ஜெயதேவரின் பிறப்பு சர்ச்சைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயதேவர்
ஒடியாவின் கெந்துளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயதேவரின் சிலை
பிறப்புஅண். 1170[1]
கெந்துளி கிராமம், பிர்பூம் மாவட்டம் கிழக்கு இந்தியா
இறப்புஅண். 1245[1]
சமயம்இந்து சமயம்
தத்துவம்வைணவ சமயம்

ஜெயதேவரின் பிறப்பு சர்ச்சைகள் (Jayadeva birth controversy) என்பது பன்னிரண்டாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞரான ஜெயதேவரின் பிறந்த இடம் குறித்த சர்ச்சையாகும். கிழக்கு இந்திய மாநிலங்களான ஒடிசா , மேற்கு வங்காளம் ஆகியவை இவரது பிறப்பிற்கு உரிமை கோருகின்றன. இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இரு தரப்பு மக்களுக்கும் இடையே கடுமையான பகைக்கு வழிவகுத்தது.[2] இந்த பிரச்சினை இன்றும் அறிஞர்களால் விவாதிக்கப்படுகிறது.[3]

ஜெயதேவர் பீடம், கெந்துளி கிராமம்,பிர்பூம் மாவட்டம்

ஒடிய கண்ணோட்டம்[தொகு]

ஒடிசா மாநிலம், பிரதாபருத்ரபுரத்திலுள்ள அகண்டலேசுவரர் கோயிலில் உள்ள ஜெயதேவரின் பழமையான கல் சிலை

ஜெயதேவரின் கவிதைகள் அனைத்தும் அவர் புரியில் இருந்தபோது எழுதப்பட்டதாக ஒடியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் புரியில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.[4] ஒடிசாவிலுள்ள தொல்லியல் கண்டுபிடிப்புகள் ஒடிசாவில் ஜெயதேவரின் இருப்பை நிறுவுகின்றன. ஒடிசாவில் பிர்பூம் மாவட்டத்தில் கெந்துளி சாசன் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஜெயதேவரின் படைப்புகளில் முக்கிய கருப்பொருளாக இருந்த இந்து கடவுளான கிருட்டிணர் பாரம்பரியமாக முக்கிய கடவுளாக வணங்கப்படுகிறார். தற்செயலாக, அந்த கிராமத்தில் வசிப்பவர்களும் ஜெயதேவரை வணங்குகிறார்கள். சாசன் என்பது ஒடிசாவில் பாரம்பரியமாக பிராமண அறிவார்ந்த செயல்பாட்டின் மையங்களாக இருந்த கிராமங்களுக்கான ஒரு பெயராகும். மேலும் ஜெயதேவர் ஒரு பிராமணராவார்.

