நவீன் பட்நாய்க்
|
||||||||||||||||||||
நவீன் பட்நாயக் (Naveen Patnaik)(ஒரியா:ନବୀନ୍ ପଟ୍ଟନାୟକ) (பிறப்பு 16 அக்டோபர் 1946) ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. ஒரிசாவின் மாநிலக் கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும் அம்மாநில முதலமைச்சரும் ஆவார்.[1]
பொருளடக்கம் |
தனி வாழ்க்கை[தொகு]
நவீன் பட்நாயக் ஒரிசாவின் கட்டக் நகரில் முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக் மற்றும் கியான் பட்நாயக்கிற்கு மகனாகப் பிறந்தார்.[2] ஏழு வயதிலேயே தேராதூன் நகரில் உள்ள வெல்ஃகாம் சிறுவர் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் பின்னர் அங்குள்ள புகழ்பெற்ற டூன் பள்ளியில் சேர்ந்து தமது 17வது வயதில் சீனியர் கேம்பிரிட்ஜ் சான்றிதழ் பெற்றார். தில்லிப் பல்கலைக்கழகத்திலிருந்து கலைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
குடும்பம்[தொகு]
திருமணம் புரியாது பிரம்மச்சாரியாக வாழ்கிறார்.இவரது அண்ணன் பிரேம் பட்நாயக் ஓர் வணிகர். இவரது சகோதரி கீதா மேத்தா ஓர் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் நியூ யார்க் நகரிலிருந்து வெளியாகும் ஆல்ஃபிரெட் ஏ.னௌஃப் (Alfred A. Knopf) பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சன்னி மேத்தாவின் மனைவி.
அரசியல் வாழ்வு[தொகு]
நவீன் தமது இளமையின் பெரும்பான்மைக் காலத்தில் ஒரிசா மற்றும் அரசியல் இரண்டிலிருந்தும் விலகியிருந்து எழுத்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது தந்தை பிஜு பட்நாயக்கின் மறைவிற்குப் பின்னரே அரசியலில் ஈடுபட்டார். 1996ஆம் ஆண்டு அஸ்கா தொகுதியிலிருந்து ஜனதா தளம் சார்பில் பதினொன்றாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஓராண்டிற்குப் பிறகு 1997ஆம் ஆண்டு ஜனதா தளத்திலிருந்து பிரிந்தார். பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை தோற்றுவித்து பாரதிய ஜனதா கட்சி தலைமையேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து நடுவண் அமைச்சில் சுரங்கத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் ஒரிசா மாநில தேர்தல்களில் வெற்றி கண்டதால் 2000ஆம் ஆண்டு தமது நடுவண் அமைச்சுப் பதவியிலிருந்து விலகி புதிய கூட்டணி ஆட்சியின் முதல்வராக பொறுப்பேற்றார். ஊழலற்ற, ஏழைகளுக்கு நலம்தரும் திட்டங்களைச் செயல்படுத்தி வாக்காளர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றார். அவர் மூன்று முறை தொடர்ந்து வெற்றிபெற இது வழி வகுத்தது. தமது தந்தையைப் போலவே தவறிழைக்கும் அதிகாரிகளை கட்டுப்படுத்தி மாநில நிர்வாகத்தை வளர்ச்சிக்கு துணை புரியும் வண்ணம் மாற்றினார்.[3]
2004ஆம் ஆண்டு நடந்த மாநிலத் தேர்தல்களிலும் பிஜேபி கூட்டணியில் பெரும்பான்மை பெற்று முதல்வராக தொடர்ந்தார்.இருப்பினும் 2007-08 ஆண்டுகளில் இரு கட்சிகளுக்குமிடையே பிணக்கு ஏற்பட்டது. இதனால் 2009ஆம் ஆண்டு நடந்த மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் பிஜேபியிடமிருந்து பிரிந்து மூன்றாம் அணியாக உருவான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார்.[1] இத்தேர்தலில் 21 மக்களவைத் தொகுதிகளில் பதினான்கிலும் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 103 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மே 21, 2009 அன்று மூன்றாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.[4].
எழுத்துப்பணி வாழ்வு[தொகு]
நவீன் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார்:
- A Second Paradise: Indian Country Life 1590-1947,
- A Desert Kingdom: The people of Bikaner
- Garden of Life: An introduction to the Healing Plants of India
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://sify.com/news/fullstory.php?id=14867334
- ↑ http://in.rediff.com/news/2009/mar/11guest-naveen-patnaik-master-stroke-in-orissa.htm
- ↑ http://www.indianexpress.com/ie/daily/19970510/13050423.html
- ↑ http://www.ptinews.com/pti%5Cptisite.nsf/0/54953CBA9293472C652575BD00386F72?OpenDocument
வெளியிணைப்புகள்[தொகு]
- Official site
- Notable personalities of Orissa, including Naveen Patnaik, in Orissadiary website
- Orissa's Accidental politician, BBC
| முன்னர் ஹேமானந்தா பிஸ்வால் |
ஒரிசா முதலமைச்சர் 2000 – present |
இற்றை வரை |