கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் | |
|---|---|
கொலம்பியாவிலுள்ள வல்லெடுப்பார் என்னும் இடத்தில் கார்சியா மார்க்கேஸ் (c. 1984). |
|
| பிறப்பு | மார்ச் 6 1927 (வயது 82) அராகட்டாக்கா, மக்தலேனா, கொலம்பியா |
| தொழில் | புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர். |
| நாடு | கொலம்பியர் |
| குறிப்பிடத்தக்க விருது(கள்) |
Nobel Prize in Literature 1982 |
| கையொப்பம் | |
கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என அறியப்படும் கபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ் (Gabriel José de la Concordia García Márquez - பிறப்பு: மார்ச் 6, 1927) ஒரு கொலம்பியாவைச் சேர்ந்த புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். தனது சொந்த நாட்டில் "கபோ" என அழைக்கப்படும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். 1982ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சட்டம் பயில்வதற்காகச் சட்டக் கல்லூரியில் சேர்ந்த இவர் பின்னர் அதிலிருந்து விலகிப் பத்திரிகையாளர் ஆனார். தொடக்கத்திலிருந்தே கொலம்பிய அல்லது வெளிநாட்டு அரசியலை விமர்சிப்பதற்கு இவர் பின்னின்றது இல்லை. 1958 ஆம் ஆண்டில் மேர்செடெஸ் பார்ச்சா (Mercedes Barcha) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரொட்ரிகோ, கொன்சாலோ என இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இவர் பத்திரிகையாளடாகத் தொடங்கிப் பல பெயர் பெற்ற புனைகதையல்லாத ஆக்கங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ஆனாலும் இவர் எழுதிய புதினங்களுக்காகவே பெரிதும் அறியப்படுபவர். நூறாண்டுத் தனிமை (One Hundred Years of Solitude) - 1967, காலராக் காலக் காதல் (Love in the Time of Cholera) - 1985, போன்ற புதினங்கள் பெரிதும் புகழ் பெற்றவை. இவருடைய ஆக்கங்கள் திறனாய்வாளரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பரவலான வணிக வெற்றிகளையும் பெற்றன.