மேலும், ஜெயதேவர் ஒடிய கலாச்சாரத்தின் முக்கிய நபர்களில் ஒருவர் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.[5][6] ஒடிசாவிற்கு வெளியே கீத கோவிந்தத்தின் தாக்கம் ஆந்திரா, கேரளா , தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் அதிகமாக உணரப்படுகிறது. அங்கு கவிஞரின் படைப்புகளின் வசனங்கள் முறையே குச்சிப்புடி, கதகளி , பரதநாட்டியம் ஆகிய பாரம்பரிய நடன வடிவங்களில் இணைக்கப்பட்டுள்ளன. ஒடிசாவின் பாரம்பரிய நடனமான ஒடிசியின் நடன நிகழ்ச்சிகளில் ஜெயதேவரின் அஷ்டபதிகள் பாடப்படுகிறது.[7][8] ஒடியா பஜனைகள் (பக்திப் பாடல்கள்), பாரம்பரிய ஒடிசி இசை ஆகியவை ஜெயதேவரின் கீர்த்தனைகளால் குறிப்பிடப்பட்ட இராகங்கள் மற்றும் தாளங்களை அடிப்படையாகக் கொண்டவை.[9] ஜெயதேவர் கிருட்டிணரின் பக்தராக இருந்தார். மேலும் ஜகந்நாதர் வடிவில் உள்ள கிருட்டிணர் ஒடிசாவின் மத்திய தெய்வம். அதேசமயம் பெண் தெய்வமான துர்கா வங்காளத்தில் முக்கியமான கடவுளாவாவர்.[10][11] ஜெயதேவாவால் இயற்றப்பட்ட கீத கோவிந்தம் ஒடிசாவின் பாரம்பரிய பட்டாச் சித்ரா ஓவியங்களில் பிரபலமான கருப்பொருள்களில் ஒன்றாகும்.[12] இதற்கு நேர்மாறாக, இந்திய கலை வரலாற்றில் அமெரிக்க நிபுணரான தாமஸ் டொனால்ட்சனின் கூற்றுப்படி, ஜெயதேவரின் இராகங்கள் வங்காளத்தின் பாடல் வரிகளுடன் பொருந்தவில்லை. ஒடிசாவைப் போலல்லாமல், பாரம்பரிய குரல் பாரம்பரியம் கூட இல்லை.[13] பெங்காலி பாரம்பரிய இசைக்கும் ஜெயதேவரின்ன் இசையமைப்பிற்கும் இடையிலான தொடர்பு இல்லாதது பார்பரா ஸ்டோலர் மில்லரின் லவ் சாங் ஆஃப் தி டார்க் லார்டு என்ற புத்தகத்தில் சுயாதீனமாக கவனிக்கப்பட்டது. கூடுதலாக, மிகவும் சமசுகிருதமும் அதிநவீன பாரம்பரிய கலாச்சாரமும் அந்த காலகட்டத்தில் ஒடிசாவில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது, அதே நேரத்தில் அண்டை மாநிலமன வங்காளத்தில் சமீப காலம் வரை நாட்டுப்புற அடிப்படையிலான கலாச்சாரம் மட்டுமே இருந்தது.

தொல்லியல் சான்றுகள்[தொகு]

ஒடிசா மாநில அரசு உட்பட, ஒடிசாவை அவரது பிறப்பிடமாக ஆதரிப்பவர்கள், அந்தக் காலத்தின் கோயில் கல்வெட்டுகள், பனை ஓலைகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்ட தொல்ல்லியல் பதிவுகள் கவிஞரின் ஒடியா தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன என்று வாதிடுகின்றனர்.[14] ஜகந்நாதர் வடிவில் உள்ள இந்துக் கடவுளான கிருட்டிணரின் வழிபாடு ஜெயதேவர் பிறந்த காலத்தில் ஒடிசாவில் பரவலாக இருந்தது.[15] மறுபுறம், ஜெயதேவரின் சகாப்தத்திற்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு சைதன்யரின் வருகை வரை வங்காளத்தில் இத்தகைய வழிபாடு இருந்ததற்கான தொல்ல்லியல் சான்றுகள் இல்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.[16] புவனேசுவரத்தில் உள்ள இலிங்கராஜ கோயிலிலுள்ள கல்வெட்டு, ஜெயதேவர் ஒடிசாவில் உள்ள புரிக்கு அருகில் உள்ள கூர்மபதாகையில் உள்ள பள்ளியின் ஆசிரியர் பீடத்தில் உறுப்பினராக இருந்ததாகக் கூறுகிறது. "சாது பிரதான ஜெயதேவர்" என்று குறிப்பிடும் கல்வெட்டுகள் அந்தக் கால ஒடிசா மன்னரால் செதுக்கப்பட்டவை.[17] பின்னர் ஒடிசாவில் உள்ள மதுகேசுவரர் மற்றும் சிம்மாச்சலக் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளின் கண்டுபிடிப்புகள், ஒடிய மன்னர் சோடகங்கதேவரின் ஆட்சியின் போது ஜெயதேவருக்கும், கூர்மபதாகையின் நடனக் குடும்பங்களுக்கு இடையேயான தொடர்பை நிறுவுவதாக நம்பப்படுகிறது.[18] மேலும் சில குறிப்புக்கள் ஒடிசா வைணவக் கவி மாதவ பட்நாயக்கின் நூலிலிருந்து பெறலாம். இவரது நூல் சைதன்யர் பூரி வந்தபோது கெந்துள் சாசன் சென்று ஜெயதேவரை வணங்கியதாகவும் கீத கோவிந்தத்திலிருந்து சில கீர்த்தனைகளைப் பாடியதாகவும் விவரிக்கிறது. இந்த நூலிலிருந்தே ஜெயதேவரின் பிறப்பிடம் கெந்துள் சாசன் என அறிகிறோம்.

