உள்ளடக்கத்துக்குச் செல்

திருவையாறு ஐயாறப்பர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவையாறு ஐயாறப்பர் கோயில்
பெயர்
பெயர்:திருவையாறு ஐயாறப்பர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருவையாறு
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐயாறப்பர்
தாயார்:அறம் வளர்த்த நாயகி
தீர்த்தம்:சூரிய புஷ்கரணி தீர்த்தம்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்
ஏழூர் விழா நிறைவாக பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

திருவையாறு ஐயாறப்பர் கோயில் (Aiyarappar Temple) தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.[1] இக் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும்தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். அதோடு மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று எனும் பெருமையைக் கொண்டது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், இறைவியின் பெயர் அறம்வளர்த்தநாயகி (வடமொழியில் தர்மசம்வர்தினி). இத்தலத்தில் தான் சிவபெருமான் திருநாவுக்கரசு நாயனாருக்குத் திருக்கயிலாய காட்சி கொடுத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை.

சப்தஸ்தானம்

[தொகு]

சிலாத முனிவர் யாகசாலை நிலத்தை உழுதபோது, அவருக்குப் பெட்டியில் கிடைத்த குழந்தை செப்பேசன். தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதறிந்து, கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஐயாறப்பரின் பேரருட்காட்சியால் கங்கை நீர், சந்திர நீர், அம்மையின் திருமுலைப்பால், நந்தி வாய் நுரைநீர், கமண்டல நீர் ஆகிய ஐந்து ஆறுகளாலும் அபிஷேகம் செய்யப்பெற்றார். அதன் பின் ஐயாறப்பர் செப்பேசருக்கு ஞானோபதேசமும் நந்தீசர் எனும் தீட்சாநாமமும், சிவகணத் தலைமையும் முதல் குருநாதனாம் தகுதியும் அருளினார். அத்துடன் நில்லாது, ஐயாற்றெம்பெருமான் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகளாம் சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூசத்தில் திருமணம் செய்துவைத்தார். அதன் தொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும்.[2]

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் ’சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது.[3] திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லாக்குகளில் அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக் கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ’பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன.[4]

வரலாறு

[தொகு]

கோயிலில் உள்ள பல கல்வெட்டுகள் கோயிலுக்கு சோழர், பாண்டியர் மற்றும் பிற ஆட்சியாளர்கள் செய்த திருப்பணிகளைக் குறிப்பிடுகின்றன. கரிகால் சோழன், இராசராசன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், கிருஷ்ணதேவராயன் ஆகியோர் திருவையாறுடன் தொடர்புடையவர்கள். இக்கோயிலானது வடகைலாயம் (உத்தரகைலாசம்), தென் கைலாயம் (தட்சிணகைலாசம்) என்று இரண்டு தனித்தனி பிரிவுகளைக் கொண்டது இக்கோயில். வடகைலாயம் 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராசராச சோழனின் பட்டத்தரசியான உலகமாதேவியால் புணரமைக்கப்பட்டு கற்றளியாக்கப்பட்டது.[5] அவர் இக்கோயிலுக்கு பல கொடைகளையும் செய்தார். தென்கைலாயம் ராசேந்திர சோழனின் அரசியால் புதுப்பிக்கப்பட்டது.

நாயன்மார்களில் முதன்மையான ஒருவரான அப்பர், இக்கோயிலுடன் நெருங்கிய தொடர்புடையவர். தனது வயோதிக காலத்தில் திருக்கயிலை மலைக்கு யாத்திரை சென்ற அப்பர், மானசரோவர் ஏரியைத் தாண்டி போக முடியாமல் தவழ்த்து தவழந்து சென்றார். அவர் முன்னர் முனிவர் வடிவில் தோன்றிய சிவபெருமான் மானசரோவர் குளத்தில் மூழ்கி எழுந்தால் கயிலையை தரிசிக்கலாம் என்று சொல்ல, அப்பரும் அவ்வாறே செய்தார். அக்குளத்தில் மூழ்கிய அப்பர் பின்னர் திருவையாறு கோவில் குளத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் தென் கயிலை என அழைக்கப்படும் திருவையாறு சன்னதிக்குள் திருகயிலாய தரிசனத்தைப் பெற்றார். கயிலைக்குச் செல்லாமலேயே கயிலாய தரிசனத்தைப் பார்த்தவர் எனும் பெருமையையும் பெற்றார். இதனை அப்பர் பாடலாகவும் பாடியருளினார். "மாதர் பிறை கன்னியானை" எனத்துவங்கும் தேவாரப் பாடலில் "யாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது" எனவும் "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" எனவும் பாடியருளினார்[6]. இந்த நிகழ்வு அங்கு ஒவ்வொரு வருடமும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

