இரவீந்திரநாத் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவீந்திரநாத் தாகூர்
Rabindranath Tagore:பகுப்பு:நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்
கல்கத்தாவில் தாகூர், 1915
கல்கத்தாவில் தாகூர், 1915
பிறப்பு(1861-05-07)7 மே 1861
கல்கத்தா
இறப்பு7 ஆகத்து 1941(1941-08-07) (அகவை 80)
கல்கத்தா
தொழில்கவிஞர், நாடகாசிரியர், மெய்யியலாளர், இசையமைப்பாளர், ஓவியர்
காலம்வங்காள மறுமலர்ச்சி
குறிப்பிடத்தக்க விருதுகள்நோபல் பரிசு (1913)
கையொப்பம்

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார்.[1][2] 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.[4] தாகூரின் படைப்புகள் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.[5]சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார்.[6] இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன என்ற பாடலை இயற்றியவரும் இவரேயாவார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. [7][8][9] இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த வங்காளப் பிராமணரான இவர் ஜெஸ்சூரைச் சேர்ந்த ஜமீந்தார் மரபைச் சேர்ந்தவர் ஆவார். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார்.[10] பதினாறாவது வயதில் இவரது முதலாவது கவிதைத் தொகுதியை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனைபெயரில் வெளியிட்டார். [11] 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் இவரது பெயரிலேயே வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவர் தனது போர்க்குணத்தை, போராட்டத்தை ஓவியங்களின் மூலமாகவும், கேலிச் சித்திரங்களின் மூலமாகவும், எழுத்துகள் மற்றும் இரண்டாயிரம் பாடல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தினார். மேலும் இவர் விசுவபாரதி பல்கலைக்கழகத்தையும் நிறுவினார்.[12].[13][14][15][16]

தாகூர் வங்காளக் கலையில் கடுமையான செந்நெறி வடிவங்களை மறு ஆக்கம் செய்து புதுமைகளைப் புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்றவை அரசியல் மற்றும் மக்களின் வாழ்வியலைத் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் கற்பனைத்திறன், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் ,சமத்துவத்திற்காகவும் பெரிதும் புகழ் பெற்றன. சில தடை செய்யப்பட்டன. இந்தியாவில் ஜன கண மன மற்றும் வங்காளதேசத்தில் அமர் சோனர் பங்களா ஆகிய இவரின் படைப்புகள் இரண்டு நாடுகளில் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[7][8][9]

தொடக்க காலம் (1861-1901)[தொகு]

1879 இல் இங்கிலாந்தில் கற்கும் வேளையில் தாகூர்.
1883 இல் தாகூர் தன் மனைவி மிருனாளினி தேவியுடன்.

இரவீந்திரநாத் தாகூர், தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் (1861-05-09) கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார்.[a] இவரின் பெற்றோருக்கு பிறந்து உயிரோடு இருந்த பதின்மூன்று குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இவரின் தாய் இவர் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். இவரின் தந்தையும் வியாபார நோக்கில் அடிக்கடி வெளிநாடு சென்றதால் பெரும்பானமையான நேரங்களில் பணியாளர்களாலேயே வளர்க்கப்பட்டார்.[22] வங்காள மறுமலர்ச்சியில் இவரின் குடும்பம் பெரும் பங்காற்றியது. இவரின் குடும்பம் இலக்கிய நாளிதழ் வெளியீட்டு நிறுவனம் மற்றும் திரையரங்கம் போன்றவற்றை நடத்தி வந்தனர். அங்கு தொடர்ச்சியாக வங்காளம் மற்றும் நவீனத்துவ மரபார்ந்த பாடல்கள் பாடப்பட்டன. தாகூரின் தந்தை தொழில்முறை துருபாத் இசைக் கலைஞர்களை தங்களது இல்லத்திற்கு அழைத்து வந்து தங்களது குழந்தைகளுக்கு இந்திய இசைகளை கற்றுத்தந்தார்.[23]