ஒடிசாவிற்கு வெளியே ஜெயதேவரைக் குறித்த குறிப்புகள் பிருத்திவிராச் சௌகான் அரசவைக் கவிஞராக இருந்த சாந்த் பர்தாய் பாடல்களில் உள்ளன. இதற்கு அடுத்ததாக கி.பி 1201இல் மன்னன் சாரங்கதேவனின் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கீத கோவிந்தம் இயற்றப்பட்ட சிறிது காலத்திலேயே இந்தியா முழுமையும் பரவலாக அறியப்பட்டது என தெரிய வருகிறது. புரியிலுள்ள ஜெகன்னாதர் கோயிலில் வழமையாக கீத கோவிந்த நிகழ்ச்சி நடைபெற்று வந்திருக்கலாம்.

இடைக்கால கையெழுத்துப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்ட சான்றுகள்[தொகு]

இடைக்கால ஒடிசி இசைக்கலைஞரும் கவிஞருமான பரலகேமுண்டியைச் சேர்ந்த கோபாலகிருட்டிண பட்நாயக்கின் கையால் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீதகோவிந்தத்தின் கையெழுத்துப் பிரதி

மேலும், மிதிலாவின் சந்திர தத்தா , குவாலியரின் நவாஜி போன்ற பல இடைக்கால எழுத்தாளர்களின் கணக்குகள் ஒடிசாவை கவிஞரின் பிறப்பிடமாக ஆதரிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். மகாராட்டிராவைச் சேர்ந்த கவிஞர் மகிபதி தனது பக்தி விஜயா என்ற புத்தகத்தில் ஜெயதேவரின் சொந்த கிராமம் புரிக்கு மிக அருகில் இருந்தது என்று எழுதுகிறார். அசாமிய உரையான சம்பிரதாய குல தீபக் , தெலுங்கு உரையான, சம்ஸ்க்ருத கபி ஜீவானி, உத்கலாவில் (ஒடிசா) ஜகந்நாத் தாமுக்கு அருகில் கவிஞரின் பிறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைக் கொண்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைதன்யரின் சமகாலத்தவரான மதபா பட்நாயக் எழுதிய "வைஷ்ணவ லீலாம்ருதம்" என்ற மற்றொரு புத்தகம், கவிஞர் புரிக்கு அருகில் பிறந்தார் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஜெயதேவரைப் பற்றிய மேலும் சில விவரங்கள் மதாபா பட்நாயக்கின் புத்தகத்திலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. சைதன்யரின் புரி வருகை பற்றிய தெளிவான விவரத்தை இது வழங்குகிறது. ஜெயதேவருக்கு மரியாதை செலுத்தவும் கீத கோவிந்தப் பகுதிகளைப் பாடவும் சைதன்யர் புரிக்கு அருகிலுள்ள கெந்துளி சாசனுக்குச் சென்றதாக அவர் குறிப்பிடுகிறார். கெந்துலி சாசன் உண்மையில் புகழ்பெற்ற கவிஞரின் பிறந்த இடம் என்று புத்தகம் குறிப்பிடுகிறது. மாதவ பட்நாயக்கின் புத்தகம் புரியைச் சுற்றியுள்ள புராணங்களிலிருந்து ஜெயதேவரின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிய கணக்கையும் தருகிறது. சிறுவயதிலிருந்தே சாத்திரங்களிலும், இந்து புராணங்களிலும் ஜெயதேவர் சிறந்து விளங்குவதாக அது குறிப்பிடுகிறது.

ஜெயதேவரின் சொந்த எழுத்துக்களின் சான்றுகள்[தொகு]

