மணிமேகலை (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிமேகலை
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
பெற்றோர் செங்கண்ணர் சம்புவரையர்
சகோதரன்(கள்) கந்தன் மாறன்
தகவல்
பிற பெயர்கடம்பூர் இளவரசி,
வகைவரலாற்று கதைமாந்தர்
பால்பெண்
குடும்பம்செங்கண்ணர் சம்புவரையர், கந்தன் மாறன்
குறிப்பிடத்தக்க பிறர்வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன்
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு
தோழர்(கள்)/தோழி(கள்) நந்தினி சந்திரமதி
கதாப்பாத்திரத்தின் தன்மை
திறன்(கள்) யாழ் இசைத்தல், பாடுதல்

மணிமேகலை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சிற்றரசர் செங்கண்ணர் சம்புவரையரின் மகள் ஆவாள்.[1] மேலும் வந்தியத்தேவனின் நண்பனான கந்தமாறனின் சகோதரியாகவும், வந்தியத்தேவனை நேசிப்பவளாகவும் வருகிறாள்.

கதாப்பாத்திரத்தின் இயல்பு[தொகு]

மணிமேகலை கடம்பூர் சம்புவரையர் சிற்றரசரின் மகள். சம்புவரையர் மாளிகையில் அவள் வைத்ததே சட்டமென இருக்கிறது. இவளுடைய சகோதரனான கந்த மாறன், தன்னுடைய நண்பன் வந்தியத்தேவனுக்கு மணிமேகலையைத் திருமணம் செய்விக்க எண்ணுகிறான். அதனால் அடிக்கடி வந்தியத்தேவனின் வீரத்தினை அவளிடம் கூறுகிறான். வெளியில் அதை வெறுப்பதாக நடித்தாலும், வந்தியத்தேவன் மீது மணிமேகலைக்குக் காதல் வருகிறது. மனதிலேயே வந்தியத்தேவனை மணந்து, இல்லறம் நடத்துகிறாள். தன் தோழிகளிடம் வந்தியத்தேவனின் வீர பராக்கரமங்களை எடுத்துரைக்கிறாள். தோழிகள் அனைவருக்கும் மணிமேகலை வந்தியத்தேவனைக் காதலிப்பது தெரிகிறது.

இடையே கந்தன் மாறனின் மனம் மாறுகிறது, வந்தியத்தேவன்தான் தன்னை பின்னாலிருந்து கத்தியில் குத்தியதாக எண்ணுகிறான். அதனால் சகோதரனின் மேல் இருந்த அன்பினால், மணிமேகலைக்கு வந்தியத்தேவனை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை. எனினும் வந்தியத்தேவனின் மீதான காதலையும் விடமுடியாமல் தவிக்கிறாள். கந்தன் மாறனும், சம்புவரையரும் மதுராந்தகத் தேவனுக்கு மணிமேகலையை மணம் செய்துவைக்க எண்ணுகிறார்கள். சுந்தர சோழருக்கு அடுத்து மன்னராகப் போவது மதுராந்த தேவன் என்றும், அதனால் அவனை திருமணம் செய்தால் மணிமேகலை பட்டத்து ராணியாக ஆகும் வாய்ப்பு உள்ளதெனவும் கூறி வற்புறுத்துகிறார்கள். மணிமேகலை வந்தியத் தேவனை நினைத்தவண்ணம் இருப்பதால், வந்தியத்தேனை ஏதுமற்ற அநாதை என்று கந்தன் மாறன் சாடுகிறான். அவனுடைய சாடல் மணிமேகலைக்கு வருத்தத்தினை அளிக்கிறது.

சம்புவரையர் மாளிகையில் விருந்தினராக வரும் நந்தினியுடன் மணிமேகலை நட்பு கொள்கிறாள். பெண்ணாக இருந்தாலும் நந்தினியை திருமணம் செய்து இல்லறம் நடத்த கூட தான் தயார் என்று கூறுகிறாள். அதனை மறுத்த நந்தினி மணிமேகலை விரும்புவது வந்தியத்தேவனை என்பதை அறிந்து அவனையே திருமணம் செய்துகொள் என்கிறாள். அதற்கு தடையாக தன்னுடைய தகப்பனாரும், தமயனும் இருப்பதை பற்றி நந்தினியிடம் எடுத்துரைக்கின்றாள் மணிமேகலை. மாளிகைக்கு தான் வந்ததே, ஆதித்த கரிகாலனை மணிமேகலைக்கு திருமணம் செய்விக்கவே என்று நந்தினி கூறினாலும், மணிமேகலைக்கு நந்தினியின் மீது பற்று அதிகமாகிறது. இருவரும் இணைந்து நீராட செல்கின்றார்கள். அங்கு அடிப்பட்ட புலி அவர்களை தாக்க வரும்போது, கரிகாலனும், வந்தியத்தேவனும் அவர்களை காக்கின்றார்கள். பொழுது போவதற்காக மணிமேகலை யாழ் இசைத்து பாடல் பாடுகிறாள். ஆதித்த கரிகாலன் கேட்டுக்கொண்டதற்கினங்க காதல்பாடல்களை பாடும் மணிமேகலை, வந்தியத்தேவனையே பார்த்துக் கொண்டே பாடுகிறாள்.

