உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியவாச்சான்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியவாச்சான்பிள்ளை
பிறப்புஸ்ரீ கிருஷ்ண பாதர்
செங்கநல்லூர், தமிழ்நாடு
இறப்புதிருவரங்கம், தமிழ்நாடு

பெரியவாச்சான்பிள்ளை [1] இடைக்கால தமிழ் உரையாசிரியர். வைணவ உரையாசியர்களுள் முதன்மையானவர். இவர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” என்பர்.[2] இவரது காலம் 13-ஆம் நூற்றாண்டு.

பிறப்பு

[தொகு]

கி. பி. 1228 ஆண்டு தந்தை யாமுன தேசிகர் தாயார் நாச்சியார் அம்மை இருவருக்கும் கிருஷ்ணன் பிறந்த ஆவணி மாதமும் அவரின் நட்சத்திரமான ரோகிணி கூடிய நன்னாளில் இவர் பிறந்தார். எனவே இவருக்கு அவரின் பெற்றோர்கள் ஸ்ரீ கிருஷ்ணபாதர் எனப் பெயரிட்டனர். . பூர்வசிகை அந்தணர் குலம். ஊர் செங்கநல்லூர் (சேய்ஞலூர், சேங்கனூர்) [3] இவரின் சிறப்புப் பெயரானா அபயப்ரயராசர்’ என்னும் சொல்லை ‘ஆச்சான்’ என வைணவப் பரம்பரையினர் வழங்குவர். ஆச்சான் என்னும் பெயரோடு இருந்தமையால் பிரித்துக் காட்ட இவரைப் பெரியவாச்சான் பிள்ளை எனக் குறிப்பிட்டனர். இவர் பெயரிலுள்ள ‘பிள்ளை’ என்னும் வழங்கு ‘பெருமாளின் பிள்ளை’ என்னும் பொதுவழக்கு. *இவருக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணசூரி என்பவரைச் சிறியவாச்சான் பிள்ளை என வழங்கினர்.

இன்னல்

[தொகு]

இளமையிலிருந்தே இவர் கண்ணன்மீது பற்று கொண்டிருந்தார். ஊர்மக்கள் இதனை விரும்பவில்லை. திருமணம் செய்து வைத்து இவரை மாற்ற முயன்றனர். முடியவில்லை. எனவே பல இன்னல்கள் செய்தனர். இவற்றைத் தாங்கமுடியாமல் வடநாட்டுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார்.

சிறப்பு

[தொகு]

யாத்திரை முடிந்து திரும்பும்போது திருவேங்கடத்தில் இவரைக் கண்டவர்கள் அழைத்துவந்து சிறப்புச் செய்தனர். அங்கேயே சிறிது காலம் தங்கினார். பின்னர் தம் சொந்த ஊரை நோக்கி வந்தார். வழியில் பழுத்த வைணவர் தன் முன்னோர் பூசனை செய்துவந்த சாளக்கிராமத்தை இவருக்குத் தந்தார். அதை வைத்து இவர் பூசனை செய்துவந்தார். ஒருநாள் கொள்ளிடக் கரையில் வைத்துவிட்டு நீராடியபின் திரும்பிவந்து பார்த்தபோது அந்தக் கல் காணவில்லை. அதே நினைவில் பலநாள் வந்து தேடிவருகையில் ஒருநாள் அவ்விடத்தில் கண்ணனின் மூர்த்தி உரு ஒன்று இருக்கக் கண்டாராம். அதனைக் கொண்டுவந்து பின்னர் வழிபட்டுவந்தார். அப்போதும் ஊர்மக்கள் செய்த இன்னல்களைத் தாங்கமுடியாமல் திருவரங்கம் சென்றார். அங்கும் அரங்கநாதனை நேரில் கண்டு வழிபட இயலவில்லை. இரவெல்லாம் அரங்கநாதன் நினைவாகவே பட்டினியாக இருந்தபோது அரங்கநாதன் ஒரு பெண் வடிவில் வந்து அவருக்குப் பாலும் பழமும் தந்தாராம். இதனைக் கண்ட அந்தணர்கள் இவரை அழைத்துச் சென்று அரங்கநாதனைக் கண்டு வழிபடச் செய்தனர். பின்னர் திருவரங்கத்திலேயே வாழ்ந்துவந்தார்.