ஒடியாவில் உள்ள கவிஞரின் சொந்த இசையமைப்புகள் சில அவர் ஒடிசாவின் புரியைச் சேர்ந்தவர் என்ற கருத்தை சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரிக்கின்றன என்று வரலாற்றாசிரியர்கள் இப்போது தெரிவிக்கின்றனர்.[19] ஜெயதேவர், "கெந்துபில்வ சமுத்திர சம்பவ" என்ற தனது 7வது அஷ்டபதியில் தனது பிறந்த இடத்தைக் குறிப்பிடுகிறார். மேலும் புரியைப் போலல்லாமல் பிர்பும் கடலருகே இல்லை. ஜெயதேவர் தினமும் காலையில் ஒரு ஆற்றங்கரையில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என பக்தமாலா என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. ஜெயதேவர் பற்றிய சிறந்த அறிஞரான ஏ.கே.திரிபாதி, பி.சி.திரிபாதி ஆகியோர் வங்காள கிராமத்திலிருந்து 36 மைல் தொலைவில் உள்ள அஜெயா ஆற்றுக்கு, புரிக்கு அருகில் உள்ள கெந்துலி கிராமத்தின் கரையில் அமைந்துள்ள பிராச்சி ஆற்றில் குளிக்காமல், கவிஞர் தினமும் நடந்திருக்க முடியாது என்று குறிப்பிடுகின்றனர். ஜெயதேவரின் பாடல்களில் சமசுகிருத்தில் கடலைக் குறிக்கும் வார்த்தையான "மஹோதாதி" எனக் குறிப்பிடப்படுகிறது. இது புரியில் கடலுக்கு வழங்கப்படும் பொதுவான பெயராகும்.[20][21] ஜெயதேவரின் பாடல்கள் எதுவும் அவர் எந்த மன்னரின் அரசவையிலும் பணியாற்றியதாகக் கூறவில்லை. தவிர, இலட்சுமண் சென் பொ.ச. 1179 - பொ.ச. 1185க்கும் இடையில் பிர்பும் பகுதியை ஆட்சி செய்தார். அதாவது ஜெயதேவர் பிறந்து சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு.

வங்காளக் கண்ணோட்டம்[தொகு]

பெங்காலி எழுத்தாளர்களின் சில முந்தைய கணக்குகள், சென் வம்சத்தின் நான்காவது ஆட்சியாளரும், ஒருங்கிணைந்த வங்காளத்தின் கடைசி இந்து ஆட்சியாளருமான வங்காளத்தின் புகழ்பெற்ற மன்னர் இலட்சுமண சென்னுடன் ஜெயதேவரை இணைத்துள்ளது. இந்தக் கருத்துக்கள், பனமாலி தாஸ் என்ற ஒடியா கவிஞரால் எழுதப்பட்ட ஜெயதேவ சரிதா என்ற பெங்காலி புத்தகத்திலிருந்து உருவானது. பின்னர் வங்காள வரலாற்றாசிரியர்களால் பரப்பப்பட்டது. கவிஞரின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படாத 1803இல் புத்தகம் எழுதப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட ஒரே தகவல் ஆதாரமாக இது இருந்ததால், ஜெயதேவர் வங்காளத்தில் பிறந்திருக்கலாம் என்பது இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தக் கருத்து 1906ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட எம். எம். சக்ரவர்த்தியின் கட்டுரையின் மூலம் மேலும் பரப்பப்பட்டது, அதில் அவர் வங்காளத்தின் ஆசிய சங்கத்தில் வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார்.[22] ஜெயதேவரின் பிறப்பிடத்தை ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய பால் திருவிழா நடைபெறும் பிர்பூம் அருகே கெந்துபில்வா கிராமத்தைக் குறிப்பிடுவதால், கெந்துலி கிராமம் ஜெயதேவரின் கிராமமாக அடையாளம் காணப்பட்டது. புகழ்பெற்ற கவிஞர் அங்கே பிறந்தார் என்ற அனுமானத்தின் கீழ், அந்த விழாவும் ஜெயதேவருடன் தொடர்புடையது. அருகிலுள்ள கிராமம் "ஜெயதேவ கெந்துலி" என்ற சொற்றொடரைப் பெற்றது. மேலும், சுற்றுலாத் தலமாக மாறியது. பின்னர், பால் திருவிழா "ஜெயதேவ மேளா" என மறுபெயரிடப்பட்டது. ஜெயதேவர் வங்காள மன்னன் இலட்சுமண் சென் ஆட்சியின் போது மன்னனின் அரண்மனையிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் நவதீபத்தில் நீண்ட காலம் வாழ்ந்தார். கோவர்தன் ஆச்சார்யா அப்போது மன்னனின் தலைமைப் பண்டிதராக இருந்தார். அசுதோஷ் தேவின் பெங்காலி அகராதியின்படி, ஜெயதேவர் இலட்சுமண் சென்னின் அரசவைக் கவிஞராக இருந்ததாகத் தெரிகிறது.