தாகூரின் மூத்த சகோதரர் விஜேந்திரநாத் மெய்யியல் அறிஞர் மற்றும் கவிஞர் ஆவார். மற்றொரு சகோதரர் சத்யேந்திரநாத் முதல் இந்தியக் குடிமைப் பணியாளர் ஆவார். மற்ரொரு சகோதரான ஜோதிரிந்திரநாத் இசையமைப்பாளர், மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.[24]இவரின் சகோதரி சுவர்ணகுமாரி புதின எழுத்தாளர் ஆவார்[25]. ஜோதிரிந்திரநாத்தின் மனைவி காதம்பரி தேவி , தாகூரை விட வயதில் சற்று மூத்தவர் ஆவார்.[26]

தாகூர் பள்ளியறைகளில் இருப்பதை விட பிரபுமனைகள் அல்லது தங்கள் குடும்பத்தினர் அதிகம் செல்லக்கூடிய போல்பூர் மற்றும் பானிஹாட்டிக்குச் செல்வதையே விரும்பினார். [27] இவரின் சகோதரர் ஹேமேந்திரநாத் இவருக்கு கங்கை ஆற்றில் நீச்சல் கற்றுத் தருதல் அல்லது மலையேற்றம் , சீருடற்பயிற்சிகள், ஜூடோ , குத்துச்சண்டை ஆகியவற்றை கற்றுக்கொடுத்தார். தாகூர் , வரைதல், உடற்கூறியல், புவியியல், வரலாறு, இலக்கியம், கணிதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் கற்றார். [28] முறையான கல்வியில் இவருக்கு விருப்பம் இல்லை. இவர் பிரசிடென்சி கல்லூரியில் ஒருநாள் மட்டுமே கல்வி பயின்றார். உண்மையான கற்றல் என்பது சரியான விளக்கங்களை அளிப்பது ஆகாது: அது அறிவார்வத்தை ஏற்படுத்துவது என எண்ணினார். [29]

இவர் மனம் வங்காள மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் இலயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் இவருக்கு பூணூல் சடங்கு செய்யப்பட்டது. பின்னர், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வானியல், அறிவியல், சமசுகிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.

ஷெலைதஹா: 1878-1901[தொகு]

பங்களாதேஷின் ஷெலைதஹாவில் உள்ள தாகூரின் வீடு

தேபேந்திரநாத் தனது மகன் ஒரு பேரறிஞராக ஆக விரும்பியதால், தாகூர் 1878 இல் இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸில் உள்ள பிரைட்டனில் உள்ள ஒரு பொதுப் பள்ளியில் சேர்த்தார். [30] மதீனா வில்லாஸில் உள்ள பிரைட்டன் மற்றும் ஹோவ் அருகே தாகூர் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு வீட்டில் அவர் பல மாதங்கள் தங்கியிருந்தார். ; 1877 ஆம் ஆண்டில் அவரது மருமகனும் மருமகளும் - தாகூரின் சகோதரர் சத்யேந்திரநாத்தின் பிள்ளைகளான சுரேன் மற்றும் இந்திரா தேவி, அவர்களுடன் வாழ தாகூரின் மைத்துனரான அவர்களது தாயுடன் சேர்ந்து அனுப்பப்பட்டனர். [31] அவர் லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் சட்டத்தைப் பயின்றார். ஆனால் மீண்டும் பள்ளியை விட்டு வெளியேறினார், அதற்கு பதிலாக ஷேக்ஸ்பியரின் நாடகங்களான கோரியலனஸ், மற்றும் ஆண்டனி மற்றும் கிளியோபாட்ரா மற்றும் தாமஸ் பிரவுனின் ரிலிஜியோ மெடிசி ஆகியவற்றைப் பற்றி சுயாதீனமாக ஆய்வு செய்தார் . உயிரோட்டமான ஆங்கிலம், ஐரிஷ் மற்றும் ஸ்காட்டிஷ் நாட்டுப்புற இசைக்குறிப்புகள் ஆகியன தாகூரைக் கவர்ந்தன.1880 ஆம் ஆண்டில் அவர் வங்காளம் திரும்பினார். வங்காளத்திற்குத் திரும்பிய பிறகு, தாகூர் தொடர்ந்து கவிதைகள், கதைகள் மற்றும் புதினங்களை வெளியிட்டார். இவை வங்காளத்தினுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின, ஆனால் தேசிய அளவில் அவை கவனத்தைப் பெறவில்லை. 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். [32] அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழந்தைகள் வாலிபப் பருவம் அடையும் முன்பே இறந்து விட்டனர். [31] 1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டில் இவரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். 1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார். 1895 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலைமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.