ஆசிரியர்

[தொகு]

ஸ்ரீ மாதவர் என்ற இயற்பெயர் கொண்டவரும் பின்னர்ப் பராசரபட்டரால் பட்டப் பெயர் பெற்ற நஞ்சீயர், நம்பிள்ளை ஆகிய ஆசிரியரிடம் இவர் பாடம் கேட்டார். நம்பிள்ளையைத் தன் ஆசிரியராகக் கொண்டார். பெரிவாச்சான் பிள்ளையின் திறமையை நன்குணர்ந்த நம்பிள்ளை இவரைத் திருவாய்மொழிக்கு விளக்க உரை எழுதும்படி வேண்டினார். அதன்படி இவர் எழுதிய விளக்க உரை ‘இருபத்து நாலாயிரப்படி’ எனப் போற்றப்படுகிறது.[4]. மேலும் திருப்பாவைக்கு 3000 படி எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்

[தொகு]

நயினாராச்சான் பிள்ளை (இவரது மருமான்), பரகால தாசர், பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஸ்ரீ ரங்காச்சாரியார்) ஆகியோர் இவரது சீடர்கள்.

பெரியவாச்சான் பிள்ளை நூல்கள்

[தொகு]

இவரது விரிவுரைகளை 'வியாக்கியானம்' என்பர். யாவும் மணிப்பிரவாள நடையில் அமைந்தவை.

  1. அபய ப்ரதான வியாக்கியானம்
  2. அனுசந்தான ரஹஸ்யம்
  3. ஆளவந்தார் தோத்திர ரத்ந வ்யாக்யானம்
  4. உபகார ரத்னம்
  5. கத்ய த்ரய வ்யாக்யானம்
  6. கலியன் அருள்பாடு
  7. சகல ப்ரமான தாத்பரியம்
  8. சரம ரகசியம்
  9. தனி ஸ்வோகி வ்யாக்யானம்
  10. திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
  11. நவரத்னமாலை
  12. நிகமனப் படி
  13. பரந்த படி
  14. பரந்த ரகசிய விவரணம்
  15. பாசுரப்படி இராமாயணம்
  16. மாணிக்கமாலை

இந்த விரிவுரை நூல்களுடன் பிரபந்த ரகசியம் என்னும் தனி நூலும் இவர் எழுதியுள்ளார். 1. ரகஸ்யத்ரய விவரணம் 2. திருப்பல்லாண்டு வ்யாக்யாநம் 3. பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யாநம் 4. திருப்பாவை மூவாரயிரப்படி வ்யாக்யாநம் 5. நாச்சியார் திருமொழி வ்யாக்யாநம் 6. பெருமாள் திருமொழி வ்யாக்யாநம் 7. திருசந்தவிருத்தம் வ்யாக்யாநம் 8. திருமாலை வ்யாக்யாநம் 9. திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யாநம் 10. அமலனாதிபிரான் வ்யாக்யாநம் 11. கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநம் 12. பெரியதிருமொழி வ்யாக்யாநம் 13. திருக்குறுந்தாண்டகம் வ்யாக்யாநம் 14. திருநெடுந்தாண்டம் வ்யாக்யாநம் 15. முதல் திருவந்தாதி வ்யாக்யாநம் 16. இரண்டாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 17. மூன்றாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 18. நான்முகன் திருவந்தாதி வ்யாக்யாநம் 19. திருவிருத்தம் வ்யாக்யாநம் 20. திருவாசிரியம் வ்யாக்யாநம் 21. பெரிய திருவந்தாதி வ்யாக்யாநம் 22. திருவெழுகூற்றிருக்கை வ்யாக்யாநம் 23. சிறிய. திருமடல் வ்யாக்யாநம் 24. பெரிய திருமடல் வ்யாக்யாநம் 25. திருவாய்மொழி இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யாநம் 26. பரந்த ரஹஸ்ய விவரணம் 27. மாணிக்கமாலை 28. நவரத்னமாலை 29. ஸகல ப்ரமாண தாத்பர்யம் 30. உபகார ரத்னம் 31. கத்யத்ரய வ்யாக்யானம் 32. ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம் 33. சதுச்லோகி வ்யாக்யானம் 34. சரம ரஹஸ்யம் 35. அநுஸந்தான ரஹஸ்யம் 36. நிகமனப்படி 37. ஸ்ரீ ராமாயண தனிஸ்லோகி 38. பாரதாதி தனி ஸ்லோகம் 39. அபய ப்ரதான சாரம் 40. ரகஸ்ய தீபிகை 41. பரந்தபடி 42. திரிமத சித்தாந்த சார சங்கிரகம் 43. கலியனருள்பாடு 44. திவ்யப்பரபந்த பாசுரப்படி ராமாயணம் பெரியவாச்சான் பிள்ளை 60 க்ரந்தங்கள் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  2. வைணவ உரையாசியர்கள்
  3. சோழநாட்டில் திருவெள்ளியங்குடியை அடுத்து உள்ளது. சண்டேச நாயனார் பிறந்த ஊர்.
  4. வடமொழி இராமாயணம் 24,000 சுலோகங்கள் கொண்டது. இந்த உரை 24,000 எழுத்துகள் (ஒற்று நீக்கி எண்ணப்பட்ட கிரந்தங்கள்) கொண்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியவாச்சான்பிள்ளை&oldid=4331954" இலிருந்து மீள்விக்கப்பட்டது