வந்தியத்தேவனுக்கு ஆபத்து என்று நந்தினி கூறியதை உண்மையென நம்பி சம்புவரையர் மாளிகையிலிருந்து அவனை தப்புவிக்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால் வந்தியத்தேவன் வேட்டை மண்டபத்தில் ஒளிந்திருக்கும் பாண்டிய ஆபத்துதவிகளை காண செல்கிறான். அவனை காப்பாற்றும் பொருட்டு மணிமேகலையும் உடன் செல்கிறாள். ஆதித்த கரிகாலனை நந்தினி உள்ளிட்ட ஆபத்துதவிகள் கொன்றுவிடுகின்றார்கள். அங்கே இருந்த வந்தியத்தேவனை கந்தன் மாறனும், சம்புவரையும் கொலையாளியாக நினைக்கின்றார்கள். அவனை காப்பாற்ற தானே ஆதித்தனை கொன்றதாக கூறுகிறார் மணிமேகலை.

வந்தியத்தேவனை தஞ்சை சிறையில் அடைத்ததும், அங்கே வந்து குந்தவையிடம் தான் ஆதித்தனை கொன்றதாக கூறுகிறார். அத்துடன் ஆதித்த கரிகாலன் தனக்கு எழுதிய ஓலையை கொடுக்கிறாள். அதில் வந்தியத்தேவன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்பதை ஆதித்த கரிகாலனே குறிப்பிட்டுள்ளார். இவர்கள் சென்று மீட்பதற்குள் வந்தியத்தேவன் தப்பித்துவிடுகிறான். அவனை தொடர்ந்து சென்ற கந்தன் மாறன் மதுராந்தகன் மேல் வேலை பாய்த்துவிட்டு, வந்தியத்தேவனை கொன்றுவிட்டதாக மணிமேகலையிடம் கூறுகிறான். அதைக் கேட்டு கோபம் கொண்ட மணிமேகலை தன்னுடைய கத்தியை எடுத்து கந்தன்மாறனை கொலைசெய்ய முற்படுகிறாள். வந்தியத்தேவனையை கந்தன் மாறன் கொன்றுவிட்டதாகவும், அதனால் தான் கந்தன் மாறனை கொன்றுவிட்டதாகவும், இருவரும் இறந்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்கின்றாள். வந்தியத்தேவன் நேரில் நின்ற போதிலும் அவனையும் அடையளம் காணாமமுடியாத பிச்சியாகிவிடுகிறாள்.

அவளை தான் வளர்ப்பதாக கூறி செம்பியன் மாதேவி கோவில்களுக்கு அழைத்து செல்கிறாள். ஆனால் சம்புவரையர் தன்னுடைய மகன் கந்தன் மாறன் காவலுக்கு சென்றுவிடுவதால், மகளுடனாவது இருக்கிறேன் என்று கூறி மணிமேகலை அழைத்துக் கொண்டு செல்கிறார். வழியில் இரவு தங்குமிடத்திலிருந்து மணிமேகலை காணாமல் போகிறாள். நெடுநாட்கள் தேடியும் கிடைக்காமல் இருக்கும் மணிமேகலை கிடைத்துவிட்டதாகவும், அவளை இறுதிமுறையாக வந்தியத்தேவன் சந்திக்கவேண்டும் என்றும் கந்தன் மாறன் ஓலை அனுப்புகிறான். மணிமேகலையை காண வந்தியத்தேவன் பயணப்படுவதோடு கதை முடிகிறது.

நூல்கள்[தொகு]

மணிமேகலையை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிமேகலை_(கதைமாந்தர்)&oldid=3707648" இலிருந்து மீள்விக்கப்பட்டது