நரேனும்(சுவாமி விவேகானந்தர்) தாகூரும்[தொகு]

  • ரவீந்திரநாத் தாகூர், தான் இயற்றி மெட்டமைத்த பாடலை பாடும் முறையை நரேந்திரருக்குக் (சுவாமி விவேகானந்தர்) கற்பித்துள்ளார்.
  • தாகூரின் பாடல்களை பலவற்றை நரேந்திரர் பாடியுள்ளார்.
  • நரேந்திரர் தமது ’சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களையும் தொகுத்துள்ளார்.

[33]

சாந்திநிகேதன்[தொகு]

Black-and-white photograph of a bearded middle-aged man dressed in dark robes. He is seated on the floor of an elegantly appointed room and is in front of a plush sofa; he gazes fixedly away to the right, away from the camera.
1912 ஆம் ஆண்டில் ஜான் ரோதென்ஸ்டீன் என்பவரால் எடுக்கப்பட்ட ஒளிப்படம்
Posed group black-and-white photograph of seven Chinese men, possibly academics, in formal wear: two wear European-style suits, the five others wear Chinese traditional dress; four of the seven sit on the floor in the foreground; another sits on a chair behind them at center-left; two others stand in the background. They surround an eighth man who is robed, bearded, and sitting in a chair placed at center-left. Four elegant windows are behind them in a line.
சிங்குவா பல்கலைக்கழகம், 1924

1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்திநிகேதனுக்குக் குடியேறினார். அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அங்கு அவர் ஒரு பிரார்த்தனைக் கூடம், ஒரு பாடசாலை, நூலகம் ஆகியனவற்றை நிறுவி, மரங்கள் பலவற்றையும் நட்டு ஓர் அழகிய பூஞ்சோலையை உருவாக்கினார். இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்ப நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபாய் கிடைத்தது.

இக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வங்காளத்திலும் பிற நாடுகளிலும் புகழ் பெற்றன. இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.

பயணம்[தொகு]

ஜவஹர்லால் நேரு மற்றும் ரவீந்திரநாத் தாகூர்

1878 மற்றும் 1932 க்கு இடையில், தாகூர் ஐந்து கண்டங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்தார். [34] 1912 ஆம் ஆண்டில், தனது படைப்புகளுடன் இங்கிலாது சென்றார். அங்கு அவரது படைப்புகள் மதபோதகர் மற்றும் காந்தியின் சீடரான சார்லஸ் எஃப் ஆண்ட்ரூஸ், ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் ஈட்ஸ், எஸ்ரா பவுண்ட், ராபர்ட் பாலங்கள், ஏற்நேச்ட் ரைஸ், தாமஸ் ச்டுர்ஜே மூர், மற்றும் பலரால் பாராட்டினைப் பெற்றது. [35] கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு யீட்ஸ் முன்னுரை எழுதினார்; ஆண்ட்ரூஸ் தாகூருடன் சாந்திநிகேதனில் சேர்ந்தார். நவம்பர் 1912 தாகூர் அவர்கள் அமெரிக்காவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டனர் [36], மேலும் அவர் அமெரிக்கா மற்றும் இலண்டன் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். [37] மே 1916 முதல் ஏப்ரல் 1917 வரை ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் விரிவுரை செய்தார். [31] அவர் தேசியவாதத்தை கண்டித்தார். [38] "இந்தியாவில் தேசியவாதம்" என்ற அவரது கட்டுரை பாராட்டப்பட்டது; இது ரோமெய்ன் ரோலண்ட் மற்றும் பிற சமாதானவாதிகளால் போற்றப்பட்டது. [37]