சிறீல பக்திவினோதா தாக்கூர், பத்து அவதாரங்களான தசாவதாரப் பாடல்களில் ஜெயதேவரின் கீர்த்தனையைக் கேட்டபோது இலட்சுமண் சென் மகிழ்ச்சியடைந்ததாக தனது நவத்வீப-தாம-மஹாத்ம்யாவில் எழுதுகிறார். பாடலை இயற்றியது ஜெயதேவர் என்று கோவர்த்தன் ஆச்சார்யா மன்னரிடம் தெரிவித்தபோது, கவிஞரைச் சந்திக்வரின் வீட்டிற்கு மறைமுகமாகச் சென்றதாகும், அவரைப் பார்த்தபோது, ஜெயதேவர் ஒரு சிறந்த மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீக ஆளுமையின் அனைத்து பண்புகளையும் பெற்றிருப்பதைக் கவனித்ததாகவும் தெரிகிறது.[23] பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சைதன்யர் காலத்தில் தோன்றிய போதிலும், சைதன்யருக்கு முன்பிருந்தே வங்காளத்தில் கிருட்டிண வழிபாடு நிலவியது. கௌடிய வைணவ அபிதானத்தில், ஜெயதேவர் தனது இராதா மாதவ தெய்வங்களை இந்த ஆற்று நீரில் கண்டதாகக் கூறப்பட்டுள்ளது. அஜயா ஆற்றங்கரையில் உள்ள குசேசுவர் என்றழைக்கப்படும் சிவன் கோவிலில் அவர் ஓய்வெடுத்து வணங்கி வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.[24]

ஜெயதேவரின் இசையமைப்பான, கீத கோவிந்தம் உள்ளிட்டவை ஒடிசாவில் உள்ள புரியில் தெளிவாக இயற்றப்பட்டதால், ஜெயதேவர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்த வங்காள வரலாற்றாசிரியர்கள், கவிஞர் இறுதியில் புரியில் குடியேறினார் எனவும், அங்கு அவர் கவிதை இயற்றத் தொடங்கினார் என்றும் விளக்கினர். .

நிபுணர் கான் சிங் நாபா தனது மகான் கோஷ் (1926) என்ற சீக்கிய கலைக்களஞ்சியத்தில் ஜெயதேவர், வங்காளத்தின் கெண்டூலி, மாவட்டம், பீர்பூமியில் பிறந்தார் என்று எழுதுகிறார்.[25]

கோன் பனேகா குரோர்பதி[தொகு]

ஏப்ரல் 16, 2007 அன்று ஒளிபரப்பப்பட்ட பிரபலமான இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கோன் பனேகா குரோர்பதி" நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் ஜெயதேவரை வங்காள மன்னன் இலட்சுமண சென்னின் அரசவைக் கவிஞராகக் குறிப்பிட்டது. இது ஒடிசாவின் கலாச்சாரம் அறிந்த மக்களால் உடனடி எதிர்ப்புகளைத் தூண்டியது. நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சாருக் கான் தவறான தகவல்களை பரப்பியதற்காக கண்டனம் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சி "சரித்திர உண்மைகளை சிதைத்துள்ளது" எனவும் "ஒடிசா மக்களின் உணர்வுகளை புண்படுத்தியது" எனவும் கூறி, நிகழ்ச்சியாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒடிசா அரசு கோரியது. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிராக ஜெயதேவர் அறக்கட்டளை போராட்டம் நடத்தியது.[26][27] சில அறிஞர்கள் ஜெயதேவரின் தோற்றம் குறித்து நிகழ்ச்சியின் தவறான சித்தரிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அதை அவர்கள் "வரலாற்று மோசடி" என்று அழைக்கின்றனர்.

