கீழப்பழுவூர் வடமூலேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
கீழப்பழுவூர் வடமூலேசுவரர் கோயில்
பாடல்
பாடல் வகை:தேவாரம்

கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவ தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 55வது தலம் ஆகும்.[1]

இறைவன், இறைவி[தொகு]

இத்தலத்தின் மூலவர் ஆலந்துறையார், தாயார் அருந்தவ நாயகி.

தலவிருட்சம், தீர்த்தம்[தொகு]

இத்தலத்தின் தலவிருட்சமாக ஆலமரமும், தீர்ததமாக பரசுராம தீர்த்தம் மற்றும் பிரம்ம தீர்த்தம் ஆகியவை உள்ளன.

அமைப்பு[தொகு]

நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது நுழைவாயிலை அடுத்து சிறிய கோபுரம் உள்ளது. அதனைத் தொடர்ந்து கொடிமர விநாயகர், கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் இடது புறமாக அருந்தவ நாயகி அம்மன் சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் வாயிலில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் உள்ளனர். வலப்புறம் இச்சா சக்தியின் அருகே விநாயகர் உள்ளார். அந்த மண்டபத்தில் சந்திரன், சூரியன், 63 நாயன்மார்களின் உற்சவமூர்த்திகள், திருமணகோலத்தில் மீனாட்சிசுந்தரேசுவரர், கங்காலமூர்த்தி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இங்கு சிவகாமசுந்தரியுடன் நடராசர் உள்ள மண்டபம் காணப்படுகிறது. கருவறையின் முன்பாக நந்தி உள்ளது. மூலவர் உள்ள கருவறைக்கு வெளியே இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.

கருவறை கோட்டங்களில் கஜசம்காரமூர்த்தி, சபாபதி நடராசர், கமல கணபதி தென்முக பரமன், அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. கருவறைத் திருச்சுற்றில் வலப்புறம் விநாயகர், உமைமங்கைபாகன், காத்தீயாயினி, சண்டிகேசுவரர், வீரபத்திரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், கிருது மகரிஷி, அத்திரி மகரிஷி, ஆங்கீரவை மகரிஷி, ஞானதட்சிணாமூர்த்தி, பிருகு மகரிஷி, பரீஷி மகரிஷி, புலஸ்திய மகரிஷி, வசிட்ட மகரிஷி, விநாயகர், பிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், கோடி விநாயகர், காசி விசுவநாதர் விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். அடுத்து அப்புலிங்கம், வாயுலிங்கம், ஆகாய லிங்கம் ஆகிய மூவரின் சன்னதிகள் உள்ளன. அதற்கடுத்து கஜலட்சுமி சன்னதி அமைந்துள்ளது.

அடுத்துள்ள கோயில்[தொகு]

இக்கோயிலின் வெளியே வலப்புறத்தில் சற்று தூரத்தில் இடிந்த நிலையிலான ஒரு சிறிய கோயில் காணப்படுகிறது. அக்கோயிலின் உள்ளே ஒரு இலிங்கத் திருமேனி உள்ளது. வழிபாட்டில் இல்லாத நிலையிலும் உள்ளே விளக்கு எரிந்துகொண்டிருப்பதைக் காணமுடிந்தது. உள்ளே போகமுடியாத அளவு வௌவால்கள் காணப்படுகின்றன. அந்த சிறிய கோயில் அமைப்பிற்கு முன்பாக இரு நந்திகள் தரையில் பதிந்தவகையில் காணப்படுகின்றன. அந்த சிறிய கோயிலைச் சுற்றி வரும்போது பல சிற்பங்களைக் காணமுடிந்தது.

குடமுழுக்கு[தொகு]

5 ஏப்ரல் 1974, 18 சூன் 2003 மற்றும் 10 திசம்பர் 2014 ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.

படத்தொகுப்பு[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. அருள்மிகு ஆலந்துறையார் கோயில், அரியலூர்