அருங்காட்சியகம்[தொகு]

ஜோராசங்கோ தாக்கூர் பாரி, கொல்கத்தா ; தாகூர் 1941 இல் இறந்த அறை.
  • இந்தியாவின் கொல்கத்தாவின் ஜோரசங்கோ தாக்கூர் பாரியில் உள்ள ரவீந்திர பாரதி அருங்காட்சியகம்
  • தாகூர் நினைவு மியூசியம், மணிக்கு சிலைதஹா குதிபடி, சிலைதஹா, வங்காளம்
  • ஷசாத்பூர் ரவீந்திர நினைவு அருங்காட்சியகம், வங்காளம்
  • இந்தியாவின் சாந்திநிகேதனில் உள்ள ரவீந்திர பவன் அருங்காட்சியகம்
  • இந்தியாவின் கலிம்பொங்கிற்கு அருகிலுள்ள முங்பூவில் ரவீந்திர அருங்காட்சியகம்
  • பிதாவோ ரவீந்திர நினைவு வளாகம், குல்னா வங்காளம்
  • ரவீந்திர காம்ப்ளக்ஸ், டக்கின்திஹி கிராமம், குல்னா, வங்காளம்
ஜவஹர்லால் நேரு மற்றும் ரவீந்திரநாத் தாகூர்
சாந்தி நிகேதன் மாணவர்கள்

நோபல் பரிசு[தொகு]

1940 இல் சாந்திநிகேதனில் மோகன்தாசு கரம்சந்த் காந்தியையும், கஸ்தூரிபாவையும் தாகூர்(மேடையின் வலப்பக்கம்) வரவேற்கிறார்.

1913 ஆம் ஆண்டில், இவரது கீதாஞ்சலி இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். இவரது புகழ் பெற்ற கோரா புதினம தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.

1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

1905 ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர தாகூரும் "அடிமைத்தனம் ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் புகழ்ந்துரைத்தார்.

இக்காலத்தில் தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதையும், அடிமைகள் போல் நடத்தப்படுவதையும் கண்டு மனம் வெகுண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.

1919 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயர் அளித்த "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்.

1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எச். ஜி. வெல்ஸ் அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று மருத்துவர் மென்டெல் என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.

இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki) எழுதினார். அவருடைய 60 வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களை தீட்டவும் ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.

1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை இரவீந்திரர் ஐந்து கண்டங்களில் முப்பத்தொன்று நாடுகளுக்கு சென்றுவந்தார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்களில் ஒரு பாடல் இந்தியாவின் தேசீய கீதமாகவும், இன்னொரு பாடல் வங்க தேசத்தின் தேசீய கீதமாகவும், உருவெடுத்தன.

தாகூரின் அறை

பயணங்கள்[தொகு]

1878 ஆம் ஆண்டு மற்றும் 1932 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றுள் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியர் அல்லாதவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், இவரது அரசியல் எண்ணங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. 1912 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆக்கங்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்புகளோடு தாகூர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே இவரது ஆக்கங்கள் சார்லசு எப். ஆன்ட்ரூசு, ஆங்கில-ஐரியக் கவிஞரான வில்லியம் பட்லர் யீட்சு, எசுரா பவுண்ட், ராபர்ட் பிரிட்ஜசு, ஏர்னஸ்ட் ரைசு, தாமசு இசுட்டர்சு மூர் மற்றும் பலரைக் கவர்ந்தன. யீட்சு கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முகவுரையை எழுதினார். ஆன்ட்ரூசு சாந்திநிகேதனில் இணைந்துகொண்டார். 1910 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தாகூர் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பயணம் மேற்கொண்டார்.

