கத்தோலிக்க மறுமலர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்தோலிக்க மறுமலர்ச்சி ( Counter-Reformation அல்லது Catholic Revival[1] ) என்பது திரெந்து பொதுச் சங்கம் (1545-1563) முதல் முப்பதாண்டுப் போர் (1648) முடிய உள்ள காலத்தில் கத்தோலிக்க திருச்சபை தன்னை மாற்றியமைக்க எடுத்த முயற்சியைக் குறிக்கும். புரடஸ்தாந்த சபைகள் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக துவங்கிய கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இது இருந்தது.

இதன் முக்கிய நோக்கமாக இருந்தவை:

  1. திருச்சபையின் அதிகாரத்துவ படிநிலை மாற்றம்
  2. சமயத்துறவோர் வாழ்வியலில் மாற்றம்
  3. ஆண்மீக இயக்கங்கள்
  4. அரசியல் நோக்கு

இந்த மறுமலர்ச்சியின் காரணமாகவே சமயத்துறவோருக்கு சீரான ஆண்மீக்கல்வியும், இறையியல் கல்வியும், பொதுநிலையினர் கிறிஸ்துவோடு கொண்டுள்ள தனிப்பட்ட உறவு நிலை போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாயிற்று. கத்தோலிக்க வழிபாட்டு இசை மற்றும் கத்தோலிக்க கலைக்கு உள்ள முக்கியத்துவம் ஆகியன உறுதிசெய்யப்பட்டன. அறிவியல் புரட்சியினை கத்தோலிக்க திருச்சபை ஊக்குவிக்க இது காரணியாயிற்று.

திரெந்து பொதுச் சங்கம்[தொகு]

திரெந்து பொதுச் சங்கக்கூட்டம்

திருத்தந்தை மூன்றாம் பவுல் (1534–1549) திரெந்து பொதுச் சங்கத்தைக் (1545–1563) கூட்டினார். இச்சங்கமானது திருச்சபையினை சீரமைக்கும் பணியினை ஏற்றது. இவை ஒழுக்கம் அற்ற குருக்களையும், ஆயர்களையும் கையாளும் விதம், பலன்களை தவறாகப்பயன்படுத்துபவரை தடுக்கவும் மற்றும் பிற பொருளாதார தவறுகளை சீர்திருத்தவும் கூடியது.

இச்சங்கம் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகள், அருட்சாதனங்கள், அர்ப்பணவாழ்வுச் சபைகள் மற்றும் மறையுண்மைகள் அனைத்தையும் உறுதிசெய்தது. மற்றும் புரடஸ்தாந்தம் கொணர்ந்த இறையியல் மாற்றம் அனைத்தையும் நிராகரித்தது. யாக்கோபு 1 22:26இன்படி மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனவும் உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே எனவும் எடுத்தியம்பியது. இதனை சீர்திருத்த இயக்கம் நிராகரித்தது என்பது குறிக்கத்ததக்கது.

மேலும் கிறிஸ்தியலில் நற்கருணையின் உட்கருப்பொருள் மாற்றத்தையும் உறுதிசெய்தது. திருவருட்சாதனங்கள், அருளிக்கங்கள், திருப்பயணங்கள், கன்னி மரியாவுக்கு செலுத்தப்படும் வணக்கம் ஆகியவை வலுவாக உறுதிசெய்யப்பட்டது. இணைத் திருமுறை நூல்களையுடைய வுல்கேட் விவிலியத்தை அதிகாரப்பூர்வமானதாக அறிவித்தது. இச்சங்கமே கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் உருவாக வழிவகுத்தது. இந்நூலே கத்தோலிக்க திருபுகொள்கையினை எதிர்க்கவும், கத்தோலிக்க நம்பிக்கையினை எடுத்தியம்பவும் உதவி செய்தது.

கத்தோலிக்க திருச்சபையின் படிநிலையில் எவ்வகை மாற்றமும் இச்சங்கத்தில் செய்யப்படவில்லை. இவ்வதிகார படிநிலையே சீர்திருத்த இயக்கத்தினர் கத்தோலிக்க திருச்சபையினர் மீது சுமத்திய முக்கிய குற்றமாகும். ஆயினும் கத்தோலிக்க ஆட்சியமைப்புக்கும் பொதுநிலையினருக்கும் இடையே உள்ள கருத்து பிளவை சரிசெய்ய பொதுநிலையினருக்கு கல்வி புகட்டுவதன் அவசியமும், சங்க குருக்கள் இக்கல்வியினை அளிக்கும் அளவுக்கும் கற்றவராய் இருப்பதன் அவசியமும் எடுத்தியம்பப்பட்டது.

