இறையியல் படிக்க ஐக்கிய இராச்சியம் சென்றார். பட்டம் பெற்று 1966 இல் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பினார். தென்னாப்பிரிக்காவின் நடுவண் இறையியல் மதப்பள்ளியிலும், பின்னர் போட்சுவானா, லெசோத்தோ, சுவாசிலாந்து பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். 1972-இல், இலண்டனைத் தளமாகக் கொண்ட ஆப்பிரிக்காவிற்கான இறையியல் கல்வி நிதியத்தின் இயக்குநரானார். 1975 இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி, முதலில் யோகன்னசுபர்க்கில் உள்ள புனித மரியாள் பேராலயத்தின் தலைவராகவும், பின்னர் லெசோத்தோ ஆயராகவும் பணியாற்றினார்; 1978 முதல் 1985 வரை தென்னாப்பிரிக்க தேவாலயங்களின் பேரவையின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். இவர் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல், மற்றும் வெள்ளையின சிறுபான்மை ஆட்சியின் மிக முக்கியமான எதிர்ப்பாளர்களில் ஒருவராக அவர் வெளிப்பட்டார். நிறவெறி மீதான கோபம் இன வன்முறைக்கு வழிவகுக்கும் என்று தென்னாப்பிரிக்கத் தேசியக் கட்சி அரசாங்கத்தை எச்சரித்தாலும், ஒரு ஆர்வலராக அவர் அகிம்சை வழியிலான எதிர்ப்பையும், பொது வாக்குரிமையைக் கொண்டுவர வெளிநாட்டு பொருளாதார அழுத்தத்தை வலியுறுத்தினார்.

1985-இல், தூட்டு யோகன்னசுபர்க்கின் ஆயராகவும், 1986 இல் கேப் டவுன் பேராயராகவும் நியமிக்கப்பட்டார். இது தென்னாப்பிரிக்காவின் ஆங்கிலிகன் படிநிலையில் மிகவும் மூத்த பதவியாகும். இந்நிலையில் அவர் தலைமைத்துவத்தின் ஒருமித்த-கட்டமைப்பு மாதிரியை வலியுறுத்தினார். பெண் பூசாரிகளை அறிமுகப்படுத்துவதை மேற்பார்வையிட்டார். 1986-ஆம் ஆண்டில், தேவாலயங்களின் அனைத்து ஆப்பிரிக்க மாநாட்டின் தலைவரானார், இதன் விளைவாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல இடங்களில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். 1990 இல் அரசுத்தலைவர் எஃப். டபிள்யூ. டி கிளர்க் நிறவெறி எதிர்ப்பு ஆர்வலர் நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவித்த பிறகு, மண்டேலாவுடன் இணைந்து நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வரவும் பல்லின சனநாயகத்தை அறிமுகப்படுத்தவும் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது. தூட்டு போட்டிக் கறுப்பினப் பிரிவுகளுக்கு இடையில் ஒரு நடுவராக இருந்து உதவினார். 1994 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மண்டேலா தலைமையில் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைந்தது. தூட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிறவெறியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தூட்டு ஓரினச்சேர்க்கை உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தார்; இசுரேலிய-பாலத்தீனிய மோதல்கள், ஈராக் போருக்கு எதிரான அவரது எதிர்ப்பு மற்றும் தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர்கள் தாபோ உம்பெக்கி, யாக்கோபு சூமா ஆகியோர் மீதான அவரது விமர்சனங்கள் ஆகிய பல்வேறு விடயங்களில் அவர் தனது விமரிசனங்களை முன்வைத்தார். 2010-இல் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார்.

1970-களில் தூட்டு பிரபலமடைந்ததால், நிறவெறியை ஆதரித்த வெள்ளையினப் பழமைவாதிகள் அவரை இகழ்ந்தனர், அதே நேரத்தில் பல வெள்ளையினத் தாராளவாதிகள் அவரை மிகவும் தீவிரமானவராகக் கருதினர்; பல கறுப்பினத் தீவிரவாதிகள் அவர் மிகவும் மிதமானவர் என்றும், வெள்ளையின நல்லெண்ணத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டினர், அதே நேரத்தில் மார்க்சிய-லெனினியவாதிகள் அவரது கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாட்டை விமர்சித்தனர். ஆனாலும், தூட்டு தென்னாப்பிரிக்காவின் பெரும்பான்மையான கறுப்பின மக்களிடையே பரவலாக பிரபலமாக இருந்தார், அவரது நிறவெறி எதிர்ப்பு செயல்பாட்டிற்காக சர்வதேச அளவில் பாராட்டப்பட்டார், அமைதிக்கான நோபல் பரிசு, காந்தி அமைதிப் பரிசு[2] உட்பட பல பன்னாட்டு விருதுகளைப் பெற்றார். அவர் தனது உரைகள் மற்றும் பிரசங்கங்களின் பல புத்தகங்களையும் வெளியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Desmond Tutu - Curriculum Vitae"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Tutu to be honoured with Gandhi Peace Award". பார்க்கப்பட்ட நாள் 11 November 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெசுமாண்ட்_தூட்டு&oldid=3741021" இலிருந்து மீள்விக்கப்பட்டது