ஐக்கிய இராச்சியத்தில் அவர் இசுட்டபோர்ட்சயரில் உள்ள பட்டர்ட்டன் என்னும் இடத்தில் ஆன்ட்ரூசின் மதபோதகர்களான நண்பர்களுடன் தங்கினார். 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விரிவுரைகள் வழங்குவதற்காக ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பயணம் செய்தார்.

இந்தியாவுக்குத் திரும்பிய சில காலத்தின்பின், 63 வயதான தாகூர் பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அவர் அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார் இரு நாட்டு அரசுகளும் இவரது வருகையின் நினைவாக சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.

ஆர்சென்டீனாவில் உள்ள புவனசு அயர்சுக்கு வந்த தாகூர் ஒரு கிழமையின் பின் நோய்வாய்ப்பட்டார். அதனால் அங்கு சில காலம் தங்கிய பின் அவர் சனவரி 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். 1926 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பிள்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார். 1926 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் தேதி தாகூர் முசோலினியைக் கண்டித்ததுடன் அவர்களுடைய உறவு முறிந்துபோனது.

1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்களை யாத்ரி என்னும் நூல்-தொகுப்பில் காணலாம்.

இவரது பெயரிடப்பட்ட கல்வி நிறுவனங்கள்[தொகு]

  1. ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம், கொல்கத்தா, இந்தியா.
  2. ரவீந்திர பல்கலைக்கழகம், சஹாஜ்பூர், ஷிராஜ்கஞ்ச், பங்களாதேஷ். [1]
  3. ரவீந்திரநாத் தாகூர் பல்கலைக்கழகம், ஹோஜாய், அசாம், இந்தியா
  4. ரவீந்திர மைத்ரீ பல்கலைக்கழகம், கோர்ட்பாரா, குஸ்டியா, பங்களாதேஷ். [2]
  5. பிஷ்வகாபி ரவீந்திரநாத் தாகூர் ஹால், ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகம், பங்களாதேஷ்
  6. ரவீந்திர நஸ்ருல் கலை கட்டிடம், கலை பீடம், இஸ்லாமிய பல்கலைக்கழகம், பங்களாதேஷ்
  7. ரவீந்திர நூலகம் (மத்திய), அசாம் பல்கலைக்கழகம், இந்தியா
  8. ரவீந்திர ஸ்ரீஜோங்கலா பல்கலைக்கழகம், கெரானிகஞ்ச், டாக்கா, பங்களாதேஷ்

இறப்பு[தொகு]

ரவீந்திரநாத்தின் கடைசி படம், 1941

1920 முதல் 1936 வரை ஒரே ஒரு ஆண்டுதான் அவர் சாந்திநிகேதனில் ஓய்வாக இருக்க முடிந்தது. இடைக்காலத்தில் அவர் பாரத நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார். சீனா, சப்பான், இத்தாலி, நார்வே, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவர் உடல் பலவீனம் அடையும் வரை விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவரின் கனவுகள் ஒவ்வொன்றாக பலித்து வந்தன, விசுவபாரதி வளர்ந்து வந்தது.