திருச்சபையின் ஆட்சியமைப்பில் மாற்றம் கொணர இச்சங்கம் முயன்றது. ஐரோப்பிய மறுமலர்ச்சியின் உலகத்தனமான போக்கு கண்டிக்கப்பட்டது. திருத்தந்தை பத்தாம் லியோவினால் (1513–1522) துவங்கப்பட்ட புனித பேதுரு பேராலய சீரமைப்புக்கான காணிக்கைகளுக்கு அளிக்கப்பட்ட பலன்களே மார்ட்டின் லூதர் சீர்திருத்த இயக்கத்தினை துவங்க காரணி என்பது குறிக்கத்தக்கது. இவற்றிற்கு பாரம்பரிய மரபினைத்தழுவியே இச்சங்கத்தில் பதிலளிக்கப்பட்டது.

ஆயர்கள் அரசியல் காரணிகளுக்காக நியமிக்கப்படுவது இச்சங்கத்தில் நிறுத்தப்பட்டது. குருக்களும் ஆயர்களும் தங்களின் பணிப்பொறுப்பிலிருந்து விடுமுறையில் செல்ல தகுந்த காரணமும் தனது உயரகதிகாரியின் ஒப்புதலும் கட்டாயமாக்கப்பட்டது. அர்ப்பணவாழ்வுச் சபைகளுக்கான ஒழுக்க விதிமுறைகள் கடினமாக்கப்பட்டன. ஆயினும் ஆயர்களுக்கு தங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளின் ஆன்ம முன்னேற்றதிற்கும் சீரமைப்புக்கும் அதிக கடமையும் உரிமையும் அளிக்கப்பட்டது.

திரெந்து பொதுச் சங்கத்தின் முடிவுகளால் பல மரபுவழி சபைகள், கத்தோலிக்க திருச்சபையோடு முழு உறவு ஒன்றிப்புக்குத் திரும்பின.

மறுமலர்ச்சியில் அர்ப்பணவாழ்வுச் சபைகளின் பங்கு[தொகு]

புது அர்ப்பணவாழ்வுச் சபைகள் இம்மறுமலர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்தன. அவை கப்புச்சின் சபை, கார்மேல் சபை, உர்சுலைன்சு சபை, பார்னபைட்டுகள் மற்றும் மிகவும் குறிப்பாக இயேசு சபை. இவை கிராமங்களிலும், பங்குகளிலும் பணியாற்றி கத்தோலிக்க நம்பிக்கைக்கும், வாழ்வுக்கும் பொதுநிலையினரிடையே எடுத்துக்காட்டாக திகழ்ந்தன.

பிரான்சிஸ்கன் சபையின் வழித்தோன்றலான கப்புச்சின் சபை, தங்களின் மறையுரைகளுக்கு மிகவும் பேர் போனவர்கள். இவர்கள் ஏழைகளையும், நோயுற்றோரையும் பாதுகாத்தும் வந்தனர். இவர்கள் தாங்களே ஏழைகளாய் இருப்பதில் மிகுந்த கவணம் செலுத்தினர். இவ்வகைவாழ்வினால் அமெரிக்காக்கள் மற்றும் ஆசியாவில் இவர்களின் பணிவாழ்வு மிகவும் போற்றப்பட்டது.

உர்சுலைன்சு சபை பெண்களின் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தது. இவர்கள் கத்தோலிக்க நம்பிக்கையான இரக்க செயல்கள் (works of mercy), கடவுளின் அருளினால் மாடையும் மீட்பு, நம்பிக்கை மற்றும் செயல் வாழ்வின் தேவை முதலியவை உட்பட்ட திருச்சபையின் அடிப்படை போதனைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தனர்.

அர்ப்பணவாழ்வுச் சபைகளில் மிகவும் திறன் வாய்ந்ததாக இருந்தது இயேசு சபை ஆகும். பிரான்சிஸ்கன் சபையினரைப்போலவே அருள்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்தனர். இஞ்ஞாசியாரின் ஆன்ம பயிற்சிகள் நூல் கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் துவங்கப்படுவதற்கு முன்பே கத்தோலிக்க திருச்சபையினர் தங்களை சீர்திருத்த எடுத்த முயர்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இவர்கள் அரசர்களுக்கு ஆன்மகுருக்களாகவும், சிறந்த கல்விபுகட்டுபவர்களாகவும் இருந்தனர். போலந்து, போகிமியா, அங்கேரி, தெற்கு செருமனி, பிரான்சு மற்றும் எசுப்பானிய நெதர்லாந்து ஆகிய இடங்களில் புரொடஸ்தாந்தத்தின் பரவலை தடுப்பதற்கு இவர்களே காரணம். இவர்கள் தங்களின் மறைபரப்பு வழியாக திருச்சபை அமெரிக்காக்கள் மற்றும் ஆசியாவில் வளர உதவினர். திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் மற்றும் திருத்தந்தை பத்தாம் லியோவின் ஆட்சியில் கவணம் குறைந்த பக்திமுயற்சிகள் பலவும் இவர்களால் மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டது. .

