கண்டன் அமுதனார் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டன் அமுதனார்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
பிற பெயர்பெரிய பழுவேட்டரையர்
வகைகற்பனை கதாபாத்திரம் [பொன்னியின் செல்வன்]
தொழில்சோழ தனாதிகாரி (சுந்தர சோழர் காலம்)
குடும்பம்சிறிய பழுவேட்டரையர், நந்தினி
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு

பெரிய பழுவேட்டரையர் பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர். சோழ நாட்டுத் தனாதிகாரியாக சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் இருந்தவர். துறைமுகப்பட்டினங்களில் சுங்கத் திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகளை கண்காணிக்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார். வயது முதிர்ந்த காலத்தில் நந்தினி தேவியை திருமணம் செய்து கொண்டு தனது இளையராணியாக்கினார். இவ்வாறு பொன்னியின் செல்வனில் செல்வாக்கு மிகுந்த கதாபாத்தரமாக பெரிய பழுவேட்டரையர் வலம் வருகிறார்.

பழுவேட்டரையர்கள்[தொகு]

சரித்திரத்தில்[தொகு]

  • முத்தரையர் வம்சத்திலிருந்து தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர்.
  • இரு கால்களும் இழந்த விசயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர்.
  • ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிசேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர்.
  • ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ அபராசிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர்.
  • பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள்.
  • இராசாதித்தன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும் போது அவனை ஒரு பழுவேட்டரையர் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, "இராட்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார்.
  • அரிஞ்சய சோழருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்.

இவ்வாறு பொன்னியின் செல்வனில் பழுவேட்டரையர்களின் சிறப்பு எடுத்துரைக்கப்படுகிறது.

பொன்னியின் செல்வனில்[தொகு]

பழுவூரை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தவர்களை பழுவேட்டரையர்கள் என்று அழைக்கின்றார்கள். சுந்திர சோழரின் ஆட்சி காலத்தில் பழுவூர்ச் சகோதரர்கள் இருவர் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள். காலாந்தகக் கண்டர் சின்ன பழுவேட்டரையர் எனவும், கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் எனவும் வழங்கப்படுகிறார்கள்.

பெரிய பழுவேட்டரையர் இருபத்து நான்கு யுத்தகளங்களில் பங்கெடுத்து அறுபத்து நான்கு விழுப்புண்கள் பெற்ற வீரராகவும், நந்தினி எனும் இளம் பெண்ணை திருமணம் செய்து அவள் காதலுக்காக உருகுவதாகவும் கதாபாத்தரம் உருவாக்கப்பட்டுள்ளது. சோழப்பேரரசை சுந்திர சோழனுக்குப் பிறகு மதுராந்தகன் ஆள்வதற்காக சம்புவரையர் அரண்மனையில் ரகசிய கூட்டம் நடத்தினார். மதுராந்தகனை நாடெங்கும் நடந்த கூட்டங்களுக்கு ரகசியமாக அழைத்துச் சென்றார். சோழப்பேரரசின் சிற்றரசர்களுடன் நடந்த கூட்டங்களில் மதுராந்த தேவனுக்கு ஆதரவு திரட்டினார். ஆனால் பழுவூர் இளையராணியான நந்தினி தானே சோழப்பேரரசை ஆளவேண்டுமென ஆசை கொண்டாள். அதற்காகவே பெரிய பழுவேட்டரையரைத் திருமணம் செய்ததாக நாவல் கூறுகிறது. நந்தினியின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு இறுதியாக அவளை விரட்டிவிட்டு, தன்னுடைய கையினாலேயே மரணத்தினைத் தழுவுகிறார் பெரிய பழுவேட்டரையர்.

பெரிய பழுவேட்டரையர் பற்றி பிரபாகரன்[தொகு]

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் போரினால் காயமடைந்த புலிகளை பார்க்கும் போது "பொன்னியின் செல்வனில் வருகின்ற பெரிய பழுவேட்டரையருக்கு அறுபத்து நான்கு வீரத் தழும்புகள் உண்டு" என்று பெரிய பழுவேட்டரையரின் பெருமையை எடுத்துக் கூறி தைரியம் கொடுப்பார் என்கிறது விகடன் வாரஇதழ்.! [1]


நூல்கள்[தொகு]

பெரிய பழுவேட்டரையரை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

திரைப்படம்[தொகு]

மணிரத்னம் இயக்கத்தில் மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் 2022 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்திலூம், 2023 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். [2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]