1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது. அவரின் 80வது பிறந்த நாள் விழா 1941ல் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனம் அடைந்திருந்தது. கல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றது. எனினும் சிகிச்சை பலனின்றி 7 ஆம் தேதி ஆகஸ்ட் திங்களில் அவரது உயிர் உடலைப் பிரிந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Tagore was born at No. 6 Dwarkanath Tagore Lane, Jorasanko — the address of the main mansion (the Jorasanko Thakurbari) inhabited by the Jorasanko branch of the Tagore clan, which had earlier suffered an acrimonious split. Jorasanko was located in the Bengali section of Calcutta, near Chitpur Road.[17][18] Dwarkanath Tagore was his paternal grandfather.[19] Debendranath had formulated the Brahmoist philosophies espoused by his friend Ram Mohan Roy, and became focal in Brahmo society after Roy's death.[20][21]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tagore, not Dylan: The first lyricist to win the Nobel Prize for literature was actually Indian".
  2. "Anita Desai and Andrew Robinson — The Modern Resonance of Rabindranath Tagore". On Being. Archived from the original on 11 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. The Nobel Foundation.
  4. O'Connell 2008.
  5. Sen 1997.
  6. "Work of Rabindranath Tagore celebrated in London". BBC News. பார்க்கப்பட்ட நாள் 15 July 2015.
  7. 7.0 7.1 K. M. de Silva; William Howard Wriggins (1988). J. R. Jayewardene of Sri Lanka: a Political Biography - Volume One: The First Fifty Years. University of Hawaii Press. பக். 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8248-1183-6. https://books.google.com/books?id=6orPBJCSPhIC. 
  8. 8.0 8.1 "Man of the series: Nobel laureate Tagore". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Times News Network. 3 April 2011. http://timesofindia.indiatimes.com/off-the-field/Man-of-the-series-Nobel-laureate-Tagore/articleshow/7854172.cms. 
  9. 9.0 9.1 "How Tagore inspired Sri Lanka's national anthem". IBN Live. 8 May 2012 இம் மூலத்தில் இருந்து 10 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120510201526/http://ibnlive.in.com/news/how-tagore-inspired-sri-lankas-national-anthem/255713-40-103.html. 
  10. Tagore 1984, ப. xii.
  11. Dasgupta 1993, ப. 20.
  12. "Visva-Bharti-Facts and Figures at a Glance". Archived from the original on 23 மே 2007.
  13. Datta 2002, ப. 2.
  14. Kripalani 2005a, ப. 6–8.
  15. Kripalani 2005b, ப. 2–3.
  16. Thompson 1926, ப. 12.
  17. Dutta & Robinson 1995, ப. 34.
  18. Dutta & Robinson 1995, ப. 37.
  19. The News Today 2011.
  20. Roy 1977, ப. 28–30.
  21. Tagore, Dutta & Robinson 1997, ப. 8–9.
  22. Thompson 1926, ப. 20.
  23. Som 2010, ப. 16.
  24. Tagore, Dutta & Robinson 1997, ப. 10.
  25. Sree, S. Prasanna (2003). Woman in the novels of Shashi Deshpande : a study (1st ). New Delhi: Sarup & Sons. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8176253812. https://books.google.com/books?id=-bXCWuy8ccMC&pg. பார்த்த நாள்: 12 April 2016. 
  26. Paul, S. K. (1 January 2006) (in en). The Complete Poems of Rabindranath Tagore's Gitanjali: Texts and Critical Evaluation. Sarup & Sons. பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788176256605. https://books.google.com/books?id=IproIa_rIv8C&pg. பார்த்த நாள்: 12 April 2016. 
  27. Das 2009.
  28. Dutta & Robinson 1995, ப. 48–49.
  29. Dutta & Robinson 1995, ப. 50.
  30. Ghosh 2011.
  31. 31.0 31.1 31.2 Dutta & Robinson 1995.
  32. Dutta, Krishna (1997). Selected Letters of Rabindranath Tagore. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0521590181. https://archive.org/details/selectedletterso0000tago. 
  33. "Sri Ramakrishna Vijayam Special issue – January 2014; பக்கம் 61". Archived from the original on 2014-07-09. பார்க்கப்பட்ட நாள் 2014-07-08.
  34. Dutta & Robinson 1995, ப. 374–376.
  35. Dutta & Robinson 1995, ப. 178–179.
  36. University of Illinois at Urbana-Champaign.
  37. 37.0 37.1 Tagore & Chakravarty 1961.
  38. Hogan & Pandit 2003, ப. 56–58.

2. https://www.vikatan.com/news/coverstory/124356-remembrance-of-rabindranath-tagore.html பரணிடப்பட்டது 2018-05-07 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2018-05-07 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவீந்திரநாத்_தாகூர்&oldid=3871317" இலிருந்து மீள்விக்கப்பட்டது