கோயிலின் தெற்குச் சுவரில் நிலம் விற்பனை செய்யப்பட்டதைக் குறிக்கும் வகையில் முதலாம் இராசராசனின் 21ஆம் ஆட்சியாண்டு காலத்திய கல்வெட்டு (ARE 219 of 1894) உள்ளது. 22 ஆம் ஆட்சியாண்டில் பதிவுசெய்யப்பட்ட மற்றொரு கல்வெட்டு, கோவிலின் நொந்தவிளக்குகளுக்கு 96 ஆடுகளை கொடையாக வழங்கியதைக் குறிக்கிறது. மன்னரின் 24 வது ஆட்சியாண்டு கல்வெட்டு, தலைமை மற்றும் ஊர்வல் தெய்வங்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான நகைகளைக் குறிக்கிறது. மண்டபத்தின் கிழக்குச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு (ARE 215 of 1894) இராசராசனின் மருமகன் விமலாதித்தன் எட்டு வெள்ளிப் பானைகளை கோயிலுக்கு அளித்ததைக் குறிக்கிறது. முதலாம் இராசேந்திரனின் நான்காவது ஆட்சியாண்டில் நிலம் வழங்கியதற்கான பதிவு 1894 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கபட்ட கலவ்வெட்டு எண் ARE 216 இல் காணப்படுகின்றது. முதலாம் இராசாதிராசனின் முப்பத்தி இரண்டாம் ஆண்டு ஆட்சியாண்டு காலத்தின் மற்ற பெரிய கல்வெட்டானது, மூன்று பாண்டிய மன்னர்களான மாணபிரான், வீர பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக அவரின் வெற்றிகளைக் குறிக்கிறது.[7]

கோயிலின் அகலக் காட்சி

கோயில் தேர்

[தொகு]

350 ஆண்டுகளுக்கு முன்னர் நாயக்கர் காலத்தில் செய்யப்பட்ட தேர் சேதமடைந்துவிட்டதால், புதிய தேர் செய்யும் பணி சூன் 2017இல் தொடங்கப்பட்டது. 5 படி நிலைகளில் 18 முக்கால் அடி உயரத்தில் 12.9 அடி அகலத்தில் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. 60 டன் இலுப்பை மரங்கள், 2 டன் தேக்கு மரங்கள், 2 1/2 டன் இரும்புபொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இத்தேரில் விநாயகர், முருகன், சுவாமி அம்பாள், சண்டிகேசுவரர், 63 நாயன்மார்கள், நான்கு ஆழ்வார்கள், அப்பர் திருக்கயிலாயக் காட்சி, தசாவதாரக்காட்சி, சப்தஸ்தான திருவிழா காட்சி, மீனாட்சி திருக்கல்யாணக்காட்சி, சிவபுராணக்காட்சி உள்ளிட்ட 750 சிற்பங்கள் உள்ளன. தேரின் வெள்ளோட்டம் 11 சூலை 2018இல் நடைபெறுகிறது.[8]

குடமுழுக்கு

[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு 3 பிப்ரவரி 2025, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.[9]

சப்தஸ்தானங்கள்
கோயில் ஊர் மாவட்டம்
ஐயாறப்பர் கோயில் திருவையாறு தஞ்சாவூர்
ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருப்பழனம் தஞ்சாவூர்
சோற்றுத்துறை நாதர் கோயில் திருச்சோற்றுத்துறை தஞ்சாவூர்
திருவேதிகுடி திருவேதிகுடி தஞ்சாவூர்
பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் திருக்கண்டியூர் தஞ்சாவூர்
புஷ்பவனேஸ்வரர் கோயில் திருப்பூந்துருத்தி தஞ்சாவூர்
நெய்யாடியப்பர் கோயில் தில்லைஸ்தானம் தஞ்சாவூர்

இவற்றையும் பார்க்க

[தொகு]

புகைப்படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Census of India, 1961, Volume 7; Volume 9
  2. புலவர் கோ.சுப்பிரமணியனார் & புலவர் பத்மா சுப்பிரமணியம், திருவையாறு ஏழுர்த் தலங்கள் வரலாறு (ஒரு திறனாய்வு), ஐயாறப்பரக வெளியீடு, திருவையாறு 613 204, 1998
  3. Tourist Guide to Tamil Nadu.
  4. http://www.hindu.com/2011/04/22/stories/2011042255521400.htm.The பரணிடப்பட்டது 2011-04-28 at the வந்தவழி இயந்திரம் Hindu
  5. "சோழ அரசியரின் கல்வண்ணங்கள்". 2024-09-22. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  6. East and west, Volumes 43-44.Instituto italiano per il Medio ed Estremo Oriente.
  7. S.R., Balasubramanyam (1975). Middle Chola temples Rajaraja I to Kulottunga I (AD. 985-1070) (PDF). Thomson Press (India) Limited. pp. 89–91. ISBN 978-9060236079.
  8. திருவையாறு ஐயாறப்பர் கோயில் புதிய தேர் ஜுலை 11இல் வெள்ளோட்டம், தினமணி, 4 சூலை 2018
  9. திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் குடமுழுக்கு விழா, தினமணி, 4 பிப்ரவரி 2025

வெளி இணைப்புகள்

[தொகு]