கத்தோலிக்க பக்தி இயக்கங்கள்[தொகு]

பீட்டர் பவுல் ரூபென்ஸ் கத்தோலிக்க மறுமலர்ச்சியின் குறிக்கத்தக்க கலைஞராவார். இது இவரின் ஞானிகளின் வருகை ஓவியம்

கத்தோலிக்க மறுமலர்ச்சி என்பது அரசியல் மற்றும் திருச்சபையின் ஆட்சியமைப்பினை மட்டும் சாரெததாக இல்லை. அது தனிநபரின் ஆன்மவாழ்விலும் மறுமலர்ச்சி காண முயன்றது. லொயோலா இஞ்ஞாசி, அவிலாவின் புனித தெரேசா, சிலுவையின் புனித யோவான், பிரான்சிசு டி சேலசு மற்றும் பிலிப்பு நேரி போன்றோரின் எழுத்துகள் கத்தோலிக்க ஆன்மிகம் குறித்து இக்காலத்தில் விரிவாக மக்கள் உய்த்துணர வழிவகுத்தது. அவிலாவின் தெரேசாவும் சிலுவையின் யோவானும் கார்மேர் சமையினை சேரமைக்க பெரிது உழைத்தனர். இவர்கள் ஆழ்நிலை தியாணம் மூலமாக கிறித்துவை அடைய முடியும் என பறை சாற்றினர்.[2] தாமசு மேர்டன் என்னும் 20ஆம் நூற்றாண்டின் கத்தோலிக்க துறவி, சிலுவையின் யோவானை கத்தோலிக்க சித்தர்களுல் தலையானவர் எனப்போற்றியுள்ளார்.[3] இவர்களின் பங்கு எத்தகைய சிறப்பு வாய்ந்ததெனில் லொயோலா இஞ்ஞாசி, பிலிப்பு நேரி மற்றும் அவிலாவின் புனித தெரேசா ஆகிய அனைவருக்கும் புனிதர் பட்டமளிப்பு மார்ச் 12, 1622 அன்று ஒரேநாளில் நிகழ்ந்தது.

கத்தோலிக்க மறுமலர்ச்சியில் கன்னிமரியாவின் பக்தி குறிக்கத்தக்க பங்கு வகித்தது. 1571இல் நடந்த இலப்ராந்தோ போரில் கிடைத்த வெற்றி கன்னி மரியாவின் பரிந்துரையால் நிகழ்ந்ததாக நம்பப்படுவதும் இதற்கு ஒரு காரணம்.[4] முன்பேப்போது இல்லாதவகையின் கன்னிமரியாவினைக்குறித்த பக்தி 17ஆம் நூற்றாண்டில் பரவத்துவங்கியது.[5] பிரின்டிசி நகர லாரன்சு, ராபர்ட் பெல்லார்மின் மற்றும் பிரான்சிசு டி சேலசு ஆகியோரின் படைப்புகள் இதற்கு காரணிகளாகக் கருதப்படுகின்றது.

ஒப்புறவு அருட்சாதனத்தின் அவசியம் இக்காலத்தில் வலியுறுத்தப்பட்டது. அது தனிநபரின் ஆன்மா குறித்த நிகழ்வாகவும், திருச்சபையோடு மட்டும் அல்லாமல் கடவுளோடு ஒப்புறவாகும் கோணமும் முக்கியத்துவம் அளித்து எடுத்துக்காட்டப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Counter Reformation". Encyclopædia Britannica Online. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Allison Peers. "Introduction". Life of Theresa of Jesus. 
  3. "Ascent of Mount Carmel". John of the Cross. Image Books. 1958. 
  4. Otto Stegmüller: "Barock", In: Lexikon der Marienkunde, Regensburg 1967, 566
  5. A Roskovany, conceptu immacolata ex monumentis omnium seculrorum demonstrate III, Budapest 1873
  6. John Bossy, "The Social History of Confession in the Age of the Reformation," Transactions of the Royal Historical Society (1975) Vol. 25, pp 21-38. in JSTOR
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தோலிக்க_மறுமலர்ச்சி&oldid=2044401" இலிருந்து மீள்விக்கப்பட்டது