ஒடிசாவில் ஜெயதேவர் பிறந்ததை நினைவுகூரும் அஞ்சல்தலைகள்[தொகு]

சூலை 2009இல், இந்திய அரசின் அஞ்சல் துறை, ஜெயதேவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் புவனேசுவரத்தில் 11 அஞ்சல் தலைகளை வெளியிட முடிவு செய்தது. ஒரு முத்திரை கவிஞரையே சித்தரிக்கிறது. மற்ற பத்தும் கவிஞர் தனது காவியமான கீத கோவிந்தத்தில் பிரபலப்படுத்திய விஷ்ணுவின் தசாவதாரத்தைக் காட்டுகிறது.[28] ஜெயதேவர் பவனில் நடந்த சிறப்பு விழாவில் முதல்வர் நவீன் பட்நாய்க்அஞ்சல் தலைகளை வெளியிட்டார். முத்திரைகள் 5 ரூபாய் மதிப்பில் உள்ளன. ஒடிசாவில் மொத்தம் 800,000 தபால் தலைகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளன.[29]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Pashaura Singh (2003). The Bhagats of the Guru Granth Sahib: Sikh Self-definition and the Bhagat Bani. Oxford University Press. பக். 9, 116–123. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-566269-6. https://books.google.com/books?id=fMrXAAAAMAAJ. 
  2. "Bengalis had a Jayadeva too". 11 December 2001.
  3. Reddy, William (2012). Longing and Sexuality in Europe, South Asia, and Japan, 900-1200 CE. University of Chicago Press. பக். 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780226706283. https://books.google.com/books?id=qrKScdZ8M8kC&q=Jayadeva+bengal&pg=PA257. 
  4. "Sanskrit Poets and Scholars Flourished During the Suryavamsi Gajapati Period in Odisha" (PDF). 2004. Archived from the original (PDF) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.
  5. Jayadeva and Gitagovinda in the Traditions of Orissa. 1995. http://www.alibris.com/search/books/qwork/3417472/used/Jayadeva%20and%20Gitagovinda%20in%20the%20Traditions%20of%20Orissa. 
  6. "Influence of Gitagovinda on Orissa's Culture" (PDF). 2006.
  7. "Musical Saints of India: Excerpts from a musical discourse on Bhakta Jayadeva and Gita Govindam" (PDF). 2003. Archived from the original (PDF) on 2017-12-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
  8. "Dressing Lord Jagannatha in Silk: Cloth, Clothes, and Status" (PDF). 2004.
  9. "Sri Jayadev's Music and Its Impact on the Culture of Odisha" (PDF). 2004.
  10. "The lord and his land" (PDF). 2006.
  11. "The cult of Jagannath" (PDF). 2003. Archived from the original (PDF) on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.
  12. "Eminent literary luminaries of Odisha" (PDF). 2004. Archived from the original (PDF) on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-05-15.
  13. "A Cult to Salvage Mankind" (PDF). 2006.
  14. "Historical Perspective of Saint Poet Sri Jayadev" (PDF). 2006. Archived from the original (PDF) on 2007-09-30.
  15. "Panoramic palmleaf manuscripts of Odisha" (PDF). 2006. Archived from the original (PDF) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.
  16. "Jagannatha Puri as a Centre of Culture Through the Ages" (PDF). 2004. Archived from the original (PDF) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.
  17. "Sanskrit Scholars of Orissa" (PDF). 2006.
  18. "Sri Jagannath Temple: The Nerve Centre of Odishian Culture" (PDF). 2006.
  19. "Hymns to Jagannatha" (PDF). 2006. Archived from the original (PDF) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.
  20. "Shreekshetra Utsav: The Puri festival". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.
  21. The Gita Govinda of Sri Jayadev. 
  22. "Poet Jaydev belonged to Orissa: Bengal scholar". 6 March 2007. Archived from the original on 27 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  23. "The temples of Birbhum". Archived from the original on 2016-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.
  24. "Scholars provide new twist to Jayadev birth controversy". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-05-15.
  25. Gurshabad ratnakar : mahan kosh.. http://worldcat.org/oclc/650255395. 
  26. "Odisha to file complaint against Star". 2007. Archived from the original on 2007-10-07. பார்க்கப்பட்ட நாள் 2007-04-20.
  27. "Orissa wants KBC apology for wrong info on poet". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2007. Archived from the original on 2012-10-16.
  28. "Commemorative stamp on Jayadev released". தி இந்து (Chennai, India). 2009-07-28 இம் மூலத்தில் இருந்து 2010-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100616202305/http://www.hindu.com/2009/07/28/stories/2009072852830300.htm. 
  29. "Odisha CM releases postal stamp on poet Jaydev". 2009. Archived from the original on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.

வெளியிணைப்புகள்[தொகு]