மாலன்
| மாலன் | |
| பிறப்பு | மாலன் நாராயணன் 1950 ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
|---|---|
| தங்குமிடம் | சென்னை, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| மற்ற பெயர்கள் | தமிழன், நசிகேதன் |
| கல்வி | இதழியல்துறையில் பட்டம் |
| பணி | இதழாசிரியர், புதிய தலைமுறை |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
| பெற்றோர் | வி. எஸ். வி. மணி, லலிதா |
| வாழ்க்கைத் துணை | சரஸ்வதி |
| பிள்ளைகள் | சுகன் |
| உறவினர்கள் | 4 சகோதரர்கள், 2 சகோதரிகள் |
| இணையதளம் | |
| www.maalan.co.in | |
மாலன் (பிறப்பு: 1950) நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும் ஆவார். முதன் முதலாகத் தமிழில் ஒருங்குறியில் வந்த திசைகள் என்ற இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியர். மைக்ரோசாப்டின் விண்டோஸ் மொழி இடைமுகப் பொதி மற்றும் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி ஆகியவற்றின் திட்டங்களை முன்னின்று நடத்தியவர். தற்போது புதிய தலைமுறை என்னும் இதழின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பாக இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், ஆகிய முன்னணித் தமிழ் இதழ்களிலும், சன் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராகவும் கடமையாற்றியவர்.
[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்
1950ம் ஆண்டு தமிழ்நாடு, ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த மாலன் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகிற்கும் தனது 16ம் வயதில் அறிமுகம் ஆன இவர், 1970 - 1985 ம் ஆண்டுகளில் தமிழகத்தில் வெளியான இலக்கியச் சிற்றேடுகள் அனைத்திலும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியவர். கணையாழி ஆசிரியர் குழுவிலும் சிறிது காலம் பங்களித்தார். மாலன் அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றவர்.
1981ல் முழுக்க முழுக்க இளைஞர்களின் படைப்புக்களை மட்டும் தாங்கித் தமிழின் முதல் இளைஞர் இதழாக மலர்ந்த 'திசைகள்' இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றார். தமிழின் முதல் முழுநேர செய்தித் தொலைக்காட்சியான சன்நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஒருங்குறி எழுத்துருவில் அமைந்த முதல் தமிழ் இணைய இதழான 'திசைகள்' இதழின் ஆசிரியர். கணினியில் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட மாலன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மென்பொருள் தமிழாக்கம் செய்யப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர்.
இந்தியப் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் ஆகியோருடன் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டவர். முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகப் பணியாற்றினார். தற்போது எஸ். ஆர். எம். பலகலைக்கழகத்தின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
இவரது சிறுகதைகள் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் சமகால இலக்கியத்திற்கான நூலாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முதுநிலை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இவரது படைப்புக்கள் குறித்து தமிழகத்திலுள்ள சில பல்கலைக்கழகங்களில் நான்கு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.
இவரது கதைகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, டெக்கான் ஹெரால்ட், இந்தியா டுடே (மலையாளம்), மாத்ருபூமி (மலையாளம்), விபுலா (இந்தி) ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. கல்கத்தாவில் உள்ள Writers Workshop தனது ஆங்கிலத் தொகுப்பில் இவரது கதைகளை வெளியிட்டிருக்கிறது.