திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கீழைத்திருக்காட்டுப் பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கீழைத்திருக்காட்டுப்பள்ளி
பெயர்:திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்காட்டுப்பள்ளி
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆரண்யேஸ்வரர் (ஆரண்யசுந்தரர்)
தல விருட்சம்:பன்னீர் மரம்
தீர்த்தம்:அமிர்த தீர்த்தம்
ஆகமம்:காமிகம்
சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், நாவுக்கரசர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

ஆரண்யேஸ்வரர் கோயில் சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆரண்யேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் பன்னீர் மரம் தலவிருட்சமாகவும், தீர்த்தமாக அமிர்த தீர்த்தமும் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 12வது தலம் ஆகும். ஆரண்ய முனிவர் இத்தலத்தை வழிபட்டதாக கூறப்படுகிறது.

தல வரலாறு[தொகு]

பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தம்மைக் காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிடவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்ஹாரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோக தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான். அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன், சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், “நியாயத்திற்காக செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும் அதற்கு பாவபலன் கிடையாது,” என்று சொல்லி அருள் செய்தார். இதுவே இத்தல வரலாறு ஆகும்.

மூலவர் பெயர் வரலாறு[தொகு]

ஆரண்ய முனிவர் வழிபட்டதாலேயே, இத்தல மூலவர்க்கு ஆரண்யேஸ்வரர் எனும் திருநாமம் வந்ததாகக் கூறப்படுகின்றது.

தலச் சிறப்புக்கள்[தொகு]

  • இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேடமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்டவர் இவர். எனவே இவர் "நண்டு விநாயகர்" என்று அழைக்கப்படுகிறார்.

அமைவிடம்[தொகு]

காவிரி வடகரை தலமான திருவெண்காடு கோயிலிலிருந்து 1.3 கி.மீ தொலைவில் பார்த்தன்பள்ளி என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி செல்லும் முக்கிய சாலையில் அல்லிவிளாகத்தில் இருந்து ராதாநல்லூர் வழியே திருவெண்காடு செல்லும் பாதையில் பார்த்தன்பள்ளி உள்ளது. இவ்வூரில் தான் 108 திவ்ய தேசத் திருத்தலங்களுள் ஒன்றான தாமரையாள் கேள்வன் கோயில் அமைந்துள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்