ம. பொ. சிவஞானம்
ம. பொ. சிவஞானம் (சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப் பட்டார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.
பொருளடக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம.பொ.சி. என்று ஆயிற்று. சென்னை விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26\6\1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். ஆயினும் சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராதவயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வாட்டி வதைத்தது.
தமிழரசுக் கழகம் [தொகு]
1946 ஆம் ஆண்டில் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ஆகஸ்ட் 8, 1954 ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார்.
போராட்டங்கள் [தொகு]
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை, ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி ஆந்திரத்துக்கு போகாமல் தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.
நூல்கள் [தொகு]
- இவர் கட்டபொம்மனின் வரலாற்றை நூலாக எழுதினார்.
- வ. உ. சிதம்பரம் பிள்ளையின் வரலாற்றை நூலாக எழுதினார்.
- 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற நூலை எழுதினார். அந்நூலுக்கு அவர் 1966 ஆம் ஆண்டில் சாகித்திய அக்காடமி விருது பெற்றார்.
- 'எனது போராட்டம்' என்ற பெயரில் தன் வரலாற்றை எழுதியுள்ளார்
- விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு
- விடுதலைப் போரில் தமிழகம்
இவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.
சிறப்புகள் [தொகு]
- சிலம்புச் செல்வர்' என்ற விருது சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது.
- சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன.
- மதுரைப் பல்கலைக் கழகம் 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.
- மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.
- தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றினார்.
- 'செங்கோல்' என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார்.
- தமிழ் முரசு என்ற இதழை நடத்தினார்.
- சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராக பணியாற்றினார்.
ம. பொ. சிவஞானத்தைப் பற்றிய நூல்கள் [தொகு]
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்..., மு. மாரியப்பன், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை.
- அறிஞர்கள் பார்வையில் ம. பொ. சி., ம.பொ.சி.மாதவி பாஸ்கரன், பத்மஶ்ரீ டாக்டர் ம.பொ.சி.அறக்கட்டளை, சென்னை 41.
உசாத்துணை [தொகு]
- http://tamil.sify.com/rasanai/fullstory.php?id=14338624&page=1
- http://www.prabandham.com/tiswek/29011.html
- http://nigalvukal.blogspot.com/2006_10_01_archive.html
- “சிலம்புச் செல்வர் ம.பொ.சி.” வலைப்பூ
வெளி இணைப்புகள் [தொகு]
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. வலைத்தளம்
- www.silambuselvar.com
- Silambu Selvar Trust Inuagration
- Silambu Selvar 106th Birthday Celebrations
- 106th Birthday Celebrations of Ma.Po.Si Dinamalar
- Karunanidhi to unveil Ma.Po.Si statue
- 17th Death Anniversary Celebrations of M.P.Sivagnanam
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்